பகீர் கிளப்பும் விஞ்ஞானிகள்.. கிறிஸ்துமஸுக்கு முன் இது நடக்கும்.. பூமியை நெருங்கும் அடையாளம் தெரியாத பொருள்!
"டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே புதுப்புது பீதிகள் தானாக கிளம்பும்" என்பதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய தகவலை வெளியிட்டு உள்ளனர். அதுவும் கிறிஸ்துமஸுக்கு முன்பாக அது நடக்கும் என்றும் கூறி உள்ளனர்!
Christmas-க்கு முன்பாக என்ன நடக்க உள்ளது? எது பூமியை நெருங்குகிறது? அதில் என்ன மர்மம் உள்ளது? இது உண்மையிலே பீதி அடைய வைக்க கூடிய விஷயமா அல்லது ஓவர் பில்ட்-அப் செய்யப்படுகிறதா? இதோ விவரங்கள்:

இதை "அடையாளம் தெரியாத பொருள்" என்று கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது!
ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (European Space Agency) கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸுக்கு முன்பாக, அதாவது டிசம்பர் 20 ஆம் தேதிக்கு முன்பாக மிகவும் "மர்மமான" ஒரு சிறுகோள் பூமியை கடக்கும்.
அந்த சிறுகோளை "அடையாளம் தெரியாத பொருள்" என்று கூறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் - குறிப்பிட்ட சிறுகோள் பற்றி எந்த விதமான முக்கிய தகவல்களும் நம்மிடம் இல்லை!
அதாவது அந்த சிறுகோள் எதனால் ஆனது என்பது யாருக்குமே தெரியாது. அதுமட்டுமல்ல அதன் அளவு என்ன? அது எவ்வளவு பெரியது? அது எப்படி சுழல்கிறது? அதன் சுற்றுபாதை என்ன? என்பது பற்றியும் கூட யாருக்கும் தெரியாது!

ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் உறுதியாக தெரியும்!
கிறிஸ்துமஸுக்கு முன்பாக பூமியை கடக்கவுள்ள அந்த சிறுகோளை பற்றிய போதுமான விவரங்கள் இல்லாவிட்டாலும் கூட, அது சரியாக எப்போது பூமியை கடக்கும் என்கிற தேதி(கள்) கண்டறியப்பட்டுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப்படி, குறிப்பிட்ட விண்வெளி பாறை ஆனது டிசம்பர் 15 முதல் டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் பூமியை கடக்கும்.
அப்படி நடக்கும் போது - அந்த சிறுகோளிற்கும் நமது பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா? - சுமார் 6,86,000 கிமீ இருக்கும்!

இந்த சிறுகோள் பூமிக்கான அச்சுறுத்தலாக மாறுமா?
உண்மையில் இந்த சிறுகோளால் நம் பூமிக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்படப்போவதில்லை. ஆனால் இதை கூர்ந்து கண்காணிப்பதால் நமக்கு ஒரு மிகப்பெரிய நல்லது நடக்கும்.
அது என்னவென்றால் - இதுபோன்ற ஆபத்து இல்லாத விண்கற்களை / சிறுகோள்களை கண்காணிப்பதன் வழியாக அபாயகரமான விண்கற்களை பற்றிய முக்கிய நுண்ணறிவுகளை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
அந்த படிப்பினைகள், இன்று இல்லை என்றாலும் கூட என்றாவது ஒருநாள் நமக்கும், நம் பூமிக்கும் உதவிகரமாக இருக்கலாம்! ஏனென்றால், எல்லா விண்கற்களுமே ஆபத்து இல்லாதவைகள் என்று கூறிவிட முடியாது!

ஒரு விண்கல் பூமி மீது வந்து மோத எவ்வளவு சாத்தியக்கூறுகள் உள்ளது?
இந்த கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கீர்கள் என்றால், உங்கள் வாழ்நாளில் அப்படி ஒரு சம்பவம் நடக்க போவதில்லை.
ஏனென்றால் ஒவ்வொரு நூறு மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஒரு பெரிய விண்கல் வந்து பூமியை தாக்கும் சம்பவம் நடந்துள்ளது.

எந்த கவலையும் வேண்டாம்!
ஒவ்வொரு நாளும் சின்னச்சின்ன விண்கற்கள் ஆனது பூமி மீது விழுந்துகொண்டே தான் இருக்கின்றன. ஆனால் அளவில் பெரிய விண்கற்கள் ஆனது பூமி மீது வந்து மோதும் வாய்ப்புகள் மிக மிக குறைவு!
அதுமட்டுமின்றி "இதெல்லாம்" பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று வகைப்படுத்தப்பட்ட பெரும்பாலான விண்கற்கள் / சிறுகோள்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டு விட்டன மற்றும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றன. எனவே "விண்கல் / சிறுகோள் மோதல்" தொடர்பான எந்த கவலையும் உங்களுக்கு வேண்டாம்!
Photo Courtesy: ESA / NASA/ Wikipedia


Click it and Unblock the Notifications