நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் நதியை கடப்பதை படம் பிடித்த சீக்ரெட் டிரோன்!
நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் ஒரே நேரத்தில் சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா எல்லையில் உள்ள நதியை கடக்க முயன்ற காட்சியை காவல்துறையின் கண்காணிப்பு டிரோன் மாவோயிஸ்ட்களுக்கு தெரியாமல் படம்பிடித்துள்ளது. இந்த டிரோன் காட்சி தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.

சமீப காலமாக, மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் வடமாநிலங்களான தெலுங்கானா, ஒடிசா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு ரோந்து பணியில் காவல்துறையினர் களமிறக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வனப்பகுதிகளுக்குள் மறைந்திருக்கும் மாவோயிஸ்ட்டுகளை கண்காணிக்க காவல்துறையினர் டிரோன் மூலம் கண்காணிப்பு பணியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதில், நேற்று, சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள சுக்மா என்ற பகுதியில் 100க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் நதியை கடந்து செல்லும் காட்சி டிரோன் கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த ஆதார வீடியோ பதிவை உளவுத்துறை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து, இந்த சுக்மா பகுதியில் போலீசார் தங்களின் கண்காணிப்பு நடவடிக்கையை மேலும் அதிகரித்துள்ளனர்.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு தெலுங்கானா போலீசாரும், ஒடிசா போலீசாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் யாரேனும் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications