வச்சாரு பாரு ஆப்பு! மஸ்க் ஸ்கெட்ச்சில் சிக்கிய ட்விட்டர் பயனர்கள்! போட்ட காசை எடுக்கனும்ல!
ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், பயனர்களின் சுயவிவரப் பெயருக்கு அடுத்ததாக வரும் ப்ளூடிக் சரிபார்ப்பு செயல்முறை புதுப்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய சரிபார்ப்பு செயல்முறை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், நிறுவனம் விரைவில் ப்ளூ டிக்கிற்கு பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் என தி வெர்ஜ் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் ப்ளூ சேவை என்றால் என்ன?
வெளியான அறிக்கையின்படி, இனி ப்ளூ நிற டிக் ட்விட்டர் ப்ளூ உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ட்விட்டர் ப்ளூ சேவை என்பது ட்விட்டர் நிறுவனம் வழங்கும் சந்தாக் கட்டண சேவையும். யூடியூப் வழங்கும் யூடியூப் ப்ரீமியம் போன்ற கட்டண சேவை இதுவாகும். ட்விட்டர் ப்ளூ சேவை பயனர்களுக்கு நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.

ட்விட்டர் ப்ளூ சேவைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்
ட்விட்டர் நிறுவனம் ட்விட்டர் ப்ளூ சேவைக்கு குறிப்பிட்ட அளவிலான கட்டணத்தை வசூலித்து வருகிறது. இந்த ப்ளூ சேவையில் ட்வீட் திருத்தம் போன்ற கூடுதல் அம்சங்கள் வழங்கப்படுகிறது. இனி பயனர்கள் தங்களது ப்ரொஃபைலில் ப்ளூடிக் பயன்பாட்டைப் பெற ட்விட்டர் சேவை சந்தாதாரர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ட்விட்டர் ப்ளூ சேவை சந்தா கட்டணம் $19.99 ஆக (தோராயமாக ரூ.1,600) என உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக ப்ளூடிக் பெற்றிருந்தால் என்ன நடக்கும்?
இத்தனை நாட்களாக ப்ளூடிக் வைத்துள்ளோமே திடீரென கட்டணம் என்றால் எப்படி என கேள்வி எழுப்பும் பயனர்களுக்கு ஒரு சலுகையும் வழங்கப்பட இருக்கிறது. அதாவது முன்னதாகவே ப்ளூ டிக் வைத்திருக்கும் பயனர்கள் தற்போது ப்ளூடிக் சேவையில் இணையும் பட்சத்தில் அவர்களுக்கு ப்ளூ டிக் அம்சம் ஒரு மாதத்திற்கு பதிலாக 90 நாட்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஒரு வாரத்திற்குள் நடவடிக்கையா?
மஸ்க் ட்விட்டரை முறையாக கையகப்படுத்தி இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. இந்த நிலையில் இதுபோன்ற தகவல் ட்விட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது அனைத்தும் தகவலே என்பதால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிடுவாரா? இல்லையா? என்று. மஸ்க் இந்த அம்சத்தை வெளியிடும்பட்சத்தில் அதிகளவிலான விமர்சனங்களை எதிர்கொள்வார் என கணிக்கப்படுகிறது.

மஸ்க் ஏன் ட்விட்டரை வாங்கினார்?
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நியோரோ லிங்க் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் ஆன மஸ்க், திடீரென ட்விட்டரை வாங்க காரணம் என்ன என்று கேள்வி வரலாம். ட்விட்டரை வாங்கியதற்கான காரணத்தை மஸ்க்கே தெரிவித்தார். அதில், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பொதுவான டிஜிட்டல் தளம் தற்போது முக்கியம், அதில் பலவிதமான நம்பிக்கைகள் ஆரோக்கியமான முறையில் விவாதிக்கப்படும் என மஸ்க் கூறினார்.

ட்விட்டர் இனி எப்படி இருக்கும்?
மஸ்க் தலைமையில் செயல்படும் ட்விட்டர் இனி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இது அனைவருக்கும் இலவசம் தளமாக இருக்கப்போவதில்லை என்றும் ஆனால் பயனர்கள் உங்கள் விருப்பப்படி விரும்பிய அனுபவத்தை தேர்வு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படும் என மஸ்க் குறிப்பிட்டார்.

ப்ளூ சேவைக்கு தான் இனி முக்கியத்துவம்?
தற்போதே ட்விட்டரில் கட்டண சந்தா உறுப்பினர்கள் சேவை ஒருசில நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அது ட்விட்டர் ப்ளூ என அழைக்கப்படுகிறது. இனி இந்த சேவைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து நாடுகளிலும் விரைவில் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பறவை சுதந்திரமாக பறக்கும்
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் அதாவது ரூ.3,52,000 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மஸ்க் உறுதி செய்தார். எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பொதுவான டிஜிட்டல் தளம் தற்போது முக்கியம் எனவே ட்விட்டரை வாங்கினேன் என மஸ்க் ட்விட்டரை வாங்கியதற்கு காரணமாக குறிப்பிட்டார். அதோடு இனி பறவை சுதந்திரமாக பறக்கும் என ட்விட்டர் லோகோவை குறிப்பிட்டு மஸ்க் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








