இரவோடு இரவாக 3 லேட்டஸ்ட் Redmi போன்கள் விலை உயர்வு.. எவ்வளவு? என்னென்ன மாடல்கள்?
ஸ்மார்ட்போன் துறையில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலை உயர்வுக்கு மத்தியில், ரியல்மி நிறுவனம் இந்தியாவில் வாங்க கிடைக்கும் அதன் 9 ஸ்மார்ட்போன்களின் விலைகளை கடுமையாக (ரூ.6000 வரை) அதிகரித்த வேகத்தில், ரெட்மி நிறுவனமும் தனது 3 ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தி உள்ளது.
உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக, கடந்த சில மாதங்களாகவே புதிதாக அறிமுகமான எல்லா ஸ்மார்ட்போன்களுமே சற்றே அதிக விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கிடையில் ஏற்கனவே அறிமுகமான ஸ்மார்ட்போன்களும் விலை உயர்வை சந்தித்து வருகின்றன. இது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.

என்னென்ன ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது? விலை உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் ரெட்மி நோட் 15, ரெட்மி 15 மற்றும் ரெட்மி 15சி மாடல்கள் ஆகும். இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு சில மாதங்களிலேயே இந்த 3 ஸ்மார்ட்போன்களின் விலைகளும் உயர்வை கண்டுள்ளது.
பழைய விலை என்ன, புதிய விலை என்ன? ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, இது இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி மாடல் ரூ. 22,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகமானது.
தற்போது இதன் விலை ரூ.2,000 அதிகரித்து, தற்போதைய விலை ரூ.24,999 ஆக உள்ளது. இதேபோல ரூ.24,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 256ஜிபி மாடல், ரூ.3,000 விலை உயர்வுக்கு பிறகு, தற்போது ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.
பட்ஜெட் விலை மாடல்கள் ஆன ரெட்மி 15 மற்றும் ரெட்மி 15சி ஸ்மார்ட்போன்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. ரெட்மி 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் மாடல் ரூ.14,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் ரூ.3,500 விலை உயர்வுக்கு பிறகு, தற்போது அதன் விலை ரூ.18,499 ஆக உள்ளது.
ரெட்மி 15சி ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, இது ரூ.12,499 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் ஆனது. ஆனால் இது ரூ.3,000 விலை உயர்வுக்கு பிறகு, தற்போது ரூ.15,499 என்ற ஆரம்ப விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. இப்போதைக்கு இந்த 3 மாடல்களின் விலை உயர்வு குறித்த விவரங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் மேலும் பல மாடல்கள் சேர்க்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
OPINION: புதிய விலை நிர்ணயத்தின் அடிப்படையில், மேற்கண்ட 3 ரெட்மி ஸ்மார்ட்போன்களுமே தற்போது முற்றிலும் வேறுபட்ட விலைப்பிரிவின் கீழ் இணைந்துள்ளன. முன்னரே குறிப்பிட்டபடி ரெட்மி மட்டுமல்ல, மற்ற நிறுவனங்களும் கூட தங்களுடைய ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியுள்ளன; அதற்கேற்ப சந்தையும் மாறியுள்ளது.
விலை உயர்த்தப்பட்ட 3 மாடல்களில் ரெட்மி நோட்15 மட்டுமே இன்னமும் கூட (விலை உயர்த்தப்பட்டாலும் கூட) "பெஸ்ட் ஆப்ஷன்" ஆக உள்ளது. சிறந்த டிஸ்பிளே, நேர்த்தியான மற்றும் உறுதியான கட்டமைப்பு, நல்ல டேலைட் கேமராக்கள் மற்றும் நீண்ட கால சாஃப்ட்வேர் ஆதரவை விரும்புபவர்களுக்கு ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் ஒரு நல்ல சாய்ஸ் ஆகும்.
ஒருவேளை நீங்கள் ரெட்மி 15 ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், அதன் பெரிய 7000mAh பேட்டரி மற்றும் 144ஹெர்ட்ஸ் டிஸ்பிளே உங்களை ஈர்க்கலாம். நீண்ட பேட்டரி லைஃப் மற்றும் தடையற்ற கேமிங் அனுபவத்தை விரும்பும் பவர் யூஸர்களுக்கு இந்த போன் பொருத்தமானதாக இருக்கும். கடைசியாக உள்ள ரெட்மி 15சி மாடல் ஆனது "பட்ஜெட் விலையில்" பெரிய டிஸ்பிளே, நம்பகமான பேட்டரி லைப், பிரீமியம் வடிவமைப்பு மற்றும் நம்பகமான செயல்திறனை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான மாடலாகும்.
புதிய விலைகள் - இந்த 3 போன்களையும் இப்போது வாங்குவதற்கு உகந்தவையா இல்லையா என்ற கேள்வியை எழுப்பினாலும், இதே போன்ற ஒரு போக்கு மற்ற பிராண்டுகளிலும் காணப்படுகிறது. அதாவது ரெட்மி விலை உயர்த்திவிட்டது என்று ரியல்மி பக்கம் சென்றால் - அதுவும் விலை உயர்த்தி விட்டது தான். எனவே நீங்கள் பெரும்பாலும் இதே போன்ற அனுபவத்தை (விலை உயர்வு சிக்கலை தான்) சந்திப்பீர்கள். ஆகவே உங்களுக்கு என்ன தேவை + எந்த பிராண்ட் மலிவான விலைக்கு அதை வழங்குகிறது என்பதை சரிபார்த்து, ஒப்பிட்டு பார்த்து - வாங்குவதே இப்போதைக்கு புத்திசாலித்தனமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








