பூமியிலிருந்து கொசுக்களை விரட்டியடிக்க கூகுள் நிறுவனம் அதிரடித் திட்டம்!
சிக்குன்குனியா, டெங்கு, ஜிகா போன்று மனித உயிரைக் கொல்லும் காய்ச்சல் வைரஸ்களைப் பரப்பும் கொசுக்களை இந்த பூமியை விட்டே துரத்தியடிப்பதுதான் அந்தத் திட்டம்.
கூகுள் போன்ற பல நிறுவனங்களுக்குத் தாய் நிறுவனமாக இருப்பது ஆல்பாபெட் (Alphabet) என்னும் நிறுவனமாகும். இந்நிறுவனம் தற்போது மிக முக்கியமான ஆராய்ச்சிப் பணி ஒன்றினை மேற்கொண்டுள்ளது. சிக்குன்குனியா, டெங்கு, ஜிகா போன்று மனித உயிரைக் கொல்லும் காய்ச்சல் வைரஸ்களைப் பரப்பும் கொசுக்களை இந்த பூமியை விட்டே துரத்தியடிப்பதுதான் அந்தத் திட்டம். இதெல்லாம் நடக்கிற காரியமா? என யோசிக்கத் தோன்றுகிறதா? ஆனால் கூகுளின் தலைமை நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனம் பக்காவான திட்டத்தோடு களத்தில் இறங்கியுள்ளது.

இந்நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள ஃபிரெஸ்னோ கவுண்டி (Fresno County) நகரத்தில் கொசுவால் பரவும் நோய்களை முற்றிலுமாக அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வெரிலி லைஃப் சைன்ஸ்(Verily Life Sciences) என்னும் நிறுவனம் ஆல்பாபெட் நிறுவனத்திற்காக இந்தத் திட்டப் பணியை மேற்கொள்கிறது.
ஏடிஸ் எகிப்டி என்னும் வகையைச் (Aedes aegypti mosquitoes) சேர்ந்த ஆயிரக் கணக்கான ஆண் கொசுக்களின் உடம்பில் வுல்பாசியா (Wolbachia) என்னும் பாக்டீரியா செலுத்தப்படும். பின்னர் இந்தக் கொசுக்கள் பொது வெளியில் பறக்கவிடப்படும். இவ்வாறு பாக்டீரியா உட்செலுத்தப்பட்டு பறக்கவிடப்பட்ட ஆண் கொசுக்கள் பெண் கொசுக்களோடு இணையும்.

பெண் கொசுக்களோடு இணையும் ஆண் கொசுக்கள் தன் உடம்பில் இருக்கும் பாக்டீரியாவை பெண் கொசுவுக்குள் கடத்தும். இவ்வாறு பாக்டீரியாவை உள்வாங்கிய கொசுக்கள் முடையிடும் பொழுது. அந்த முட்டைகள் குஞ்சுகளை பொரிக்கும் திறனை இழந்துவிடும். இதனால் கொசுக்களின் இனப் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும். இது தான் வெரிலி லைஃப் சைன்ஸ் நிறுவனத்தின் திட்டம்.
“ஆய்வகத்தில் பாக்டீரியா உட்செலுத்தப்பட்ட 80,000 ஆண் கொசுக்களைப் பொதுவெளியில் பறக்க விட்டோம். அவை பெண் கொசுக்களோடு இணைந்தன. பெண் கொசுக்கள் வெளியிட்ட முட்டைகளில் ஒன்றுகூட கொசுக்களை உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றிருக்கவில்லை” என வெர்லி ஆய்வக நிறுவனத்தின் மூத்த ஆய்வியல் அறிஞர், ஜேகப் கிராஃபோர்டு (Jacob Crawford) தெரிவிக்கிறார்.
ஏடிஸ் எகிப்டி என்னும் (Aedes aegypti mosquitoes) கொசு இனம் ஆப்பிரிக்காவைப் பூர்விகமாகக் கொண்டது. ஆனால் தற்போது இந்தியா உட்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த கொசு இனம் பரவியுள்ளது. “கோடிக் கணக்கான உயிரினங்கள் வாழ்கின்ற இந்தச் புவிச் சூழல் அமைப்பில் (ecosystem) கொசு இனத்தால் எந்தப் பயனும் இல்லை. இருந்தாலும் கொசுக்களை முற்றிலுமாக அழித்து விட்டால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்து உறுதியாக எதனையும் சொல்ல முடியாது” என்கின்றனர் அறிஞர்கள்.

இதனைப் போன்றதொரு ஆய்வுத் திட்டம், ஆஸ்திரேலியாவில் உள்ள வடக்கு கியூன்ஸ்லேண்ட் பகுதியில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டது. ஆய்வகத்திலிருந்து வெளியே விடப்பட்ட கொசுக்களால் அப் பகுதியில் கொசுக்களின் இனப் பெருக்கம் 80 சதவிகிதம் அளவுக்குக் குறைந்ததாகக் கண்டறியப்பட்டது.


Click it and Unblock the Notifications








