வரலாறு காணாத நஷ்டத்தில் வோடபோன், ஏர்டெல்: அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?
வோடபோன், ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய தொலைத் தொடர்பு கொள்கையின்படி தங்களது வருவாயில் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இந்த நிலையில் வருவாய் குறைத்து காட்டியது தொடர்பான வழக்கில் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 92 ஆயிரத்து 641 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என கடந்த மாதம் 24 ஆம் தேதி உத்தரவிட்டது.

கடும் நஷ்டத்தை சந்தித்த நிறுவனம்
இதனால் வோடபோன், ஐடியா கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் மட்டும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.50 ஆயிரத்து 922 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது. அண்மைக் காலக்கட்டத்தில் எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு நஷ்டத்தை சந்தித்தது இல்லை. இந்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் நேற்று ஒரே நாளில் 20% அளிவிற்கு அந்த நிறுவனம் இழப்பை சந்தித்துள்ளது.

வோடபோன் நிறுவனம் வலியுறுத்தல்
முதன்மை தொகை, வட்டி, அபராதத் தொகை, அபராதம் மீதான வட்டி என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை கட்டுவதற்கு 3 மாதங்கள் அவகாசம் கொடுத்துள்ளது. மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்த வேண்டும் எனவும் இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான எதிர்காலம் மிகவும் மோசமாக உள்ளது எனவும் வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை சந்திக்காத அளவிற்கு நஷ்டம்- ஏர்டெல்
அதேபோல் ஏர்டெல் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டாம் காலாண்டில் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடும் நெருக்கடி சந்தித்து வருவதாக ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. இதில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக வோடபோன், ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications