500 கிலோ எடை;14 அடி நீளம் கொண்ட ராட்சஸ முதலை! மீண்டும் தாக்கும் என்று நம்பி மக்கள் செய்த காரியம்!
கடந்த வாரம் இந்தோனேசியாவில் உள்ளூர்வாசிகளை அச்சுறுத்திய பின்னர், 14 அடி நீளமுள்ள 500 கிலோ எடை கொண்ட 'அரக்கன்' முதலை உள்ளூர் வாசிகளால் பொறிவைத்து பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இராட்சஸ முதலையை பிடிக்க அப்பகுதி மக்கள் கூர்மையான பிளேடு வலையை பயன்படுத்தியுள்ளனர். ஆனால், இவர்களின் மூடநம்பிக்கை காரணமாக இவர்கள் இறுதியில் செய்த காரியம் கொடூரமானதாக இருக்கிறது.

50 வயதான ராட்சஸ முதலை
பல ஆண்டுகளாக உள்ளூர்வாசிகளை அச்சுறுத்தி வந்த 50 வயதான இந்த ராட்சஸ முதலை, அப்பகுதியில் ஏராளமானோரை தாக்கியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இதுவரை எத்தனை நபர்களை தாக்கி இருக்கும் என்று நீங்களே கணித்துக்கொள்ளுங்கள் என்கின்றனர் ஊர்மக்கள். சமீபத்தில் இந்த முதலை பலரைத் தாக்கியுள்ளது, இதன் காரணமாக ஆத்திரம் அடைந்தகிராமவாசிகள் முதலையை வேட்டையாட முடிவு செய்து அதை பிடித்துவிட்டனர்.

கூர்மையான ரேஸர் பிளேடு வலைகள்
இந்தோனேசியாவின் பாங்கா பெலிதுங் தீவுகளில் உள்ள கிராமவாசிகளால் கயுபேசி ஆற்றில் கடந்த திங்கள்கிழமை கூர்மையான ரேஸர் பிளேடுகள் பொருத்தப்பட்ட வலைகளை அப்பகுதியில் பொறுத்தியுள்ளனர். 50 வருடங்களாக தப்பித்து வந்த ராட்சஸ முதலை திங்கள்கிழமை மாலை வலையில் சிக்கியது. 500 கிலோ எடை கொண்ட முதலையை ஊர் மக்கள் சிறைபிடித்து, மக்களின் பார்வைக்காக கூண்டில் அடைத்துள்ளனர்.

மீண்டும் உயிர்பெற்று மக்களை வேட்டையாடும்
சிறைபிடிக்கப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து, முதலை சோர்வு காரணமாக இறந்துள்ளது. இந்த பகுதி மக்களின் நம்பிக்கையின் படி முதலை என்பது ஒரு கொடூரமான அரக்கன் என்று கூறப்படுகிறது. முதலை அப்பகுதியில் புதைக்கப்பட்டால் அது மீண்டும் உயிர்பெற்று மக்களை வேட்டையாடும் என்று அவர்களின் மத நம்பிக்கையின்படி நம்பப்படுகிறது. இதனால் வன விலங்கு பாதுகாப்பு துறையினருக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் முதலையின் உடலை மீட்பதில் மோதல் உருவானது.

மூடநம்பிக்கையால் ஊர்மக்கள் செய்த காரியம்
முதலையின் உடலை தர மறுத்த ஊர் மக்கள், இறுதியில் தாங்களே முதலையை அடக்கம் செய்வதாக ஒப்புக்கொண்டனர். ஆனால், முதலையின் உடலையும் தலையையும் தனித்தனியாக தான் புதைக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் வன விலங்கு பாதுகாப்பு துறையினரை வற்புறுத்தியுள்ளனர். அதிகாரிகள் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காத ஊர் மக்கள், அவர்களின் மூடநம்பிக்கையின் படி முதலையின் தலையையும் உடலையும் வெட்டி தனித்தனி இடங்களில் புதைத்துவிட்டனர்.
புல்டோசரை பயன்படுத்திய பொதுமக்கள்! காரணம் இதுதான்
இறந்த முதலை சுமார் 500 கிலோ எடையை கொண்டுள்ளது, குறிப்பாக இந்த வயதான முதலைக்கு பற்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரை டன் எடை கொண்ட மிருகம் மிகவும் பெரியதாக இருந்ததால், அதை அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்ல ஊர் மக்கள் புல்டோசரை பயன்படுத்தியுள்ளனர். அடக்கம் செய்யும் இடத்தை கூட நதியில் இருந்து நீண்ட தூரத் தொலைவில் தேர்வு செய்த பொதுமக்கள்.புல்டோசரில் முதலையை எடுத்து செல்லும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதிகாரிகளின் புலம்பல்
முதலை பிடிபட்டவுடன் வன துறையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது. அதிகாரிகள் உடனடியாக சம்பவஇடத்திற்கு சென்று கூண்டில் அடைக்கப்பட்டிருந்த முதலையை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு கேட்டிருக்கின்றனர். ஆனால், உள்ளூர்வாசிகள் 500 கிலோ எடை கொண்ட முதலையை பாதுகாப்பாளர்களிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டனர். முதலையை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவது குறித்து உள்ளூர் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் வீணாய் போனதென்று அதிகாரிகள் புலம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications








