OnePlus சகாப்தம் முடிந்தது.. இந்திய மார்க்கெட்டை விட்டும் வெளியேறுகிறது.. எப்போது? என்ன காரணம்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளிலிருந்து வெளியேறுவது குறித்த செய்திகள் வெளியான சில நாட்களிலேயே, அது மேற்கத்திய நாடுகளுடன் மட்டும் நின்றுவிடாமல் இந்தியாவிலிருந்தும் வெளியேற திட்டமிட்டுள்ளதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
ப்ளூம்பெர்க் (Bloomberg) வெளியிட்டுள்ள இந்த தகவலின்படி, மேற்கத்திய நாடுகளிலிருந்து ஒன்பிளஸ் வெளியேறுவது ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கான முடிவு மட்டுமல்ல; இது உலகளாவிய அளவில் அந்த நிறுவனம் மேற்கொள்ளவிருக்கும் பெரிய அளவிலான வெளியேற்றத்தின் முதல் கட்டமாகும்.

இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை 2027 ஆம் ஆண்டில் படிப்படியாக நிறுத்த ஒப்போ (Oppo) திட்டமிட்டுள்ளதாக இச்செய்தி அறிந்த வட்டாரங்கள் ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்துள்ளன. சீனாவில் மட்டுமே ஒன்பிளஸ் (OnePlus) பிராண்ட் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்றும் கூறப்படுகிறது.
முந்தைய அறிக்கைகள் அனைத்தும் ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளிலிருந்து வெளியேறுவதை பற்றியே அதிகம் பேசியதால், இந்திய சந்தை பாதிக்கப்படாமல் இருக்கும் என்று நாம் கருதினோம்; எனவே, இந்த புதிய தகவல் சற்றும் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. ஆனால் இப்போது, இந்தியாவிலும் அந்த வெளியேற்றம் நிகழப்போகிறது, ஆனால் அது சற்று தாமதமாக நடக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.
இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள முக்கிய காரணம் நிதி சார்ந்ததாகவே கூறப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா ஆகிய சந்தைகளில் மந்தமான விற்பனை போக்கு மற்றும் அமெரிக்காவில் சீன தயாரிப்பு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவற்றால் ஒப்போவின் ஸ்மார்ட்போன் வணிகம் சமீபகாலமாக நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
இந்த நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, ஒப்போவின் சகோதர நிறுவனமான ரியல்மி (Realme) கூட சீனாவிலிருந்து முழுமையாக வெளியேறவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே வேளையில், மத்திய ஐரோப்பா மற்றும் நோர்டிக் பிராந்தியங்களில் (Nordic region) ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், ஒப்போ தனது வணிகத்தை அப்பகுதிகளில் மையப்படுத்தவுள்ளது.
இவையெல்லாம் திடீரென நடந்த மாற்றங்கள் அல்ல. ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் தனது செயல்பாடுகளை குறைத்து வருகிறது; அதாவது, கூட்டாளர் நிறுவனங்களால் நடத்தப்பட்ட பெரும்பாலான நேரடி விற்பனை கடைகளை (offline stores) மூடியது, இணையவழி விற்பனைக்கு (online-first) முன்னுரிமை அளித்தது மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை கட்டமைப்பை ஒப்போவுடன் இணைத்தது போன்றவை இதில் அடங்கும்.
மேலும், ஒன்பிளஸ் நிறுவனத்தின் தனித்துவமான ஆக்சிஜன்ஓஎஸ் அடையாளத்தை விடுத்து, ஒப்போவின் கலர்ஓஎஸ்-ஐ அது பயன்படுத்த தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சந்தைகளில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மந்தமடைந்துள்ள சூழலை கருத்தில் கொண்டால், 2027 இல் நிகழவிருக்கும் இந்த வெளியேற்றம் ஆச்சரியமான ஒன்றாக தெரியவில்லை.
மாறாக, இது அடுத்தடுத்து நிகழவிருக்கும் மாற்றங்களின் ஒரு பகுதியாகவே தோன்றுகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இந்த அறிக்கை குறித்து ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ ஆகிய 2 நிறுவனங்களுமே இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஜெர்மன் வெளியீடான வின்பியூச்சரின் (WinFuture) அறிக்கை ஆனது, ஒன்பிளஸ் (OnePlus) மற்றும் அதன் தாய் நிறுவனமான ஒப்போ (Oppo) ஆகியவைகள் இந்த வாரம் "முக்கியமான உத்திசார் மாற்றங்களை" அறிவிக்க தயாராகி வருகின்றன என்று மட்டுமே சுட்டிக்காட்டி இருந்தது.
மேலும் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக - ஒன்பிளஸ் நிறுவனமானது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தைகளிலிருந்து வெளியேறும் என்றும், அதே நேரத்தில் ஒப்போ அந்த இடைவெளியை நிரப்ப குறிப்பாக ஐரோப்பா முழுவதும் தனது இருப்பை விரிவுபடுத்தும் என்றும் வெளியான அறிக்கை கூறுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு, இந்த ஆண்டு ஒரு சவாலான ஆண்டாக மாறியதன் விளைவாக இந்த வதந்தி பரவி வருகிறது. நினைவூட்டும் வண்ணம் கடந்த ஜனவரியில், இந்நிறுவனம் மூடப்படலாம் என்ற ஊகங்கள் இணையத்தில் வேகமாக பரவின; பின்னர் ஒன்பிளஸ் அந்த தகவல்களை பகிரங்கமாக மறுத்தது. ஆனால் இப்போது அது எல்லாமே உண்மையாகும் என்பது போல் தெரிகிறது.


Click it and Unblock the Notifications