செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் அமெரிக்காவின் திட்டம் 2030 ஆம் ஆண்டுக்குள் நிறைவேறுமா ?
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 1960 மற்றும் 1970 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட அப்போல்லோ திட்டத்தைப் போல சந்திரனுக்கு மீண்டும் அமெரிக்கர்களை அனுப்ப வேண்டும் என விரும்புகிறார்.
2030 ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பி வைக்க வேண்டும் என்னும் உறுதியோடு அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், விண்வெளி ஆய்வாளர்களும், அமெரிக்க பாராளுமன்ற உரிப்பினர்களும் குறி்ப்பிட்ட ஆண்டுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது எனக் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 1960 மற்றும் 1970 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட அப்போல்லோ திட்டத்தைப் போல சந்திரனுக்கு மீண்டும் அமெரிக்கர்களை அனுப்ப வேண்டும் என விரும்புகிறார். ஆனால், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா செவ்வாய் கிரகத்துக்கு மனிதரை அனுப்பும் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்தார்.

நாசா
"செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்னும் குறிக்கோளுடன் செலவுகளுக்குத் திட்டமிட்டு நாசா செயல்பட்டு வருகிறது. நாசாவின் திட்டச் செலவுகளில் கை வைக்க நாங்கள் விரும்பவில்லை.." எனக் கூறுகிறார், ஃபுளோரிடாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர் பில் நெல்சன். ஃபுளோரிடாவில் உள்ள கேப் கார்னிவல் என்னும் இடத்தில்தான் கென்னடி விண்வெளி நிலையம் அமைந்துள்ளது.

2009 ஆம் ஆண்டு
" தன்னுடைய உயரிய குறிக்கோளை அடையக் கூடிய அளவுக்கு நாசாவிடம் பொருளாதார பலம் போதுமானதாக இல்லை" என, 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட, தன்னிச்சையான நிபுணர் குழுவான அகஸ்டின் குழு (Augustine Commission), தன்னுடைய அறிக்கையில் கூறியது.
"தற்போது நாசாவின் ஆண்டு பட்ஜெட் 18 பில்லியன் டாலராக உள்ளது (ஏறக்குறைய 1.23 இலட்சம் கோடி ரூபாய்). ஆனால், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 3 பில்லின் டாலர் (ஏறக்குறைய 20,600 கோடி ரூபாய்) தேவைப்படுகிறது." என்றும் இக்குழு தன்னுடைய ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

ஆய்வுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு
"நாசாவின் ஆய்வுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தற்போதைய நிலையிலேயே தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்னும் தன்னுடைய குறிக்கோளை 2050 ஆம் ஆண்டில்தான் நிறைவேற்ற முடியும்" என பில் நெல்சன் உறுதிபடக் கூறுகிறார்.
"அவ்வளவு காலம் காத்திருப்பதை நாங்கள் விரும்பவில்லை" எனவும் அவர் கூறுகிறார்.

சர்வதேச நாடுகள்
"சர்வதேச அளவிலான ஒத்துழைப்பும், தனியார் துறையின் பங்களிப்பும் இருந்தால் அமெரிக்காவின் செவ்வாய் கிரகத் திட்டம் விரைவில் நிறைவேற வாய்ப்பாக அமையும்" என, செவ்வாய் கிரக ஆய்வுக்கான தலைமைச் செயல் அதிகாரி கிரிஷ் கார்பெர்ரி (Chris Carberry) கூறுகிறார்.
"சர்வதேச நாடுகள், இத்திட்டத்தை அமெரிக்கா வழி நடத்த வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், அடிக்கடி அமெரிக்கா தன்னுடைய திட்டத்தை மாற்றிக் கொண்டிருப்பதை அந்நாடுகள் விரும்பவில்லை" என்று கிரிஷ் கார்பெர்ரி, அமெரிக்க செனட் உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

2030ஆம் ஆண்டுக்குள்
"2030ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப வேண்டும் என நாம் விரும்பினால் இன்னும் வேகமாக நாம் செயல்பட வேண்டும்" எனவும் கிரிஷ் கார்பெர்ரி கருதுகிறார்.
செவ்வாய் கிரகத்துக்குள் நுழைந்து மெதுவாகத் தரையிறங்கக் கூடிய வகையில் விண்கலத்தைத் தயார் செய்ய வேண்டும். அதுபோல செவ்வாய் கிரகத்தில் இருந்து விண்வெளி வீரர்களை மீண்டும் பூமிக்குப் பத்திரமாகத் திருப்பி அழைத்து வரும் வகையிலும் விண்கலம் வடிவமைக்கப்பட வேண்டும். இது போன்ற செயற்பாடுகளின் மீது விரைந்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பெக்கி விட்சன்
அமரிக்காவின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்களும் நாசாவின் செயல் திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கிரிஷ் கார்பெர்ரி கூறுகிறார். அமெரிக்காவின் நாடாளுமன்றம் அடுத்த முறை நாசாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் பொழுது அதனுடைய தொலை நோக்குத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு அதிக நிதியை ஒதுக்கும் என நம்புவதாக டெக்ஸாசைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் டெட் குரூஸ் (Ted Cruz) கூறுகிறார்.
665 நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை புரிந்த, ஓய்வுபெற்ற அமெரிக்க விண்வெளி வீராங்கனையான பெக்கி விட்சனிடம் (Peggy Whitson) , "நாசா தன்னுடைய இலக்கினை அடைய என்ன தேவை?" என்று டெட் குரூஸ் கேட்டபோது, பெக்கி விட்சன் ஆக்கப்பூர்வமான பதில் அளித்தார்.
" எடுத்துக் கொண்ட இலக்கில் உறுதியாக இருக்க வேண்டும் அதுதான் மிக முக்கியமானது. அந்த இலக்குகளையும் தொலை நோக்குத் திட்டங்களையும் அடைவதற்கு ஏற்ற வகையில் நிதி துக்கீடும் ஆதரவும் இருந்தால் நம்முடைய நோக்கங்கள் விரைவில் நிறைவேறும்" என பெக்கி விட்சன் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications