கடலில் மூழ்கும் 100 பில்லியன் டாலர்கள்.. ஜகா வாங்கிய ரஷ்யா.. கதறும் அமெரிக்கா.. ISS பற்றிய 3 சீக்ரெட்ஸ்!
அமெரிக்கா ஏன் கதறி அழும்? ரஷ்யா எதில் ஜகா வாங்கியது? கடலுக்குள் ஏன் 100 பில்லியன் டாலர்கள் மூழ்கடிக்கப்பட உள்ளது? என்பதை பற்றி புரிந்துகொள்ள.. ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட 3 ஐஎஸ்எஸ் சீக்ரெட்களை (ISS Secrets) பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
அதாவது சர்வதேச விண்வெளி நிலையத்தை (International Space Station) பற்றிய 5 உண்மைகளை (Facts) நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதென்ன உண்மைகள்? வாருங்கள் ஒவ்வொன்றாக பார்க்கலாம்!

03. உண்மையான அளவும்.. செய்யப்பட்ட செலவும்!
ஐஎஸ்எஸ் (ISS) என்பது மனித இனத்தால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்புகளில் ஒன்றாகும்.
கடந்த 1998 இல் பல உலக நாடுகளின் கூட்டணியில் உருவான ஐஎஸ்எஸ்-ன் உண்மையான அளவு - ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் அளவு இருக்கும் மற்றும் இதன் எடை - ஒரு போயிங் 747 விமானம் முழுவதும் ஆட்களை ஏற்றினால் எப்படி இருக்குமோ.. அப்படி இருக்கும்!
சர்வதேச விண்வெளி நிலையமானது, ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் சராசரியாக 400 கிலோமீட்டர்கள் (250 மைல்கள்) என்கிற உயரத்தில் பூமியை சுற்றி வருகிறது.
இதற்காக செய்யப்பட்ட செலவு எவ்வளவு தெரியுமா? ஏறக்குறைய 100 பில்லியன் டாலர்கள் ஆகும். மற்றும் இதில் பெரும்பாலான தொகையை கொடுத்தது அமெரிக்கா தான்!

02. கூட்டு சேர்ந்த பரம எதிரிகள்!
மொத்தம் 15 உலக நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 விண்வெளி ஏஜென்சிகள் ஒன்று சேர்ந்தே ஐஎஸ்எஸ்-ஐ இயக்குகின்றன.
அதாவது அமெரிக்காவின் நாசா (NASA), ஐரோப்பாவின் இஎஸ்ஏ (ESA), கனடாவின் சிஎஸ்ஏ (CSA), ஜப்பானின் ஜெஏஎக்ஸ்ஏ (JAXA) மற்றும் ரஷ்யாவின் ராஸ்கோமோஸ் (Roscosmos) ஆகிய 5 விண்வெளி ஏஜென்சிகள் ஒன்றிணைந்தே ஐஎஸ்எஸ்-ஐ இயக்குகின்றன.
ஆம்! பரம எதிரிகளான அமெரிக்காவும், ரஷ்யாவும் ஐஎஸ்எஸ்-ல் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றன.

01. பசிபிக் பெருங்கடலில் மூழ்கடிக்கப்படும்!
பல பில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டு இருந்தாலும் கூட, எதிரும் புதிருமான அமெரிக்காவும் ரஷ்யாவும் கைகோர்த்து வேலை செய்தாலும் கூட.. கசப்பான உண்மை என்னவென்றால், சர்வதேச விண்வெளி நிலையமானது என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும்படி கட்டமைக்கப்படவில்லை.
ஏற்கனவே 24 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள ஐஎஸ்எஸ் ஆனது குறைந்தபட்சம் 2030 வரை பயன்படுத்தப்படலாம். 2030 ஆம் ஆண்டிற்கு பிறகு, ஐஎஸ்எஸ்-க்கு ஓய்வு கொடுக்கப்பட்டு,ஒருகட்டத்தில் அது பசிபிக் பெருங்கடலில் மூழ்கடிக்கப்படும். அந்த நேரத்தில் ஐஎஸ்எஸ்-க்காக பெரும்பாலான தொகையை செலவழித்த அமெரிக்க கதறி அழுதாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

சைக்கிள் கேப்புல எஸ்கேப் ஆன ரஷ்யா!
ஐஎஸ்எஸ் ஆனது பசிபிக் பெருங்கடலில் மூழ்கடிப்பதை பற்றி ரஷ்யா பெரிதும் கவலைப்படாது. ஏனென்றால், 2024 ஆம் ஆண்டுக்கு பிறகு தங்கள் சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க விரும்புவதாக ரஷ்யா கூறி உள்ளது.
ஆக 2030 ஆம் ஆண்டு வரையிலாக அமெரிக்காவும், ஐரோப்பியாவும் மட்டுமே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை தொடர்ந்து பயன்படுத்த உள்ளன.

கடுமையாக வேலை வாங்கப்படும் விண்வெளி வீரர்கள்!
ஐஎஸ்எஸ்-ல் உள்ள விண்வெளி வீரர்கள் எப்போதும் பிஸியாக இருக்கிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்குத் தொடங்குகிறது. தினமும் எட்டு முதல் பத்து மணிநேர அறிவியல் சோதனைகளை செய்வார்கள்.
பின்னர் மைக்ரோகிராவிட்டியில் ஏற்படும் தசை இழப்பை தவிர்க்க அவர்கள் இரண்டு மணிநேர உடல் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் வீட்டு வேலைகள், பழுது பார்க்கும் வேலைகளை செய்ய வேண்டும். இப்படியாக இரவு 10:30 மணிக்கு ஐஎஸ்எஸ்-ன் விளக்குகள் அணைக்கப்படும்!
PhotoCourtesy: NASA / ESA


Click it and Unblock the Notifications








