திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
கூகுள் மேப் மூலம் தொலைந்து போன 2 பேர் உயிருடன் தப்பிப் பிழைத்த நிகழ்வு குறித்து தான் பார்க்கப்போகிறோம். தொழில்நுட்பம் மூலம் தொலைந்த இரண்டு பேரும் தொழில்நுட்பம் மூலமாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்பது இங்கே கவனிக்கத்தக்க ஒன்று.
எங்கு சென்றாலும் கூகுள் மேப்
கையில் மொபைல் இருந்தால் போதும் எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நம்பிக்கை கூகுள் மேப் விதைத்துள்ளது. புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை மட்டும் குறிப்பிட்டால் போதும் டிராஃபிக் இல்லாத வழி, ஷார்ட்கட் வழி, ஒருவழி பாதை என அனைத்தையும் கூகுள் மேப் காட்டிவிடும். இருப்பினும் மொபைலை மட்டுமே பார்த்துச் செல்லக் கூடாது, அந்த பாதையின் தன்மையையும் சிந்திக்க வேண்டும். அப்படி பார்க்காமல் கூகுள் மேப்பே கதி என்று சென்றால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் தான் இங்கு அரங்கேறி இருக்கிறது.

பெரிதளவு பயன்படும் கூகுள் மேப்
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பல கட்டம் முன்னேறி இருக்கிறது. இதில் கூகுள் மேப் என்ற பயன்பாடு பலருக்கும் பயன் உள்ளதாக இருக்கிறது. குறிப்பாக வாகன ஓட்டிகள், புது இடத்திற்கு செல்பவர்கள் என பலரும் இதன்மூலம் பலன் அடைகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே கூகுள் மேப் மூலம் பிழைகளும் ஏற்படுகிறது.
தொழில்நுட்பத்தின் பேரை காப்பாற்றிய ஆப்பிள்
கூகுள் மேப் மூலம் பனிக்கு நடுவில் திசை தெரியாமல் சிக்கிய இரண்டு பெண்கள் ஆப்பிள் எஸ்ஓஎஸ் அம்சத்தின் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். அதாவது முன்னதாகவே குறிப்பிட்டது போல் தொழில்நுட்ப பிழையால் பனியில் சிக்கிய 2 பெண்கள் அவசரகால எஸ்ஓஎஸ் என்ற மற்றொரு தொழில்நுட்பம் மூலமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஐபோன் 14 அவசரகால SOS
ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்படும் புது மாடல் ஐபோன்களில் புதுமைகள் புகுத்துவது ஐபோனின் வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 14 இல் ஆப்பிள் நிறுவனம் அவசரகால SOS என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சத்தின் மூலம் பலர் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக பலரின் உயிர் இந்த அம்சத்தின் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. அதன்படியான ஒரு நிகழ்வை தான் தற்போதும் பார்க்கப்போகிறோம்.
பனிக்கு நடுவில் சிக்கிய 2 பெண்கள்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ராப்சன் பள்ளத்தாக்கில் இரண்டு பெண்கள் சிக்கி உள்ளனர். என்ன செய்வது என்று அறியாத இரண்டு பெண்களில் ஒருவரிடம் ஐபோன் 14 இருந்துள்ளது. எனவே இதில் உள்ள அவசரகால எஸ்ஓஎஸ் அம்சத்தின் மூலம் எச்சரிக்கை எழுப்பி இருக்கின்றனர். இதன்மூலம் இரண்டு பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக மூடப்பட்ட சாலை
கனேடிய செய்தித்தாள் Times Colonist இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இரண்டு பெண்கள் கூகுள் மேப் மூலம் வழி பார்த்து சென்று கொண்டிருந்த போது அங்குள்ள முக்கிய சாலை விபத்து ஏற்பட்டதன் காரணமாக பிளாக் செய்யப்பட்டிருந்திருக்கிறது. இதையடுத்து அங்கிருந்து மாற்று வழியை தேர்ந்தெடுத்து பயணிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
கைக்கொடுத்த ஐபோன் 14
முக்கியச் சாலையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் சென்றிருக்கின்றனர். அது செல்போன் வரம்புக்கு வெளியே இருக்கும் பகுதியாக இருந்திருக்கிறது. பனிக்கு நடுவில் தாங்கள் எங்கே இருக்கிறோம், எந்த வழியில் செல்ல வேண்டும் என்று தெரியாமல் திணறி இருக்கின்றனர். பனியில் சிக்கி என்ன செய்வது என்று தெரியாத நிலையில் அந்த இரண்டு பெண்களின் ஒருவர் கையில் ஐபோன் 14 இருந்திருக்கிறது.
ஆப்பிள் அவசரகால SOS அம்சம்
இதையடுத்து ஐபோன் 14 இல் உள்ள எஸ்ஓஎஸ் அம்சத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். பனிக்கு நடுவில் சிக்கி இருந்த பெண்கள் இந்த அம்சத்தை இயக்கிய உடன் 911 என்ற அந்த பகுதியின் அவசரகால எண்ணுக்கு ஆப்பிள் அவசர சிக்னல் அனுப்பி இருக்கிறது. இதையடுத்து Robson Valley Search and Rescue குழுவினர் ஜிபிஎஸ் இருப்பிடத்தை பயன்படுத்தி அந்த பெண்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்திருக்கின்றனர்.

ஐபோன் செயற்கைக்கோள் தொடர்பு தான் காரணம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் எஸ்ஓஎஸ் மூலம் உயிர் காப்பாற்றப்பட்ட முதல் நிகழ்வு இதுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் எஸ்ஓஎஸ் மூலமான செயற்கைக்கோள் தொடர்பு கிடைக்காமல் இருந்திருந்தால் இரண்டு பேரையும் கண்டுபிடிப்பது சிரமமாகி இருக்கும் என மீட்புக் குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
SOS அம்சம் இந்தியாவில் செயல்படுமா?
அவசரகால செயற்கைக்கோள் தொடர்பு SOS அம்சமானது iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max ஆகியவற்றில் இருக்கிறது. இந்த அம்சம் ஐபோன் 14 தொடரில் இருந்தாலும் இந்தியாவில் வேலை செய்யாது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. தற்போது வரை அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மட்டும் இந்த சேவை செயல்படுகிறது. வரும் காலத்தில் இந்த அம்சம் இந்தியாவிலும் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








