அவசரப்பட்டியே குமாரு.. ஜியோவின் மாஸ்டர் பிளான்.. 2ஜி, 3ஜி சேவைகளை நிறுத்த அரசிடம் வேண்டுகோள்.. எதிர்க்கும் VI
தற்போது இந்தியா முழுவதும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கிவிட்டன. குறிப்பாக இந்நிறுவனங்களின் 5ஜி சேவைகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேசமயம் வோடபோன் ஐடியா நிறுவனம் இன்றும் ஆறு மாதங்களில் 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது 4ஜி சேவை இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் ஜியோ (Jio) நிறுவனம் 2ஜி மற்றும் 3ஜி தொலைத்தொடர்பு சேவைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை ஜியோ நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் 2ஜி மற்றும் 3ஜி தொலைத்தொடர்பு சேவைகளை முடிவுக்கு கொண்டுவரும் ஜியோவின் யோசனைக்கு வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதாவது 4ஜி மற்றும் 5ஜி என இந்தியாவின் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் அடுத்த கட்டத் தலைமுறை சேவைகளுக்கு நகர்ந்திருக்கையில், வரவேற்பு இல்லாத 2ஜி மற்றும் 3ஜி சேவை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஜியோ நிறுவனம் கூறுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வோடபோன் நிறுவனம் கூறுவது என்னவென்றால், 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை நிறுத்துவது, அவை இன்னும் வழக்கில் இருக்கும் கிராமப்புற எளிய வாடிக்கையாளர்களைப் பாதிக்கும். மேலும் வணிக அடிப்படையில், பிஓஎஸ் இயந்திரங்கள் மற்றும் ஏடிஎம் சேவைகளையும் இந்த ஏற்பாடு பாதிக்கச் செய்யும் என்று பல காரணங்களை அடுக்குகிறது வோடாபோன் நிறுவனம்.

ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்புத் துறையில் 4ஜி என்ற அதிவேக இணையதள சேவையுடன் தான் நுழைந்தது. அதுவரை 2ஜி மற்றும் 3ஜி சேவைகள் மட்டுமே இருந்தன. இப்போது தனது வணிகத்துடன் சற்றும் தொடர்பில்லாத 2ஜி மற்றும் 3ஜி சேவையை முடிவுக்குகொண்டுவர, அதாவது அந்த 2ஜி, 3ஜி வாடிக்கையாளர்களைத் தனது 4ஜி அல்லது 5ஜிக்கு கொண்டுவருவதற்கு ஜியோ நிறுவனம் விரும்புகிறது.
அதேசமயம் ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக இருக்கும் ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா நிறுவனங்கள் இன்றும் 4ஜிக்கு முந்தைய தலைமுறை சேவைகளையும், அவற்றைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களையும் தக்க வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வோடபோன் நிறுவனம் 4ஜிக்கு முந்தைய சேவையைப் பயன்படுத்தும் தனது பிரத்யே வாடிக்கையாளர்களை இழக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த 2ஜி மற்றும் 3ஜி தொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழங்குமுறை ஆணையம் இன்னமும் இறுதி முடிவினை எடுக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் 4ஜிக்கு முந்தைய சேவைகளைத் தொடர்ந்து அதிகம் பயன்படுத்தும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இந்த விவகாரத்தில் இன்னமும் வாய் திறக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் இன்றும் 6 மாதங்களில் தனது 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் எனக் கூறியுள்ளது. தற்போது இந்நிறுவனம் மும்பை, புனே, டெல்லி போன்ற பகுதிகளில் 5ஜி நெட்வொர்க்கை சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக வோடபோன் நிறுவனத்தின் 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications