ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழும் உலகின் முதல் உயிரினம் கண்டுபிடிப்பு! எப்படி இது சாத்தியம்?
ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர்வாழக்கூடிய உலகின் முதல் உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆம், நீங்கள் சரியாகத் தான் படித்தீர்கள். உயிர் வாழ இந்த உயிரினத்திற்கு ஆக்ஸிஜன் தேவையில்லையாம். இது எப்படி சாத்தியம்? ஆக்ஸிஜன் இல்லாமல் ஒரு உயிர் எப்படி உயிர் வாழ்கிறது என்று அடுத்தகட்ட ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

நம் மண்டைக்குள் ஆழமாக புகுத்தப்பட்ட தகவல்கள் இனி முழுமையாக செல்லாது
நாம் பள்ளியில் படிக்கும் பொழுதே நம் மண்டைக்குள் ஆழமாக சில விதிகளைப் புகுத்திவிட்டார்கள், ஈர்ப்பு விசையினால் தான் நாம் பூமியில் நிற்கிறோம், ஒளி ஒலியை விட வேகமாக பயணிக்கும் மற்றும் அனைத்து உயிர் வடிவங்களும் உயிர் வாழ ஆக்ஸிஜன் கட்டாயம் தேவை போன்ற தகவல்களை முழுமையாக நம்மை நம்ப வைத்துவிட்டனர். ஆனால், இனி இந்த கூற்று முழுமையாகச் செல்லாது.

உயிர் வாழ ஆக்ஸிஜன் கட்டாயம் தேவை இல்லை
ஏனென்றால், அனைத்து வாழ்க்கை வடிவங்களும் உயிர் வாழ ஆக்ஸிஜன் கட்டாயம் தேவை இல்லை என்று அண்மையில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது எப்படி சத்தியம் என்று தானே கேட்கிறீர்கள்? சொல்கிறோம் வாருங்கள், ஜெல்லிஃபிஷ் மீனுடன் தொடர்புடைய ஒரு சிறிய ஒட்டுண்ணி ஆக்ஸிஜன் இல்லாமல் இந்த பூமியில் உயிர் வாழ்ந்து வருகிறது என்று இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சால்மன் மீன்களுக்குள் காணப்படும் ஒட்டுண்ணி
எப்படி இதை விஞ்ஞானிகள் உறுதியுடன் தெரிவித்தார்கள் தெரியுமா? அது மிகவும் எளிது, ஏனென்றால் ஆக்ஸிஜனை செயலாக்க இந்த உயிரினத்தில் எந்த திறனும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹென்னெகுயா சால்மினிகோலா(Henneguya salminicola) என்றழைக்கப்படும் இந்த ஒட்டுண்ணி, சால்மன் மீன்களுக்குள் காணப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை வருடங்களாக இதை யாரும் கவனிக்கவில்லை.

ஏரோபிக் சுவாசம் இல்லாமல் ஒரு உயிரினமா?
"ஏரோபிக் சுவாசம் அனைத்து விலங்குகள் மற்றும் உயிரினங்களில் நிறைந்திருப்பதாகக் கருதப்பட்டது, ஆனால் இப்போதைய கண்டுபிடிப்பு இது அப்படி இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார். ஏரோபிக் சுவாசம் என்பது ஒரு முக்கிய ஆற்றல் மூலமாகும், ஆனால் இந்த முக்கியமான பாதையைப் பின்பற்றாத ஒரு அரியவகை உயிரினத்தை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் என்று பேராசிரியர் டோரதி ஹுச்சான் கூறியுள்ளார்.

மைட்டோகாண்ட்ரியாவே இல்லை அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்
மைட்டோகாண்ட்ரியா என்பது "பெரும்பாலான உயிரணுக்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் ஒரு உறுப்பு, இதன் உதவியுடன் தான் உயிரினங்களில் சுவாசம் மற்றும் ஆற்றல் உற்பத்தி உயிர்வேதியியல் செயல்முறைகளை நிகழ்த்தி வருகின்றன." ஆனால், ஹென்னெகுயா சால்மினிகோலாவின் உடலில் மைட்டோகாண்ட்ரியாவே இல்லை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழும் உலகின் முதல் உயிரினம்
ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழும் உலகின் முதல் உயிரினம் இது என்று, இந்த ஆய்வின் தகவல்கள் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் புரோசிடிங்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டுண்ணி எவ்வாறு ஆற்றலை உருவாக்குகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேபோல், இந்த ஒட்டுண்ணி ஆக்ஸிஜன் இல்லாமல் வேறுபட்ட சுவாச பழக்கத்தைக் கொண்டுள்ளதா என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

புதிய பரிணாம வளர்ச்சிப் பாதை உருவாகலாம்
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த ஒட்டுண்ணி பொதுவாகக் காற்றில்லாமல் வாழக்கூடிய உயிரினமாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. காற்றில்லாமல் வாழக்கூடிய உயிரினம் என்ற புதிய வகையை இந்த ஒட்டுண்ணி உருவாக்கியுள்ளது. இது ஒரு புதிய பரிணாம வளர்ச்சிப் பாதையை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும், ஆக்சிஜன் இல்லாமல் சில உயிரினங்கள் வாழ முடியும் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications