FASTag பயனர்கள் உஷார்! உடனே இதை செக் பண்ணுங்க - மத்திய அரசு அதிரடி உத்தரவு!
கொரோனா தோற்று காரணமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அரசாங்கத்தின் பல சேவைகளில் நிறைய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்பொழுது மத்திய அரசு டோல்கேட் விஷயத்தில் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பாஸ்ட்டேக் பயனர்களுக்குச் சிக்கலான விஷயமாக இருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

பாஸ்ட்டேக் (FASTag) கட்டாயம்
டிசம்பர் மாதம் இந்தியா முழுவதும் மின்னணு கட்டண வசூல் திட்டத்தைச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நடைமுறைப்படுத்தியது. இந்தியாவில் டோல்கேட் கட்டணம் செலுத்த அனைத்து வாகனங்களுக்கும் தற்போது பாஸ்ட்டேக் (FASTag) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின்னணு முறையில் சுங்கச்சாவடியின் கட்டணத்தைச் செலுத்தினால், டோல்கேட்களில் வாகனம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்பதால் பாஸ்ட்டேக் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டது.

பாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட காரணம்
குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நேரங்களில் டோல்கேட்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும். இந்த கூட்ட நெரிசலைத் தவிர்க்கவே பாஸ்ட்டேக் பயன்பாட்டிற்கு வந்தது, பாஸ்ட்டேக் பயன்படுத்தினால் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை அதேபோல், வாகன ஒட்டினர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதையும் தவிர்க்க முடியும். இதனால் நேரம் மிச்சமாகும்.

பாஸ்ட்டேக் மூலம் அதிக பாதுகாப்பு
கொரோனா தொற்றுநோய் பரவி வரும் காலத்தில் பாஸ்ட்டேக் மூலமாகக் காகித பணப்பரிமாற்றம் பெரிதும் குறைக்கப்படுகிறது. மின்னணு மூலம் கட்டணம் செலுத்தப்படுவதினால் சமூக இடைவெளியும் சரியாகப் பின்பற்றப் படுகிறது, அதேபோல் மக்களுக்கு இதனால் அதிக பாதுகாப்பு கிடைக்கிறது. இப்படி பாஸ்ட்டேக் மூலம் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாக இருக்க, மத்திய அரசு தற்பொழுது ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.

பாஸ்ட்டேக் ரீசார்ஜ்
ஆர்எஃப்ஐடி (Radio Frequency Identification - RFID) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பாஸ்ட்டேக் இயங்குகிறது. மொபைல் ரீசார்ஜ் போல் உங்கள் பாஸ்ட்டேக் அட்டையையும் நீங்கள் தேவைப்படும் நேரங்களில் ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். பாஸ்ட்டேக் உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து, நீங்கள் டோல்கேட்டை கடக்கும்போது கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும்.

பாஸ்ட்டேக் இல்லாமல் பாஸ்ட்டேக் லேனில் நுழைந்தால் அபராதம்
கடந்த மே மாத தொடக்கம் வரை நாடு முழுவதும் மொத்தம் சுமார் 1.68 கோடி பாஸ்ட்டேக் அட்டைகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தற்போது பாஸ்ட்டேக் கட்டாயம் செய்யப்பட்டிருந்தாலும் கூட, இன்னும் பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு தான் வருகிறது. பாஸ்ட்டேக் இல்லாமல் பாஸ்ட்டேக் லேனில் நுழையும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ்ட்டேக் உள்ளவர்களுக்கும் அபராதம்! ஆனால் ஒரு ட்விஸ்ட்
ஏற்கனவே பாஸ்ட்டேக் இல்லாதவர்களிடம் இந்த இரண்டு மடங்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தற்போது பாஸ்ட்டேக் வைத்துள்ளவர்களுக்கும் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதிரடியான அறிவிப்பு மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி செயல்படாத பாஸ்ட்டேக் அல்லது செல்லாத அட்டையுடன் பாஸ்ட்டேக் லேனில் நுழையும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் வகையைப் பொறுத்து அபராதம்
பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்கள் மற்றும் செல்லாத அல்லது செயல்படாத பாஸ்ட்டேக் அட்டை கொண்ட வாகனங்கள் இனி இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். வாகனத்தின் வகையைப் பொறுத்து, அதற்கு இணையான இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று (மே 17ம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








