இனி அரசாங்க சான்றிதழ்களை வாங்குவதில் கிடுக்கிபிடி; இந்திய அரசு அதிரடி!
யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( (Unique Identification Authority of India) ஆனது இந்திய மக்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பு அரசாங்க சான்றிதழ்கள், அரசாங்க மானியங்கள், நன்மைகள் மற்றும் சலுகைகளுடன் தொடர்புடையதால், மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதை அறிவிப்பு என்று சொல்வதை "எச்சரிக்கை" என்றே கூறலாம்!
யுஐடிஏஐ வெளியிட்டுள்ள சமீபத்திய சுற்றறிக்கையின்படி, உங்களிடம் ஆதார் எண் அல்லது பதிவுச் சீட்டு (Enrolment slip) இல்லையென்றால், அரசாங்க மானியங்கள் மற்றும் பலன்களை பெற உங்களுக்கு உரிமை இருக்காது.
கடந்த வாரம் UIDAI வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது, அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கும் சென்றுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

அரசாங்கத்தின் "தகுதி சான்றிதழ்கள்" உங்களுக்கு வேண்டுமானால்?
ஆதார் எண் இல்லாமல் அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் சலுகைகளை பெறுபவர்களுக்கு ஆதார் விதிகளை கடுமையாக்கும் வகையில், கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
வெளியான சுற்றறிக்கையில், அரசின் திட்டங்களின் கீழ் அணுக கிடைக்கும் பலன்கள் / மானியங்கள் / சேவைகளை பெற ஒருவர் தகுதி உடையவரா என்பதை நிர்ணயிக்க பயன்படும் அரசின் தகுதி சான்றிதழ்கள் உங்களுக்கு வேண்டுமானால், உங்களிடம் ஆதார் எண் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படவில்லை என்றால்?
UIDAI-யின் சமீபத்திய சுற்றறிக்கையானது, "இவ்வாறு மேற்கூறிய பின்னணியில் மற்றும் சட்டத்தின் பிரிவு 7-ன் விதியை கருத்தில் கொண்டு... ஒரு தனிநபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படவில்லை என்றால், அவர் (ஆதார்) பதிவுக்காக விண்ணப்பிக்க வேண்டும், அதுவரையிலாக அந்த தனிநபரால், ஆதார் பதிவு அடையாள (EID) எண் / ஸ்லிப்பை கொண்டு அரசாங்கத்தின் நன்மைகள், மானியங்கள் மற்றும் சேவைகளை பெற முடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது மத்திய மற்றும் மாநில அரசு சேவைகள், சலுகைகள் மற்றும் மானியங்களை பெறுவதற்கு ஆதார் பதிவு அடையாள (EID) எண் அல்லது ஸ்லிப் கட்டாயம் தேவைப்படும் என்று அர்த்தம்.

99% பேருக்கு?
யுஐடிஏஐ-யின் இந்த சுற்றறிக்கையானது, தற்போது நாட்டில் உள்ள 99 சதவீதத்திற்கும் அதிகமான "வயது வந்தோருக்கு" (Adults) ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.
99 சதவீத "பெரியவர்கள்" ஆதார் அடையாளத்தை பெற்றுள்ளதால், அரசாங்கத்தின் ஏராளமான சேவைகள் மற்றும் பலன்கள் அவர்களுக்கு நேரடியாக சென்றடைகிறது என்றும் UIDAI -யின் சுற்றறிக்கை கூறுகிறது.

ஆதார் விர்ச்சுவல் ஐடி-ஐ பயன்படுத்தலாம்!
ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று UIDAI மேலும் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, அதில் அரசாங்க நிறுவனங்கள் Virtual Identifier-ஐ (VID) ஆப்ஷனல் ஆக மாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சில அரசு நிறுவனங்களுக்கு, தான் வழங்கும் சமூக நலத் திட்டங்களை சீராக செயல்படுத்துவதற்கு, பொதுமக்களின் ஆதார் எண்கள் தேவைப்படலாம். அத்தகைய அரசு நிறுவனங்களிடமும் கூட பயனாளிகள் தத்தம் ஆதார் எண்களை வழங்க வேண்டும்" என்றும் "குறிப்பிட்ட நிறுவனங்கள், விர்ச்சுவல் ஐடி-ஐ ஒரு விருப்பமாக மாற்ற வேண்டும்" என்றும் UIDAI தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








