செவ்வாய் கிரகத்தில் நீடிக்கும் மர்மம்: சந்தேகத்தை தீர்த்த சஹாரா பிளாக் பியூட்டி விண்கற்கள்.!
பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது.

செவ்வாய் கிரகத்தின் அமைப்புகள், சூழ்நிலைகள் ஆகியவற்றை ஆராயப் பல விதமான செயற்கைக்கோள்கள் அதை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கின்றன. அதேபோல் மக்களுக்கு செவ்வாய் கிரகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் உள்ளது என்று தான் கூறவேண்டும், இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஒரு அருமையான தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது செவ்வாய் கிரகத்தில் 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு (ஒரு பில்லியன் - 100 கோடி) முன்பு தண்ணீர் உருவாகியிருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை. ஆனால் அதற்கு முன்பே அதாவது 4.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு தண்ணீர்உருவாகியிருக்கலாம் என டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு இப்போது கண்டறிந்துள்ளது.

குறிப்பாக ஒரு விண்கல்லில் உள்ள கனிமக் கலவையை ஆய்வு செய்ததன் மூலம் இந்த முடிவுக்கு அந்த குழு வந்துள்ளது. மேலும் பிளாக் பியூட்டி என்ப் பெயரிடப்பட்ட இரு விண்கற்கள் சஹாரா பாலைவனத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டன. இந்த விண்கற்கள் தொடர்பாக இதுவரை பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு செவ்வாய் கிரகம் தொடர்பாக ஏராளமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இப்போது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் தொடர்பான தேடலுக்கு இந்த விண்கல் உதவியுள்ளது. இந்த விண்கற்கள் ஆரம்பகால துண்டுகள் 4.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் உருவாகியிருக்கலாம் என்று முதல்கட்டமாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். பின்பு இரு கற்களில் 50 கிராம் எடை கொண்ட ஒரு விண்கல்லை குழுவினர் ஆய்வு செய்தபோது, அந்த விண்கல்லில்உள்ள உடைந்த பாறை வடிவமானது அந்த விண்கல்லில் உள்ள மாக்மா-விலிருந்து (அதிக வெப்பமான நீர்) உருவாகின்றன என்பதும், அவை பொதுவாக ஆக்சிஜனேற்றத்தால் ஏற்படுகின்றன என்பதும் தெரியவந்தது.

பின்பு 4.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் அல்லது அதன் தரைப் பகுதிக்கு அடியில் தண்ணீர் இருந்திருக்கும்போது மட்டுமே இந்த ஆக்சிஜனேற்றம் சாத்தியமாகியிருக்கும் என்று கூறியுள்ளார் டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர் தாகஷி மிகோச்சி.

இந்த செவ்வாய் கிரக விண்கல் மீதான இந்த பகுப்பாய்வு முடிவானது, கிரகங்கள் உருவாகும்போது இயற்கையாக உருவாகும் பல பொருள்களில் தண்ணீரும் ஒன்றாக இருந்திருக்கலாம் என்கிற கருத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது என்று தான் கூறவேண்டும். பின்பு இந்த கண்டுபிடிப்பானது தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்ற கேள்விக்கு பதிலளிக்க ஆராச்சியாளர்களுக்கு உதவக் கூடும்.

குறிப்பாக இது உயிர்களின் தோற்றம் மற்றும் பூமிக்கு அப்பாற்பட்ட வாழ்க்கைக்கான ஆய்வு பற்றிய கோட்பாடுகளிலும் எதிரொலிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும் இந்த தகவலை சயின்ஸ் டெய்லி என்ற வலைத்தளம் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் மூன்று ஏரிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்த நிலையில், தற்சமயம் தண்ணீர் பற்றிய மேலும் ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications