கனடா குடியுரிமையை ஏ.ஆர்.ரஹ்மான் மறுத்தது ஏன்?
ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய நாடு என்றுமே தமிழ்நாடு தான் என்று கூறி அந்த குடியுரிமையை நாகரீகமாக மறுத்ததுதான் ஹைலைட்.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் அக்சயகுமார் ஒரு சர்ச்சையில் சிக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் கனடா நாட்டின் குடியுரிமை வைத்திருந்ததாகவும், அதனால்தான் அவர் சமீபத்தில் முடிந்த மக்களவை தேர்தலில் ஓட்டு போடவில்லை என்றும் நெட்டிசன்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர். மேலும் அவரிடம் கனடா நாட்டின் பாஸ்போர்ட் இருந்ததாக கூறி அவருடைய இந்திய குடியுரிமை குறித்தே பலர் கேள்வி எழுப்பினர்.

நெட்டிசன்கள் தொடர்ச்சியாக அக்சயகுமாரின் தேசப்பற்று மற்றும் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பியதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் இதுகுறித்து ஒரு நீண்ட விளக்கம் அளித்தார். தன்னிடம் கனடா நாட்டின் பாஸ்போர்ட் இருப்பது உண்மைதான் என்றும், ஆனால் தன்னுடைய இதயம் எப்போதும் இந்தியாவை சுற்றியே இருக்கும் என்றும், தனது வருமானம் முழுவதற்கும் இந்தியாவிலேயே வரி கட்டி வருவதாகவும், தான் தாய்நாட்டை நேசிப்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் விளக்கம் அளித்தார்.

கனடா நாடு சிறப்பு குடியுரிமை
அக்சயகுமாருக்கு கனடா நாடு சிறப்பு குடியுரிமை வழங்கி பல ஆண்டுகள் ஆகியும் அவர் கனடாவிற்கு செல்லவில்லை என்பதும் இந்த குடியுரிமையை வைத்து அவர் எந்தவித பலன்களையும் அனுபவிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் அக்சயகுமாரை போலவே அகில இந்திய அளவில் பிரபலமான இன்னொரு பிரபலத்திற்கும் அதே கனடா நாடு சிறப்பு குடியுரிமையை அளிக்க முன்வந்தது. ஆனால் அவர் தன்னுடைய நாடு இந்தியா தான் என்று கூறி மறுத்துவிட்டார். அவர் வேறு யாருமல்லா, இந்தியாவின் பெருமையை உலகிற்கே சாற்றும் வகையில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை குவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தான்

என்றுமே தமிழ்நாடு தான்
கடந்த சில வருடங்களுக்கு முன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு கனடாவை சேர்ந்த மேயர் ஒருவர் கனடா நாட்டின் சிறப்பு குடியுரிமையை தர முன்வந்தார். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய நாடு என்றுமே தமிழ்நாடு தான் என்று கூறி அந்த குடியுரிமையை நாகரீகமாக மறுத்ததுதான் ஹைலைட்.

ஃபேஸ்புக் பக்கத்தில்
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது ரசிகர்களிடமும் பகிர்ந்து கொண்டார். கனடா நாட்டின் குடியுரிமையை அந்நாட்டின் மேயர் தர முன்வந்ததற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதன் மூலம் நான் உங்களுக்கு என்றுமே நன்றிக்கடன் பட்டவராக உள்ளேன். நான் தமிழ்நாட்டில் நல்ல நிலையில் உள்ளேன். இந்தியாவில் தான் எனது குடும்பமும் உள்ளது. நண்பர்கள் மற்றும் என் மக்கள் இந்தியாவில் தான் உள்ளனர். நீங்கள் அடுத்த முறை இந்தியாவுக்கு வரும்போது எங்கள் கே.எம். இசைப்பள்ளிக்கு வருகை தர வேண்டும். இந்தியா மற்றும் கனடா இசைக்கலைஞர்கள் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவும் நான் விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

அவரது பெயரில் ஒரு சாலை
ஆஸ்கார் விருது பெற்ற பின்னர் அவர் ஒரு சர்வதேச புகழ் பெற்ற கலைஞராக இருந்தாலும் அவருடைய மனதில் என்றுமே தான் ஒரு இந்தியன் என்ற நினைப்பு அவரது மனதில் ஆழப்பதிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் கனடாவின் குடியுரிமையை மறுத்துவிட்டாலும் ஒண்டோரியோவில் அவரது பெயரில் ஒரு சாலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications