சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!
எல்லாமே சரியாக போய்க்கொண்டு இருப்பது போல் தெரிந்த, சீனாவின் (China) மிகப்பெரிய விண்வெளி திட்டமொன்று, செவ்வாய் (Mars) கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது போல் தெரிகிறது!
அதென்ன திட்டம்? எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருக்கும் போது திடீரென்று என்ன நடந்தது? இதுகுறித்து சீனா என்ன கூறியுள்ளது? இதோ விவரங்கள்:

சாதனையை தொடர்ந்து சோதனை!
அமெரிக்காவின் நாசா (NASA) மற்றும் இந்தியாவின் இஸ்ரோவை (ISRO) போலவே சீனாவும் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய விரும்பியது.
அதுமட்டுமின்றி, சீனா தனது முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தனது ரோவரை (Rover) தரையிறக்கி சரித்திரம் படைத்தது. அந்த சாதனையை தொடர்ந்து சீனாவிற்கு ஒரு பெரிய சோதனை வந்துள்ளது!

மே 2022 வரை.. எல்லாமே நல்லாத்தான் போச்சு!
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, கடந்த ஜூலை 2020-இல் டியான்வென் 1 (Tianwen 1) என்கிற விண்கலத்தை, சீனா விண்ணில் செலுத்தியது. அதனுள் ஜுரோங் (Zhurong) என்று பெயரிடப்பட்ட மார்ஸ் ரோவர் (Mars Rover) ஒன்றும் அடக்கம்.
சீனாவின் மார்ஸ் ரோவர் ஆன ஜுரோங் , கடந்த மே 2021-ல் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இப்படியாக, சீனாவின் டியான்வென் 1 விண்கலமும், மார்ஸ் ரோவரும் கடந்த மே 2022 வரை சுமூகமாகவே செயல்பட்டன.

அதன் பிறகு செவ்வாய் கிரகம், சீனாவிற்கு சூனியம் ஒன்றை வைத்தது!
மே 2022 க்கு பிறகு, செவ்வாய் கிரகத்தில் (அதாவது குறிப்பிட்ட சீனாவின் மார்ஸ் ரோவர் இருக்கும் பகுதியில்) "கடுமையான குளிர்காலம்" ஏற்பட்டுள்ளது.
அதில் இருந்து மார்ஸ் ரோவரை "காப்பாற்றுவதற்காக" சீன விண்வெளி ஆராய்ச்சி மையமான (China National Space Administration - CNSA) தனது ஜுராங் ரோவரை உறக்கநிலைக்கு (Hibernation) உட்படுத்தப்படுதியது.

வசந்த காலம் வந்ததும் எழுந்து இருக்க வேண்டும்!
கடந்த ஆண்டு மே 18 ஆம் தேதி முதல் உறக்கநிலையில் இருக்கும் சீனாவின் மார்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தின் வடக்கு அரைக்கோளத்தில் வசந்த காலம் வந்தவுடன், அதாவது 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் மீண்டும் சுறுசுறுப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஸ்பேஸ் நியூஸ் வழியாக வெளியான அறிக்கைகளின்படி, சீனாவின் மார்ஸ் ரோவர் எதிர்பார்த்தபடி உறக்கநிலையிலிருந்து வெளியேறவே இல்லை; மற்றும் பூமிக்கு எந்தவிதமான சமிக்ஞையையும் (Signal) அனுப்பவில்லை.

துவம்சம் செய்த தூசிப் புயல்?
பொதுவாகவே, செவ்வாய் கிரகத்தில் குளிர்காலம் நிலவும் போது அங்கே குறைந்த வெப்பநிலை நிலவும், மேலும் தூசி புயல்களும், மணல் புயல்களும் கூட ஏற்படும். அவைகளிடம் இருந்து தப்பிக்கவே, ஜுராங் ரோவர் உறக்கநிலைக்கு தள்ளப்பட்டது.
ஜுராங் ரோவருக்கு சோலார் பேனல்கள் (Solar Panels) வழியாகவே சக்தி (Power) கிடைக்கும். அந்த பேனல்கள் - தூசி புயல்கள் மற்றும் மணல் புயல்களை சமாளிக்கும்படியான ஒரு சிறப்பான தூசி எதிர்ப்பு பூச்சை (Special anti-dust coating) கொண்டுள்ளது.
இருந்தாலும் கூட அதில் ஏதோ தவறு நடந்துள்ளது போல் தெரிகிறது. செவ்வாய் கிரகத்தின் மணல் புயல்கள், ரோவரின் சோலார் பேனல்களை பாதித்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது!

சீனாவிற்கு இன்னொரு கெட்ட செய்தியும் உள்ளது!
செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜுராங் ரோவரின் செயலிழப்பு மட்டுமல்ல, சீனாவிற்கு இன்னொரு கெட்ட செய்தியும் உள்ளது!
அது என்னவென்றால் - ஜுராங் ரோவரை செவ்வாய் கிரகத்தில் "இறக்கிவிட்ட" டியான்வென் 1 ஆர்பிட்டரும் கூட "அமைதியாகி விட்டதாக" தகவல் வெளியாகி உள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வது மற்றும் அதை வரைபடமாக்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்த சீனாவின் மார்ஸ் ஆர்பிட்டர் (Mars Orbiter) ஆன டியான்வென் 1 விண்கலமும் கூட செயல் இழந்து விட்டதாக கூறப்படுகிறது.

இன்னும் வாயை திறக்காத சீனா!
டியான்வென் 1 ஆர்பிட்டரில் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் வழியாக சேகரிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளை பதிவிறக்கும்போது சீனாவின் தரை கட்டுப்பாடு நிலையம் சில சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிகிறது. ஆக அதுவும் கூட செயல் இழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஜுராங் ரோவரின் செயலிழப்பு மற்றும் தியான்வென் 1 விண்கலத்தின் சிக்கல் குறித்து சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமானது, இதுவரையிலாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
Photo Courtesy: China News Service, CNSA/PEC, Wikipedia, ESA


Click it and Unblock the Notifications








