Google தலையில் இடியை இறக்கிய சாம்சங்... தடாலென சரிந்த பங்குகள்... விழிபிதுங்கி நிற்கும் சுந்தர் பிச்சை!
சாட்ஜிபிடியால் கூகுள் நிறுவனத்திற்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், சாட்ஜிபிடியை வைத்து சாம்சங் நிறுவனம் எடுக்க உள்ள முக்கிய முடிவால், கூகுள் நிறுவனத்தின் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இது சுந்தர் பிச்சைக்கு அடுத்த நெருக்கடியை தந்துள்ளது.
பெரும்பாலான ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்கள் இதுவரை கூகுள் தேடுபொறியை (Google Search Engine) தங்களது சாதனங்களில் வழங்கி வருகின்றன. ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் கூகுள் தேடுபொறியை தங்களது சாதனங்களில் வழங்குவதால், கூகுள் நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு இது பெரும் பக்க பலமாக இருந்து வருகிறது.

இந்த சூழலில், சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட சாதனங்களில் கூகுள் தேடுபொறிக்கு பதிலாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிங் (Microsoft Bing) தேடுபொறியை தங்களது ஸ்மார்ட்ஃபோன்களில் வழங்க பரிசீலித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. இதன் எதிரொலியால் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்ஃபபெட் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 4 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் பிங் தேடுபொறியில் சாட்ஜிபிடி ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், பிங் தேடுபொறியை பயன்படுத்துவோர் எளிதாக சாட்ஜிபிடியையும் பயன்படுத்த முடியும். தனியாக சாட்ஜிபிடியை லாக் இன் செய்ய அவசியம் இருக்காது. மேலும், சாட்ஜிபிடியின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் பயனர்களை கவர்ந்துள்ளது. இதனால், கூகுள் தேடுபொறியை தூக்கி விட்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிங் தேடுபொறியை வழங்க சாம்சங் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
இந்த தகவல் கூகுள் நிறுவனத்தின் தலையில் இடியை இறக்கி உள்ளது. தேடுபொறி சாஃப்ட்வேர் சேவை மூலமாக கூகுள் நிறுவனம் ஆண்டுக்கு 162 பில்லியர் டாலர் வருவாய் ஈட்டி வருகிறது. சாம்சங் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் மூலமாக ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர் அளவுக்கு கூகுள் வருவாய் பெற்று வருகிறது. இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் பிங் தேடுபொறியை பரிசீலித்து வரும் தகவல் கூகுள் தலையில் இடியை இறக்கி உள்ளது.
சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த முடிவை அறிவித்தால், அது கூகுளுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். பிற ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்களும் சாம்சங்கை பின்பற்றி பிங் தேடுபொறிக்கு மாறினால், கூகுள் நிறுவனத்தின் வர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்படும். எனவே, சாட்ஜிபிடியால் கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை தொடர்ந்து பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்.
சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் புதிய செயற்கை நுண்ணறிவு சாஃப்ட்வேரை களமிறக்கி வந்தாலும், அதன் செயல்பாடுகளில் பல குறைபாடுகள் உள்ளன. இதனிடையே, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், சாம்சங் நிறுவனத்திற்காக பிரத்யேக செயற்கை நுண்ணறிவு சாஃப்ட்வேரை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சாஃப்ட்வேர் சாம்ராஜ்யமாக விளங்கும் கூகுள் நிறுவனத்திற்கு இதுவரை சந்தைப் போட்டி என்ற நிலை இல்லாது இருந்து வந்தது. தேடுபொறி மூலமாக விளம்பர வர்த்தக சந்தையில் 80 சதவீத வருவாய் பங்களிப்பை வைத்து இருக்கிறது. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தேடுபொறி மூலமான விளம்ப சந்தையில் அசைக்க முடியாத வர்த்தகத்தை கூகுள் நிறுவனம் வைத்துக் கொண்டு கோலோய்ச்சி வந்தது. ஆனால், அண்மையில் வந்த சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு சாஃப்ட்வேர் கூகுள் நிறுவனத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications








