10 லட்சத்தை கொள்ளையடித்த 10 வயது சிறுவன்! வெறும் 30 செகண்டில் வங்கியைவிட்டு மாயம்!
இதுவரை கேள்விப்படாத ஒரு வினோதமான வங்கி திருட்டு மத்தியப் பிரதேசத்தில் நடந்தேறியுள்ளது. வீடியோ காட்சிகளை பார்க்கும் பொழுது நமக்கே நெஞ்சு பதைபதைக்கிறது. நீமுச் மாவட்டத்தின் ஜவாத் பகுதியில், 10 வயது சிறுவன் வங்கி அறைக்குள் புகுந்து ரூ .10 லட்சம் ரொக்கத்துடன் வெறும் முப்பதே வினாடிகளில் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி ஆதாரம் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

மதியே பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் உள்ள ஜவாத் பகுதியில் அமைத்திருக்கும் ஒரு கூட்டுறவு வங்கியில் தான் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. காலை சுமார் 11 மணிக்கு இந்த எதிர்பார்ப்பை மிஞ்சும் திருட்டு நடந்துள்ளது. எந்த வங்கி ஊழியர்களும் இல்லாத நேரத்தில், வாடிக்கையாளரின் கண்களிலும் சிக்காமல் 10 வயது சிறுவன் 10 லட்சம் ரொக்க பணக்கட்டுடன் எந்தவொரு சிறிய துப்பும் இல்லாமல் திருடியுள்ளான்.

திருட்டிற்கான துப்புகள் எதுவும் கிடைகவில்லை என்றாலும் கூட, வங்கியின் சி.சி.டி.வி காட்சிகள் சிறுவன் திருடியதை மிகத்துல்லியமாகக் காட்டுகிறது. அரைக்கால் டவுசர் மற்றும் டீ-ஷர்ட் அணிந்து முகத்தில் துணி கட்டி வங்கிக்குள் நுழைந்த சிறுவன், நேராக ஆளில்லாத வங்கி காசாளரின் அறைக்குள் நுழைவதைக் சிசிடிவி காட்சிகள் காட்டுகிறது. கவுண்டருக்கு முன்னால் வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்களுக்கும் சிறுவன் உள்ளே நுழைந்தது தெரியவில்லை.

வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்களைக் கொஞ்சம் கூட பொறுப்பெடுத்தாமல் அச்சிறுவன், காசாளரின் மேசையிலிருந்த இரண்டு 500 ரூபாய் கட்டுகளை கண்ணிமைக்கும் நொடியில் எடுத்து, அவன் கையில் வைத்திருக்கும் பைக்குள் போட்டுவிட்டு வேகமாக நகர்கிறான். கவுண்டரில் நிற்கும் வாடிக்கையாளர்களின் மூக்கின் கீழ் நேரடியாக நடந்த திருட்டை யாரும் கவனிக்கவில்லை என்பதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

எந்தவித அச்சமுமின்றி, எந்தவித தடையுமின்றி அச்சிறுவன் வெறும் 30 வினாடிகளுக்குள் வங்கிக்குள் நுழைந்து பணத்தைத் திருடிவிட்டு வெளியேறி இருக்கிறான் என்பதே உண்மை. வங்கியின் நுழைவாயிலை நெருங்கியதும் சிறுவன் ஓட்டம்பிடிப்பதும் சிசிடிவி ஆதாரத்தில் தெளிவாகத் தெரிகிறது. வங்கியின் அலாரம் எழுப்பப்பட்ட உடனே சிறுவன் ஓட்டம்பிடித்ததாகவும் அவனை பின் தொடர்ந்து வங்கிக் காவலர் ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டில் ஈடுபட்ட சிறுவன், 20 வயது இளைஞனுடன் கூட்டு சேர்த்துத் தான் திருடியுள்ளான் என்பதும் சிசிடிவி ஆதாரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. சுமார் 30 நிமிடங்கள் வங்கியின் உள்ளே காத்திருந்த இளைஞன் காசாளர் தனது இருக்கையிலிருந்து எழுந்து வேறு அறைக்குச் செல்வதைக் கண்டவுடன், வெளியே நின்று கொண்டிருந்த சிறுவனுக்குத் தகவல் தெரிவிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

தடயவியல் நிபுணர்கள் குற்றம் நடந்த இடம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாவாத் காவல் நிலைய பொறுப்பாளர் ஓ.பி. மிஸ்ரா கூறுகையில், வங்கிக்கு வெளியே உள்ள சி.சி.டி.வி காட்சிகள் இளைஞனும் சிறுவனும் வெவ்வேறு திசைகளில் ஓடியதைக் காட்டுகிறது. வங்கிக்கு அருகில் குடியிருப்பவர்கள் என்று சந்தேகப்படும் படியானவர்களை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மயமான சிறுவனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.


Click it and Unblock the Notifications