ஆதாரை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைப்பது எப்படி? இதோ வழிமுறைகள்.!
கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் இந்த ஆண்டில் இருந்து வீடுகளுக்கு இலவச, மானிய விலை மின்சாரத்திற்கான
செலவு 5,572 கோடி ரூபாயாக அதிகரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சொந்த வீடு வைத்திருக்கும் பலர், வாடகைதாரர்களிடம் இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு, 10 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. எனவே இதனால் வாடகைதாரர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.

மின்சார சலுகை
இன்னும் சிலர் இலவச மின்சார சலுகையை பெற, ஒரே வீட்டிற்கு மூன்று, நான்கு மின் இணைப்புகளை பெற்றுள்ளனர். குறிப்பாக விதிகளை மீறி கூடுதல் தளங்களை எழுப்பி, ஒரே வீட்டிற்கு அதிக மின் இணைப்புகளை வாங்கியுள்ளனர். மேலும் இதன் மூலம் தமிழக அரசுக்கு, பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

ஆதார்
எனவே இதனை ஒழுங்கு படுத்த மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழக அரசு கடந்த அக்டோபர் 6-ம் தேதி பிறப்பித்த ஆணையில், ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணையும் இணைத்திருந்தால் தான் அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஆதார் எண் இணைப்பில் 2.36 கோடி வீட்டு பயனாளர்கள், 21 லட்ச விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நுகர்வோர்களும் கட்டாயமாக உள்ளடக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை ஆதார் இல்லாதவர்கள், புதிதாக ஆதாருக்கு விண்ணப்பித்த நகலுடன் பாஸ்புக், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை,பான் கார்ட், பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் வைத்து இலவச மற்றும் மானிய மின்சாரத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதாரை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைப்பது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம்
அதாவது மின்சார வாரியத்தின் இணையதளத்தில் விரைவில் மின் நுகர்வு எண்ணை ஆதார் உடன் இணைப்பதற்கான லிங்க் இன்னும் ஒரு வாரத்தில் வழங்கப்படும். அது வந்த பிறகு மின் நுகர்வு எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
அதன்பின்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும். அதனை பயன்படுத்தி மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்தும் போதும் கூட தங்களது மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியும்
என்று கூறப்படுகிறது.

காலக்கெடு இல்லை
தற்போது மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியிருந்தாலும், அதற்காகக் காலக்கெடு எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், மின்சாரத்தில் முறைகேடு செய்வதை தவிர்க்கும் வகையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்பது தான் உண்மை.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








