இதோ அடுத்த ஆப்பு.. LPG சிலிண்டர் பற்றாக்குறை.. மொபைல், இண்டர்நெட் சேவைகள் பாதிக்கும்.. எப்போது, ஏன், எப்படி?
எல்பிஜி கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை (LPG Gas Cylinder Shortage) ஆனது ஏற்கனவே பல பெரிய மற்றும் சிறிய உணவகங்களை இழுத்து மூடிவிட்ட நிலையில், பொதுமக்களும் கூட அடுத்தது வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரும் சிக்கலை சந்திக்கும் என்கிற அச்சத்தில் உள்ளனர்; இண்டக்ஷன் ஸ்டிவ் உட்பட சமைப்பதற்கான "மாற்று வழிகளை" திட்டமிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இதே எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக "மாற்று வழியே" இல்லாத இன்னொரு புதிய சிக்கலும் வரும் என்பது போல் தெரிகிறது. எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை ஆனது நீண்ட காலத்திற்கு நீடித்தால், மொபைல் மற்றும் இண்டர்நெட் கனெக்ஷன் சேவைகள் (Mobile and Internet Connection Services) பாதிக்கக்கூடும் என்கிற கவலைகள் எழுந்துள்ளன.

எல்பிஜி சிலிண்டர் விநியோக இடையூறுகள் ஆனது ஏற்கனவே டெலிகாம் டவர் உற்பத்தியை (Telecom tower manufacturing) பாதித்து வருவதாகவும், நெட்வொர்க் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் (Network infra expansion) ஏற்படக்கூடிய தாமதங்கள் குறித்த கவலைகளை எழுப்புவதாகவும் தொழில்துறை பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
டெலிகாம் டவர்களை உருவாக்குவதில் எல்பிஜி-க்கு என்ன பங்கு? டெலிகாம் டவர்களை உருவாக்கும் போது, கால்வனைசேஷன் செயல்பாட்டில் (Galvanisation process) எல்பிஜி பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறையில் டவர்களில் அரிப்பை (corrosion) தடுப்பதற்காக உருகிய துத்தநாகத்தால் (Molten zinc) டவர்கள் பூசப்படுகின்றன.
மார்ச் 5 ஆம் தேதி முதலே நிறுத்தம்: எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் ஆனது தொலைத்தொடர்பு டவர் உற்பத்தி மையங்களுக்கு, எல்பிஜி வழங்குவதை நிறுத்தி உள்ளதாம். ஏனென்றால் வீட்டு உபயோக எல்பிஜி விநியோகத்தில் அதிக கவனம் செலுத்துமாறு இந்திய அரசாங்கம் ண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களிடம் கூறியுள்ளதாம்.
தற்போதைய சூழ்நிலையை பொறுத்தவரை, நாடு முழுவதும் மொபைல் மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்படாமல் உள்ளன. ஆனால் எல்பிஜி நிறுத்தம் மற்றும் எல்பிஜி தொடர்பான இடையூறு தொடர்ந்தால், புதிய தொலைத்தொடர்பு டவர்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும் வேகம் குறையக்கூடும். இந்தியாவின் மொபைல் நெட்வொர்க்குகளை வலுப்படுத்துவதிலும், இணைப்பை விரிவுபடுத்துவதிலும், குறிப்பாக சேவை குறைவாக உள்ள பகுதிகளில் இந்த டவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
டிஐபிஏ (DIPA) என்கிற டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குநர்கள் சங்கத்தின் (Digital Infrastructure Providers Association) கூற்றுப்படி, தொலைத்தொடர்பு டவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு எல்பிஜி விநியோகத்தை நிறுத்தி வைப்பது, கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது , அதைத் தொடர்ந்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் உத்தரவு வந்தது.
"பொதுத்துறை ஓஎம்சி-க்களால் கொள்முதல் செய்யப்படும் எல்பிஜி ஆனது உள்நாட்டு எல்பிஜி நுகர்வோருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களிலிருந்து தொலைத்தொடர்பு டவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு எல்பிஜி விநியோகம் மார்ச் 05, 2026 முதல் நிறுத்தப்பட்டுள்ளது" என்று டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குநர்கள் சங்கம் (DIPA) தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தாங்கள் கொள்முதல் செய்யும் எல்பிஜி உள்நாட்டு நுகர்வுக்கு மட்டுமே என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வீட்டு பொருட்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. இது உற்பத்தி செயல்முறைகளுக்கு எல்பிஜி-ஐ பெரிதும் நம்பியுள்ள பல்வேறு தொழில்களுக்கும் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








