இந்த ரோபோட் மட்டும் இல்லையென்றால் நோட்ரே டேம் தேவாலயம் என்ன ஆகியிருக்கும் தெரியுமா?
நோட்ரே டேம் தேவாலய தீயை அணைக்க தொழில்நுட்ப ரீதியான உதவி கிடைத்ததால் தீயை கட்டுப்படுத்தும் பணி எளிதானது
பாரீஸ் நகரில் இந்த வாரம் பழமையான நோட்ரே டேம் தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டபோது, அந்த தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு இந்த தீயை அணைக்க தொழில்நுட்ப ரீதியான உதவி கிடைத்ததால் தீயை கட்டுப்படுத்தும் பணி எளிதானது.

856 ஆண்டுகள் பழமையான இந்த் தேவாலயம் முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டிருந்தாலும் அதன் மேல்தளம் மற்றும் தூண்கள் அனைத்தும் மரங்களால் உருவாக்கப்பட்டிருந்ததால் தீ விபத்தில் இந்த மரங்கள் முழுமையாக எரிந்து மேல்தளம் இடிந்துவிழும் ஆபத்தில் இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் உள்ளே சென்று தீயை அணைப்பதில் அதிக ரிஸ்க் இருந்ததாக கருதப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உள்பட யாரும் உள்ளே சென்று தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில்தான் அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக ரோபோ உதவியது.

500 கிலோ எடை
500 கிலோ எடை கொண்ட தீயணைக்கும் ரோபோ, ஏற்கனவே பாரீஸ் தீயணைப்புத்துறையினர்களால் உருவாக்கப்பட்டு அதன் செயல்வடிவ ஒத்திகையும் வெற்றிகரமாக பார்க்கப்பட்டிருந்தது. ஷார்க் ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருந்த இந்த ரோபோட், நோட்ரே டேம் தேவாலயத்தில் தீவிபத்தில் பெரும் உதவியாக செயல்பட்டது. தீயை இந்த ரோபோட் பெருமளவில் கட்டுப்படுத்தியது மட்டுமின்றி தீயணைப்பு துறையினர்கள் எந்தவித காயமும் இன்றி இந்த தீயை அணைக்கவும் உதவியது. ஒருவேளை தேவாலயத்தின் மேல்பகுதி இடிந்திருந்தால் தீயணைப்பு வீரர்கள் எடுக்க வேண்டிய ரிஸ்க்கை இந்த ரோபோட் எடுத்ததுதான் அதற்கு காரணம்

தேவாலயத்தில் ஏற்பட்ட தீ
தேவாலயத்தில் ஏற்பட்ட தீ, குறிப்பாக அந்த கட்டிடத்தில் உள்ள மரப்பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்த காரணத்தால் சில பிரச்சனைகள் தீயணைப்பு வீரர்களுக்கு ஏற்பட்டது. அவற்றில் ஒன்று குறுகிய இடைவெளிகளாலும், இடிபாடுகளாலும் மனிதர்கள் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு பாதை கடினமாக இருந்தது. எந்த நேரத்திலும் மேல்பகுதி இடிந்துவிழும் ஆபத்தில் இருந்ததால் மனிதர்கள் உள்ளே சென்று தீயை அணைப்பது என்ற முடிவை எடுக்க முடியவில்லை

2.5 அடி உயரம்
இந்த ரோபோட் அனைத்து வகை இடர்களையும் தாங்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கொழுந்துவிட்டு எரியும் தீ, வெள்ளம் மற்றும் கீழே விழும் பொருட்களை தாங்கும் அளவுக்கு திறன் கொண்டது. 2.5 அடி உயரம் கொண்ட இந்த ரோபோட் மணிக்கு 3.5 கிலோமீட்டர் செல்லும் அளவுக்கு அதனுள் இரண்டு மின்சார மோட்டாரும், ஆறு லித்தியம் அயன் பேட்டரியும் இருந்தது. மேலும் படிக்கட்டில் ஏறும் திறனும், 540 கிலோ எடையை தூக்கும் திறனும் இந்த ரோபோட்டுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

தீவிபத்தில் சிக்கியிருக்கும் மனிதர்களை காப்பாற்றும்
அதேபோல் தீவிபத்தில் சிக்கியிருக்கும் மனிதர்களை காப்பாற்றும் திறனும், அரிய பொருட்களை தீயில் இருந்து பாதுகாத்து வெளியே கொண்டு வரும் திறனும் இந்த ரோபோட்டுக்கு உண்டு. இந்த ரோபோட்டை 1000 அடி தொலைவில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கலாம். கிட்டத்தட்ட ஒரு கேம் விளையாடுவது போன்றுதான் இந்த ரோபோட்டை இயக்குவதும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த ரோபோட் குறித்து யாரும் குறிப்பிடவில்லை
இந்த ரோபோட்டை நோட்ரே டேம் தேவாலயத்தில் தீவிபத்தில் பயன்படுத்தியதால் இந்த மிகப்பெரிய தீ விபத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும், ஒரே ஒரு தீயணைப்பு துறை அதிகாரி மட்டுமே காயம் அடைந்தனர். ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. இதற்கு இந்த ரோபோட்டுக்கும், இதனை உருவாக்கிய நிறுவனத்திற்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். அனைத்து செய்திகளிலும் இந்த தீவிபத்தை கட்டுப்படுத்த 400 தீயணைப்பு வீரர்கள் போராடியதாகவும் மருத்துவ நிபுணர்கள் உதவியதாகவும் குறிப்பிடப்பட்டதே தவிர, இந்த ரோபோட் குறித்து யாரும் குறிப்பிடவில்லை.


Click it and Unblock the Notifications