PAN கார்டு வைத்து இருப்பவர்களுக்கு 3 புதிய விதிகள்.. ஏப்ரல் 1 முதல் அமல்.. Aadhaar முதல் பணம் டெப்பாசிட் வரை!
பான் (PAN) என்கிற நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) தொடர்பான 2 முக்கிய மாற்றங்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதன்கீழ் பான் கார்டு விண்ணப்ப செயல்முறை மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் பான் கார்ட்டின் பயன்பாடு ஆகிய இரண்டிலும் மாற்றங்கள் வரவுள்ளன. இதோடு சேர்த்து நிலுவையில் உள்ள பான் கார்டு தொடர்பான பணிகளை காலக்கெடுவுக்குள் முடிக்குமாறும் அதிகாரிகள் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
புதிய பான் கார்டுக்கான விண்ணப்பங்கள் அல்லது ஏற்கனவே உள்ள விவரங்களை புதுப்பித்தல் போன்றவற்றை ப்ரோடீன் இகவ் டெக்னாலஜீஸ் (Protean eGov Technologies), யுடிஐ இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் டெக்னாலஜி அன்ட் சர்வீசஸ் (UTI Infrastructure Technology and Services Limited) மற்றும் இந்திய வருமான வரித் துறையின் மின்-தாக்கல் இணையதளம் (Income Tax Department of India e-filing website) போன்ற தளங்கள் மூலம் செய்யலாம்.

முதல் மாற்றம் - பான் கார்டு விண்ணப்ப செயல்முறையில் வரும் மாற்றம்: ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், விண்ணப்பதாரர்கள் பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் (New PAN Card Apply) போது கூடுதல் அடையாள மற்றும் வயது சான்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மார்ச் 31 வரை, ஆதார் அட்டை மட்டும் போதுமானதாக இருந்தது, ஆனால் புதிய விதிமுறைகளின்படி பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், மெட்ரிகுலேஷன் சான்றிதழ் அல்லது ஒரு நீதிபதியால் வழங்கப்பட்ட பிரமாண பத்திரம் போன்ற துணை ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது மாற்றம் - ஆதார் மற்றும் பான் இரண்டிலும் ஒரே பெயர்: ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் மற்றொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், பான் அட்டையில் உள்ள பெயர் இனி ஆதார் அட்டையில் உள்ள விவரங்களுடன் கண்டிப்பாக பொருந்த வேண்டும். மேலும், தற்போதுள்ள பான் விண்ணப்ப படிவங்களுக்கு பதிலாக, திருத்தப்பட்ட படிவங்களை இந்திய அரசு அறிமுகப்படுத்தும்.
மூன்றாவது மாற்றம் - பான் அட்டை பயன்பாட்டிற்கான புதிய விதிகள்: புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ், நிதி பரிவர்த்தனைகளில் பான் அட்டையின் பயன்பாடும் மாற்றப்பட உள்ளது. வங்கி பரிவர்த்தனைகளை பொறுத்தவரை, ஒரு நிதியாண்டில் மொத்த டெப்பாசிட்டிகள் அல்லது வித்ட்ராவல்கள் ரூ. 10 லட்சத்தை எட்டினால், தனிநபர்கள் பான் விவரங்களை வழங்க வேண்டும். இது, ஒரே நாளில் ரூ. 50,000 ரொக்க வைப்புத்தொகையுடன் தொடர்புடைய முந்தைய விதியை மாற்றுகிறது.
வாகனங்கள் வாங்குவதைப் பொறுத்தவரை, அதன் மதிப்பு ரூ.5 லட்சத்தை தாண்டினால் மட்டுமே இனி பான் தேவைப்படும். இது குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கான இணக்கத்தை எளிதாக்குகிறது. இருப்பினும், காப்பீட்டை பொறுத்தவரை, விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டுக்கு ரூ.50,000 என்ற வரம்பை போலல்லாமல், பிரீமியம் தொகையை பொருட்படுத்தாமல், பாலிசியின் தொடக்கத்திலேயே பான் விவரங்கள் கட்டாயமாக்கப்படும்.
சொத்து பரிவர்த்தனைகளிலும் திருத்தப்பட்ட வரம்பு அமலுக்கு வருகிறது . தற்போதுள்ள ரூ.10 லட்சம் வரம்பிலிருந்து, ரூ.20 லட்சத்திற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பான் அவசியமாகிறது. இதேபோல், ஹோட்டல்கள், உணவகங்கள் அல்லது நிகழ்வுகளில் அதிக மதிப்புள்ள ரொக்க பரிவர்த்தனைகளுக்கு, தொகை ரூ.1 லட்சத்தைத் தாண்டும்போது மட்டுமே பான் தேவைப்படும். இது தற்போதுள்ள வரம்பை இரட்டிப்பாக்குகிறது.
பான் கார்டு தொடர்பான மேற்கண்ட 3 மாற்றங்களுமே, பான் பயன்பாட்டில் அதிக தெளிவையும், சீரான தன்மையையும் கொண்டு வருவதோடு சேர்த்து, அதிக மதிப்புள்ள நிதி பரிவர்த்தனைகளில் சோதனைகளையும் கடுமையாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த எல்லா மாற்றங்களும் 2026 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.


Click it and Unblock the Notifications








