சமூக வலைதளத்தில் தவறாக சித்தரிப்பு- கோமதி விளக்கம்.!
மேலும் முடிகண்டம் அருகே ஆலம்பட்டி பிரவு ரோட்டில் பொதுமக்கள் மேள தாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்
கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்சிப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். தமிழகம் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து கோமதி மாரிமுத்து வாழ்த்து பெற்றார். அவருக்கு 10 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டிய ஸ்டாலின் அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியாவுக்கு எண்ணற்ற பதக்கங்களை வென்று தர வாழ்த்து தெரிவித்தார்.

கோமதி
கோமதி சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள முடிகண்டம் கிராமம் ஆகும். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து பல சோதனைகளை தாண்டி ஆசிய தடகளத்தில் சாதனை படைத்திருக்கும் கோமதிக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

கிழிந்த ஷூ
இந்த நிலையில் கோமதி நேற்று சொந்த ஊர் திரும்பினார், திருச்சி விமான நிலையத்திலும், அதன் பிறகு அவரது சொந்த ஊரிலும் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு நிருபர்களிடம் பேட்டி அளித்த கோமதியிடம், கிழிந்த ஷூ அணிந்து தடகள போட்டியில் பங்கேற்றது குறித்து சமூக வலைதளங்களில் படத்துடன் வைரலாகி வருவது குறித்து கேட்கப்பட்டது.

பதில் கூறிய கோமதி
அதற்கு பதில் கூறிய கோமதி, நான் சிறிது கிழிந்த ஷூ தான் அணிந்திருந்தேன், அந்த ஷூ எனக்கு மிகவும் அதிர்ஷ்டமானது. அதனால் தான் அதை நான் விரும்பி அணிந்திருந்தேன். 2 ஷூக்களின் நிறம் மாறி இருப்பது டிசைன் தான். வேறொன்றுமில்லை. சமூக வலைதளங்களில் அந்த படத்தை தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளனர்' என்றார்.

கண்ணீர் விட்டு அழுதார்
மேலும் முடிகண்டம் அருகே ஆலம்பட்டி பிரவு ரோட்டில் பொதுமக்கள் மேள தாளம் முழங்க வரவேற்பு அளித்தனர், அங்கு பேசிய கோமதி, நான் எப்போதுமே இந்த இடத்தில் நிற்கும் போது என்னுடன் தந்தையும் நிற்பார், ஆனால்
அவர் என்னுடன் இல்லை என நினைக்கும் போது வருத்தமாக உள்ளது என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார், பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications