சனி நிலவில் தட்டான்.. உயிர் அடையாளங்களை தேட NASA புது முயற்சி.. விரைவில் பறக்கும் டிராகன்ஃப்ளை திட்டம்..
நமது சூரியக் குடும்பத்தில் பூமிக்கு (Earth) நிகரான வானிலை மற்றும் திரவம் இருக்கும் ஒரே உலகமாக சனி (Saturn) கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டன் (Moon Titan) பார்க்கப்படுகிறது. இங்கு உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க நாசா (NASA) திட்டமிட்டுள்ளது.
ஆம், பூமி போன்ற வானிலை மற்றும் திரவ அமைப்பு சனி கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டானில் காணப்பட்டுள்ளது. சனி கிரகம் மொத்தம் 146 நிலவுகளை (146 moons in Satrun) கொண்டுள்ளது. நமது சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளை கொண்ட ஒரே கிரகமாக சனி கிரகம் பார்க்கப்படுகிறது. இந்த 146 நிலவுகளில் ஒரே ஒரு நிலவில் மட்டும் பூமி போன்ற வானிலை மற்றும் திரவ ஆதாரம் இருப்பதாக நாசா கூறுகிறது.

நாசாவின் டிராகன்ஃபிளை திட்டம் (NASA's Dragonfly Mission):
பூமியில் உயிர்கள் தோன்ற மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது திரவ ஆதாரம் மற்றும் உயிர்கள் உருவாக தேவையான சரியான அளவு வானிலை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நெருக்கமான அமைப்பு, டைட்டன் நிலவில் மட்டுமே காணப்படுவதனால், அதை ஆராய்ச்சி செய்ய நாசா முடிவெடுத்துள்ளது. இதற்காக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் "டிராகன்ஃப்ளை திட்டம்" (NASA's Dragonfly Mission) என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த திட்டம், சனிக்கோளின் மிகப்பெரிய சந்திரனான டைட்டனை சுற்றி தட்டான் போன்ற ட்ரோன் ஏரோ கிராஃப்ட் பறக்கும் கருவியை (Drone like aerocraft device) அனுப்ப முடிவு செய்துள்ளது. இது தட்டானை (dragonfly) போன்றது. இந்த தட்டான் போன்ற பறக்கும் சாதனம் டைட்டன் நிலவை சுற்றி ஆதாரங்களை சேகரிக்கும். இது செவ்வாய் கிரகத்தில் பறக்கவிடப்பட்ட மார்ஸ் ஹெலிகாப்டர் (Mars helicopter) போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டிராகன்ஃபிளை திட்டம் 3.35 பில்லியன் டாலர் செலவில் ஜூலை 2028 இல் தொடங்கப்படும் என்று நாசா உறுதிப்படுத்தியுள்ளது. பூமியைத் தவிர சூரியக் குடும்பத்தில் திரவம் உள்ள ஒரே உலகம் டைட்டன் மட்டுமே. அதன் மேற்பரப்பில் சரியான வானிலை மற்றும் திரவம் உள்ளது. இந்த நிலவில் பூமி போன்ற வளிமண்டலம், மழை, ஏரிகள், பெருங்கடல்கள், கரையோரங்கள், பள்ளத்தாக்குகள், மலை முகடுகள், குன்றுகள் மற்றும் உயிர்களின் கட்டுமானத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

சனி நிலவில் உயிர் ஆதாரங்களை தேடும் நாசா:
இது ஒரு வித்தியாசமான வேதியியலின் அடிப்படையில் இயங்குவதாக கூறப்படுகிறது. திரவ ஹைட்ரோகார்பன்களைப் (liquid hydrocarbons) பயன்படுத்தக்கூடிய இரசாயன உயிர் கையொப்பங்கள் மற்றும் நீர் சார்ந்த உயிர்களின் கடந்த கால தடயங்கள் மற்றும் நிகழ்கால தடயங்களை நாசா இந்த திட்டத்தின் மூலம் கண்டறிய பார்க்கிறது. அதேபோல், டைட்டன் நிலவில் செயலில் உள்ள மீத்தேன் சுழற்சியை (active methane cycle) ஆராய திட்டமிடுகிறது.
டைட்டன் நிலவின் வளிமண்டலத்திலும் மேற்பரப்பிலும் உள்ள ப்ரீபயாடிக் வேதியியலை ஆராய நாசா முடிவு செய்துள்ளது. இதை வைத்து உயிர் அடையாளங்களை நாசா தேடப் பார்க்கிறது. இருப்பினும், டைட்டன் நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு முற்றிலும் மாறுபட்ட சூழலை கொண்டுள்ளது. டைட்டனில் அடர்த்தியான வளிமண்டலம் உள்ளது. இது டிராகன்ஃபிளையின் மிதவையை எளிதாக்கும். டைட்டனின் ஈர்ப்பு விசை பூமியை விட குறைவாக இருக்கிறது. பூமியின் 14% ஈர்ப்பு (gravity) மட்டுமே இங்கு காணப்படுகிறது.
அதேபோல், பூமி பெறும் சூரிய ஒளியில் 1% மட்டுமே டைட்டானில் பார்க்கப்படுகிறது. இந்த நிலவின் வளிமண்டலத்தில் 98% நைட்ரஜன் மற்றும் 2% மீத்தேன் உள்ளது. அதன் கடல்கள் மற்றும் ஏரிகள் பூமியில் உள்ள நீர் போல் அல்ல, ஆனால் திரவ ஈத்தேன் மற்றும் மீத்தேன் மூலம் நிரப்பப்பட்டுள்ளது. 2034 இல் டைட்டனை அடையும் வகையில், டிராகன்ஃபிளை பணியானது நடைபெறும் என்று நாசா தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கான பணிகளை நாசா வரும் 2028 ஆம் ஆண்டில் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பணியின் போது, ராட்சத நிலவின் ப்ரீபயாடிக் வேதியியலின் மாதிரிகளை எடுக்க ஒவ்வொரு டைட்டன் நாளிலும் (16 பூமி நாட்கள்) ஒரு ரோட்டோகிராஃப்ட் ஒரு புதிய இடத்திற்கு பறந்து ஆராய்ச்சியை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications