படிக்கிற பிள்ளை எங்கு இருந்தாலும் படிக்கும்! வைரல் ஆகும் 7ம் வகுப்பு ஹரீஷ் குமார்!
பாட்மேர் மாவட்ட தலைமையகத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள தருடா கிராமத்தில் வசிக்கும் ஹரீஷ் குமார், என்ற 7ம் வகுப்பு மாணவன் ஆன்லைன் வகுப்பிற்காக சிக்னலைத் தேடி தினமும் அவர் இருப்பிடத்திலிருந்து 2 கி.மீ பயணித்து மலை உச்சிக்குச் சென்று தனது பாடங்களைத் தீமையும் படித்து வருகிறார். இந்த செய்தி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது.

பச்பத்ராவின் ஜவஹர் நவோதயா வித்யாலயாம் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் ஹரீஷ் குமார் தருடா கிராமத்தில் வசித்து வருகிறார். Covid -19 தொற்றுநோய் காரணமாக, பள்ளிகள் அனைத்தும் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களின் பாடங்களும் ஆன்லைன் வகுப்பு மூலமே நடைபெற்று வருகிறது. இருப்பினும் சில இடங்களில் ஆன்லைன் வழிக் கல்வி இன்னும் ஒரு முயற்சியாகவே உள்ளது.

பல இடங்களில் ஆன்லைன் கல்வி இன்னும் சரியாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்குக் காரணமாக மொபைல் போன்களின் தட்டுப்பாடு, மின்சாரம் மற்றும் சிக்னல் பிரச்சினை போன்றவற்றை மாணவர்கள் சந்திக்கின்றனர் என்பதே உண்மை. நகரத்தில் வசிப்பவர்களுக்கே சிக்னல் கிடைக்காமல் திண்டாடும் நிலையில், கிராமத்தில் வசிக்கும் இந்த மாணவனின் நிலை இன்னும் கொஞ்சம் மோசமானது தான்.

தொலைதூர கிராமப்புறங்களில் வாழும் மாணவர்களுக்கு மொபைல் நெட்வொர்கு சீராகக் கிடைப்பதில்லை, சில நேரங்களில் முற்றிலுமாக இல்லாமலும், துண்டித்தும் போகிறது என்பது பெரிய பிரச்சினையாகவே உள்ளது. ஆனால், படிக்கிற பிள்ளை எப்படியும் படிக்கும் என்ற வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக ஏழாம் வகுப்பு படிக்கும் ஹரீஷ் இந்த சிக்கலுக்குத் தானாகவே ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார்.

ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள வேண்டி, மொபைல் நெட்வொர்க் தேடி ஹரீஷ் தனது பயணத்தை 5 மாதங்களுக்கு முன்பு தொடர்ந்திருக்கிறார். ஊருக்கு வெளியில் உள்ள மலைப் பகுதியில் தான் இவருக்கு சிக்னல் கிடைத்துள்ளது. இதனால் தினமும் காலை எழுந்து தனது நாற்காலி மற்றும் மேசையுடன் தனது புத்தகங்களையும் தூக்கிக்கொண்டு 2 கி.மீ பயணித்து மலை உச்சிக்குச் சென்று இவரின் படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.

மலை உச்சியில் தான் மொபைலுக்கு சிக்னல் கிடைக்கிறது என்பதனால் தினமும் இதை ஹரீஷ் பின்பற்றிவருகிறார். காலை 8 மணிக்கு வீட்டை விட்டுப் புறப்படும் ஹரிஷ் மலைக்கு சென்று தனது ஆன்லைன் வகுப்புகளை முடித்துவிட்டு மதியம் 2 மணிக்கு வீடு திரும்புகிறார் என்று அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மலை உச்சியில் தினமும் அமர்ந்து 3 மணி நேரம் படிக்கிறார். ஹரீஷிற்கு படிப்பின் மீது இருக்கும் ஆர்வம் தற்பொழுது அவரை சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications