பூமியில் உள்ள கடல்கள் மற்றும் நீர்வளங்கள் காணாமல் போனால் மனித இனத்தின் விதி என்னவாகும்?
பூமியில் உள்ள கடல்கள் மற்றும் நீர்வளங்கள் எல்லாம் வற்றிப்போனால், நம்முடைய மனித வாழ்க்கை என்னவாகும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நம்முடைய பிஸியான வாழ்க்கை ஓட்டத்தில் நிச்சயமாக இதைப் பற்றி எல்லாம் நாம் யோசித்திருக்க வாய்ப்பே இல்லை தான். இருந்தாலும் ஒரு நிமிடம் பூமியின் உள்ள கடல்கள் மற்றும் நீர்வளங்கள் எல்லாம் காணாமல் போனால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள். ஒட்டுமொத்த பூமியும் பாலைவனமாகக் காட்சியளிக்கும் தானே.

பூமி நீரால் எத்தனை சதவீதம் மூடப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?
நாம் வாழும் பூமியானது சூரியனிலிருந்து மூன்றாவது கிரகமாக இருக்கிறது. சூரியனைச் சுற்றி வரும் ஒன்பது கிரகங்களில் உயிர் உள்ள ஒரே கிரகம் பூமி மட்டும் தான். பூமியின் நிலப்பரப்பு என்பது சுமார் 29% கண்டங்கள் மற்றும் தீவுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பூமியின் பெரும் பகுதி 71% நீரால் மூடப்பட்டிருக்கிறது, அதுவும் பெரும்பாலான இடம் பெருங்கடல்களால் நிரப்பப்பட்டுள்ளது.

கடல் வளத்தை நம்பி வாழும் மனிதர்கள்
இதுபோக ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளும் பூமியில் உள்ளது, இதுவே பூமியில் உயிர்கள் வாழ முக்கிய காரணமாக இருக்கிறது.பூமியில் உள்ள பெரும்பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது, பூமியில் உள்ள கடல் வளத்தை நம்பி சுமார் 37 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் என்று ஒரு ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. கடலை சார்ந்து வாழ்வது மனிதன் மட்டுமின்றி, கடலில் ஏராளமான உயிர்களும் வாழ்கின்றது.

பூமியில் கடல் காணாமல் போனால் இதுதான் முதலில் நடக்கும்
கடல் மனித வாழ்க்கைக்கும், பிற உயிர்களுக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பதிவைப் படிக்கப்படிக்கத் தெரிந்துகொள்வீர்கள்.பூமியில் உள்ள கடல்கள் எல்லாம் திடீரென காணாமல் போனால், முதலில் கடலில் பயணித்துக் கொண்டிருக்கும் கப்பல்கள் எல்லாம், கடலின் அடிமட்டத்திற்குச் சென்று நொறுங்கிவிடும். கடலில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் நீர் இல்லாமல் உடனடியாக இறந்துவிடும்.

மனித இனத்திற்கு ஏற்படக்கூடும் முதல் சிக்கல் இதுவாக தான் இருக்கும்
கடலின் அடியில் இருக்கும் கரிமப்படிமங்கள் அனைத்தும் நீர் இல்லாமல் அழுக ஆரம்பித்து விடும். ஏராளமான நீர் வாழ் உயிர்களின் உயிரிழப்பால் பூமி முழுதும் அழுகிய துர்நாற்றம் வீசத் துவங்கும்.பூமியில் உள்ள கடல்கள் எல்லாம் காணாமல் போனால், சுமார் 1.3 பில்லியன் க்யூபிக் கிலோ மீட்டர் காலியிடம் பூமியில் உருவாகும். இந்த காலியிடத்தைக் காற்று வேகமாக நிரப்பத் துவங்கும், இதன் விளைவாக வளி மண்டலத்தின் அடர்த்தி பெருமளவு குறையும்.

அடர்த்தியற்ற காற்றைச் சுவாசிக்க நேரிடும்
இதுதான் மனிதர்கள் அனுபவிக்கப்போகும் முதல் மாற்றமாக இருக்கும், இதன் காரணமாக உயரமான இடங்களில் வாழும் மக்கள் அடர்த்தியற்ற காற்றைச் சுவாசிக்க நேரிடும்.சரியாகச் சொன்னால் எவரஸ்ட் மலைப்பகுதியில் உள்ள ஆபத்தான பகுதியில் காற்று எப்படி இருக்குமோ, அப்படியான காற்றைச் சுவாசிக்க நேரிடும். வளி மண்டலத்தில் உள்ள காற்று மூலக்கூறுகளின் அளவு குறையும் காரணத்தினால் வெப்ப நிலையும் குறைய ஆரம்பிக்கும்.

97 சதவீத கடல் நீர் பூமியில் இல்லாமல் காணாமல் போனால்
கடல் காணாமல் போனால் அடுத்த சிக்கல் நீர் சுழற்சி முறை உடையும் ஆபத்தை உருவாக்கும். பூமியில் உள்ள 97% நீர், கடல் நீர் தான் என்பதே உண்மை.இந்த 97 சதவீத கடல் நீர் பூமியில் இல்லாமல் காணாமல் போனால், பூமியில் மழையையும், பனிப்பொழிவையும் காண்பது என்பதே மிகவும் அரிதானதாக மாறிவிடும். இதன் காரணமாக ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளில் சிறிய அளவு கூட தண்ணீர் இருக்காது.

பூமியின் நீர் சுழற்சி முறை உடைந்துவிடுமா?
நீர் சுழற்சி முறை உடைந்தால் மேக கூட்டங்களும் காணாமல் போய்விடும். இதனால், சூரிய வெப்பத்தின் தாக்கம் முழுமையாகப் பூமியின் மேல் விழும். அதிக வெப்பம் காரணமாகப் பனிப்பாறைகள் வேகமாக உருகி முழு கிரகமும் பாலைவனமாக மாறிவிடும். பூமியில் மூன்றில் இரண்டு பங்கு கார்பன்-டைஆக்சைட் வாயுவைக் கடல்பாசிகள் தான் உருவாக்குகிறதாம்.

மனித இனம் உயிர் வாழ முடியாத நிலை உருவாகும்
இவை அழித்துவிட்டால் பூமியின் வளி மண்டலத்தில் உள்ள கார்பனின் தன்மை அதிகரிக்கும், இதனால் மனித உயிர் வாழத் தேவைப்படும் மிக முக்கியமான ஆக்சிஜனின் அளவு குறைந்து, கார்பன்-டைஆக்சைட் அதிகரித்துவிடும். பூமியில் உள்ள தாவரங்கள் எல்லாம் அழிந்து காய்ந்துபோகும். அடுத்து காட்டுத்தீக்கள் கட்டுப்படுத்த முடியாத அளவில் உருவாகும்.

கொஞ்சம் கொஞ்சமாக அழியும் நிலை
கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீக்கள் பூமியில் ஆபத்து மிகுந்த க்ரீன்ஹவுஸ் வாயுக்களை அதிகம் உருவாக்கும். போதிய மழை இல்லாமல் உணவு உற்பத்தி, குடிக்க குடிநீர் என்று எதுவும் இல்லாமல் மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழியும் நிலை உருவாகும்.

கடலை பாதுகாப்போம்.. இயற்கையுடன் வாழ்வோம்
இப்போது கடலின் உண்மையான மகிமை என்ன என்பதை நாம் உணர்ந்திருப்போம், நம்மை சுற்றியுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துவது இதன் காரணமாகத் தான். இனியாவது கடலை பாதுகாப்போம்.


Click it and Unblock the Notifications