அணு ஆயுதங்களால் சூறாவளிகளைத் தடுத்து நிறுத்த முடியுமா? டிக்..டிக்… டிக்..!
விண்கற்களை அணுக்குண்டு மூலம் வெடித்துச் சிதறடிக்கச் செய்வது என்பது ஒரு மோசமான ஐடியா.
சூறாவளி, சுனாமி, எரிமலை வெடிப்பு, நில அதிர்வு என இயற்கைச் சீற்றங்கள் மனித சமூகத்துக்குப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் “மைக்கேல்” எனப் பெயர் வைக்கப்பட்ட (Hurricane Michael) சூறாவளிக் காற்றால் அமெரிக்காவில் பெரும் சேதம் விளைந்தது. காற்றின் வேகத்தாலும், வெள்ளப் பெருக்காலும் பல நகரங்கள் நிலைகுலைந்து போயின. இந் நிலையில்தான் அமெரிக்காவில் உள்ள தேசியக் கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பின் (National Oceanic and Atmospheric (NOAA) ) தலைமையகம் ஒரு வித்தியாசமான கேள்வியை எதிர் கொண்டது. “அணுக்குண்டுகளை வெடிக்கச் செய்வதன் மூலம் சூறாவளிகளைத் தடுத்து நிறுத்த முடியாதா?” என்பதுதான் அந்தக் கேள்வி.

புரூஸ் வில்லீஸ் நடித்து 1998 ஆம் ஆண்டு வெளிவந்த Armageddon என்னும் ஹாலிவுட் திரைப்படத்திலும் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த டிக்.. டிக்… டிக்.. என்னும் தமிழ்ப் படத்திலும், பூமியை நோக்கி வரும் விண்கல்லால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்க, அந்த விண்கல்லை அணுக்குண்டு மூலம் வெடிக்கச் செய்து வானிலேயே சிதறடிக்கச் செய்வது போலக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இது சாத்தியமா? அப்படியே வெடிக்கச் செய்தாலும் சிதறிய ஆயிரக்கணக்கான விண்கற்கள் பூமியின் பல இடங்களிலும் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தாதா? என்னும் கேள்விகள் எழுவது இயற்கைதான்.

அணுக்குண்டு
விண்கற்களை அணுக்குண்டு மூலம் வெடித்துச் சிதறடிக்கச் செய்வது என்பது ஒரு மோசமான ஐடியா. அதைப் போலத்தான் அணு ஆயதங்களைப் பயன்படுத்தி சூறாவளியைச் சுக்கு நூறாக்க நினைப்பதும் ஒரு மோசமான ஐடியா. இருந்தாலும் ராபின் ஜார்ஜ் (Robin George Andrews ) என்னும் அறிவியல் இதழாளர் இது ஏன் நடைமுறைச் சாத்தியம் இல்லை என்பது குறித்தும், அதனுடைய எதிர் விளைவுகள் குறித்தும் சில கருத்துக்களை முன்வைக்கிறார் அவற்றை இங்குக் காண்போம்.

சூறாவளிக் காற்று
பொதுவாக, சூறாவளிக் காற்று என்பது மிகவும் சக்தி வாய்ந்த இயற்கை நிகழ்வு ஆகும். ஒரு சராசரியான சூறாவளிக் காற்று ஒரு நாளைக்கு 1.3 x 1017 ஜூல்ஸ் அளவுக்கு இயக்க ஆற்றலை (kinetic energy) வெளியிடுகிறது. அவை காற்றாக மாறுகிறது. காற்று என்பது சூறாவளியின் சிறு கூறு. அதே போல ஒரு சராசரியான சூறாவளிக் காற்று ஒரு நொடிக்கு 6x1014 ஜூல்ஸ் அளவுள்ள ஆற்றலை வெளியிடுகிறது. ஒரு நாள் முழுவதும் இந்த ஆற்றல் வெளிப்பட்டால் அது 52 பில்லியன் மின்னல்களுக்குச் சமமான ஆற்றலாக மாறும். இது உலகம் முழுவதற்கும் 200 ஆண்டுகளுக்குத் தேவையான மின்சார ஆற்றலுக்குச் சமமானது ஆகும்.

சூறாவளியின் ஆற்றல் பன்மடங்கு பெரியது
அணு ஆயுத ஆற்றலை இந்த ஆற்றலோடு ஒப்பிட முடியாது. இதுவரை வெடித்துச் சோதனை செய்யப்பட்ட அணுக் குண்டுகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது சார் பாம்பா (Tsar Bomba) என்னும் அணுக்குண்டு ஆகும். இந்த குண்டு ஒரு நொடிக்கு 2.0 x 1017 ஜீல் அளவுக்கு ஆற்றலை வெளிப்படுத்தும். ஒரு நொடியில் வெளிப்படுத்தும் ஆற்றல் எனப் பார்க்கும் பொழுது அணுக்குண்டின் ஆற்றல் சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் இந்த ஆற்றல் தொடர்ச்சியாக நீடிக்காது. ஆனால் சூறாவளி ஒரு நாள் முழுவதும் தொடர்ச்சியாக, நிலையாகப் பேராற்றலை வெளிப்படுத்தக் கூடியது. எனவே ஆற்றலின் அடிப்படையில் பார்க்கும் பொழுது அணுஆயுத ஆற்றலைவிட சூறாவளியின் ஆற்றல் பன்மடங்கு பெரியது. அதனைப் போலவே, அணுக்குண்டு மிகப் பெரிய வெடிப்பை ஏற்படுத்தும் என்றாலும் அதனுடைய தாக்கம் சூறாவளியைப் போல பல நூறு கிலோ மீட்டர் தூரத்திற்குப் பரவாது. ஆக ஆற்றலுடன் ஒப்பிடும் பொழுது சூறாவளி முன்னால் அணுக்குண்டு தோற்றுவிடும்.

அழிவுக்கான தொழில்நுட்பம்
சரி இப்பொழுது அழுத்தத்திற்கு (Pressure) வருவோம். சூறாவளிக் காற்று என்பது குறைந்த அழுத்தம் கொண்ட பேரழிவுச் சக்தி. ஆனால் அணு வெடிப்பு என்பது உயர் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, மிகப் பெரிய அணு வெடிப்பின் மூலமாக சூறாவளியின் அழுத்தத்தை அதிப்படுத்தி அதனை வலுவிழக்கச் செய்யலாம். ஆனால் சூறாவளியின் அழுத்தத்தை மாற்றி அமைப்பதற்குத் தேவையான காற்றை சரியான திசையை நோக்கி நம்மால் செலுத்த முடியாது. எனவே, இங்கும் சூறாவளிதான் வெற்றி பெறுகிறது. ஆக, ஆற்றல், அழுத்தம் ஆகிய இரண்டு கூறுகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுதும் அணு ஆயுத பலத்தால் சூறாவளியைக் கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிகிறது.
அதெல்லாம் சரி, அணு ஆயுதங்களை வைத்துத்தான் இயற்கை ஆற்றலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமா? வேறு வழிகள் இல்லையா?
அணு ஆயுதம் என்பது மிகப் பெரிய அழிவுக்கான தொழில்நுட்பம். அதனை வைத்துக் கொண்டு இயற்கை ஆற்றலைக் கட்டுப்படுத்த எண்ணக் கூடாது.
சூறாவளி, சுனாமி, பெரும் வெள்ளம், நில அதிர்வு, எரிமலை வெடிப்பு ஆகிய இயற்கைச் சீற்றங்கள் எல்லாம் மனித சமூகத்துக்கு மிகப் பெரும் அழிவைத் தருகின்றன என்பது உண்மைதான். காரணம் என்ன? இத்தகைய இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் பாதையின் குறுக்கே மனித இனம் இருப்பதுதான். இதனால்தான் இயற்கைப் பேரழிவை நாம் ஏன் எதிர்கொள்ள நேரிடுகிறது?

நில அதிர்வு ஏற்படும்
நில அதிர்வு ஏற்படும் பகுதிகளின் மீது நாம் கட்டடங்களைக் கட்டுகிறோம். சுனாமி அலைகள் எழும் கடற்கரை ஓரங்களில் குடியிருப்புகளை அமைக்கிறோம். நில அதிர்வுகளைத் தாங்கக் கூடிய கட்டட அமைப்பில் குடியிருப்புகளை அமைக்கத் தவறுகிறோம். இயற்கைச் சீற்றங்கள் குறித்துச் சரியான நேரத்தில் முன் அறிவிப்பு விடுக்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் தவறுகிறோம். இயற்கைப் பேரழிவுக் காலத்தில் எப்படித் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற பயிற்சிகளைப் பொது மக்களுக்கு வழங்கத் தவறுகிறோம். ஆக, இயற்கைப் பேரழிவில் இருந்து தப்பிக்க இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று, இயற்கையை அதன் போக்கில் விட்டு விடவேண்டும். அல்லது இயற்கைப் பேரழிவில் இருந்து தப்பிப்பதற்கு ஏதுவாக, இயல்பான, இயற்கையான வழிமுறைகளைக் கடைப் பிடிக்கவேண்டும்.


Click it and Unblock the Notifications








