பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் எல்லாருக்கும் வருது 3 புதிய ரூல்ஸ்.. பணம் அனுப்ப RBI-ன் புதிய சக்கர வியூகம்!
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் டிஜிட்டல் வழியிலான பணப்பரிவர்த்தனைகள் (Digital Payments) பெருமளவில் அதிகரித்து உள்ளன. ஆர்பிஐ (RBI) என்கிற இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) கூற்றுப்படி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 38 மடங்கு அதிகரித்து உள்ளது.
அதே நேரத்தில், இந்த பணப்பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு மூன்று மடங்கிற்கும் மேலாக உயர்ந்து உள்ளது. ஒரு விரைவான ஸ்கேன் (Quick Scan) மூலம் பணத்தை அனுப்புவது முன்பை விட இப்போது எளிதாகிவிட்ட மறுகையில், மோசடிக்காரர்களால் பொது மக்களின் பணம் திருடப்படுவதும் மிகவும் எளிதாகிவிட்டது.

என்சிஆர்பி (NCRP) என்கிற தேசிய சைபர் குற்ற புகாரளிப்பு இணையதளத்தின் (National Cyber Crime Reporting Portal) தரவுகளின் படி, கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 28 லட்சம் மோசடிகள் பதிவாகி உள்ளன. இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால் - இந்த மோசடிகளின் மொத்த மதிப்பு ரூ.22,931 கோடியாக உயர்ந்து உள்ளது.
இதை எதிர்கொள்ளும் விதமாக, இந்திய ரிசர்வ் வங்கி ஆனது "மோசடியை கட்டுப்படுத்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆராய்தல்" என்ற தலைப்பில் ஒரு புதிய கலந்துரையாடல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் அதிகம் பேசப்படும் ஒரு யோசனை, உங்கள் அக்கவுண்ட்டை உடனடியாக முடக்க அனுமதிக்கும் ஒரு பொதுவான கில் ஸ்விட்ச் (Kill switch) ஆகும்.
மேலும், ஒரு தவறு ஏற்படுவதற்கு முன்பு அதை தடுக்க உங்களுக்கு நேரம் கொடுப்பதற்காக, சில பெரிய தொகை பரிமாற்றங்களுக்கு ஒரு மணி நேர வேக வரம்பை விதிக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி விரும்புகிறது. இதோடு சேர்த்து டிஜிட்டல் வழியிலான பணப்பரிவர்த்தனையில் 3 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதென்ன மாற்றங்கள்? இதோ விவரங்கள்:
கில் ஸ்விட்ச்: ஆர்பிஐ பரிந்துரைக்கும் "கில் சுவிட்ச்" ஆனது ஒரு தனிநபரின் முழுமையான டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகளுக்கும் ஒரு விரிவான அவசரகால தடையாக செயல்படும். தற்போது, ஒரு பயனர் பாதுகாப்பு மீறல் நடப்பதாக சந்தேகித்தால், தனித்தனி கார்டுகள் மற்றும் யுபிஐ அட்ரெஸ்களை முடக்க, அவர்கள் பல வகையான ஆப்களையோ அல்லது கஸ்டமர் கேர் மையங்களையோ அணுக வேண்டியுள்ளது.
ஆனால் ஆர்பிஐ-யின் இந்த புதிய முன்மொழிவு, இந்த கட்டுப்பாட்டை அக்கவுண்ட் லெவலுக்கு (Account Level) மாற்றுகிறது. ஒரே ஒரு ஆப்பின் மூலம், ஒரு வாடிக்கையாளர் தனது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஒவ்வொரு டிஜிட்டல் சேனலையும் முடக்க முடியும். இதில் யுபிஐ (UPI) என்கிற ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம், மொபைல் பேங்கிங் ஆப்கள் மற்றும் இண்டர்நெட் பேங்கிங் சேவைகள் ஆகியவைகளும் அடங்கும்.
இந்த மாற்றம், பயனரின் முந்தைய அமைப்புகள் அனைத்தையும் மீறி செயல்படும். இந்த அமைப்பு செயல்படுத்தப்படும்போது, வெளியே செல்லும் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் நிறுத்தப்படும். மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவரை மிரட்டி இந்த பாதுகாப்பை மீற செய்யாமல் இருப்பதை உறுதிசெய்ய, அக்கவுண்ட்டை மீண்டும் செயல்படுத்தும் செயல்முறை தீவிரமாக இருக்கும். மீண்டும் அக்கவுண்ட்டை செயல்படுத்தும் செயல்முறையில், அதிநவீன மல்டி-பேக்டர் ஆத்தென்ட்டிகேஷன் அல்லது வங்கி கிளைக்கு நேரில் செல்வது ஆகியவைகள் அடங்கும்.
ரூ.10000 க்கு மேல் 1 மணிநேரம்: ஆர்பிஐ ஆனது ரூ.10000 க்கு மேற்பட்ட தனிநபர் (பி2பி) பரிமாற்றங்களுக்கு "ஒரு கட்டமைப்பு தாமதத்தை" (Structural delay) பரிந்துரைக்கிறது. யுபிஐ, ஐஎம்பிஎஸ் (IMPS), என்இஎப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்த அமைப்பின் கீழ் ஒரு மணி நேரக் காத்திருப்பு நேரம் இருக்கும்.
இந்த செயல்பாட்டில், பணம் செலுத்துபவரின் வங்கி உடனடியாக பணத்தைப் பிடித்தம் செய்துவிடும், ஆனால் பணம் பெறுபவரால் அடுத்த 60 நிமிடங்களுக்கு அந்த பணத்தை அணுக முடியாது. இந்த "காத்திருப்பு" காலம், மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு தவறை அடையாளம் கண்டு, நிதி நிரந்தரமாக பரிமாற்றப்படுவதற்கு முன்பு பணப்பரிமாற்றத்தை ரத்து செய்வதற்கான ஒரு வாய்ப்பாக அமைகிறது.
மேலும், ஒரு வங்கியின் பாதுகாப்பு வழிமுறைகள் ஒரு குறிப்பிட்ட பயனருக்கு ஒரு பரிவர்த்தனையை அசாதாரணமானது என்று குறித்தால், அந்த வங்கி கூடுதல் மறுஉறுதிப்படுத்தலை கோர வேண்டும். அந்த பணம் ஏன் சந்தேகத்திற்குரியது என்பதற்கான காரணம் குறித்த சில தகவல்களை அந்த நிறுவனம் வழங்க வேண்டும் மற்றும் ஒரு தெளிவான எச்சரிக்கையையும் கொண்டிருக்க வேண்டும்.
வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு, பயனர்கள் "ஒயிட்லிஸ்டிங் மெக்கானிசம்" (Whitelisting Mechanism) என்ற முறையை பயன்படுத்தலாம், இதில் பரிவர்த்தனையை நிறுத்தும் வசதி இருக்காது. முன்னரே சரிபார்க்கப்பட்ட, நம்பகமான தொடர்புகளுக்கு செய்யப்படும் பேமண்ட்களுக்கு இந்த ஒரு மணி நேரத் தாமதம் பொருந்தாது.
மூத்த குடிமக்களுக்கான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட அபாயங்களை கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி 'நம்பகமான நபர்' அங்கீகார மாதிரியை (trusted person" authentication model) பரிந்துரைத்துள்ளது. இதில் பயனர்கள் ரூ. 50,000-க்கு மேற்பட்ட எந்தவொரு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் இணை-அங்கீகரிப்பாளராக செயல்பட இரண்டாவது நபரை நியமிக்கலாம்.
இந்த நிலையில், அக்கவுண்ட் வைத்திருப்பவர் மற்றும் நம்பகமான காண்டாக்ட் நபர் ஆகிய இருவரும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே பரிவர்த்தனை இறுதி செய்யப்படும். மோசடிக்காரர்கள் இந்த அமைப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்க, நியமிக்கப்பட்ட நம்பகமான நபரை மாற்றுவதற்கான எந்தவொரு கோரிக்கையும் 24 மணி நேர அவகாசத்தை கோர வேண்டும். இது, மோசடி குறித்த அதிக அழுத்தமான சூழலிலிருந்து வெளியேறி, பயனர்கள் அந்த மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய நேரம் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








