குஜராத்தில் விழுந்த 2 விண்கல்.. ஆய்வு செய்த விஞ்ஞானிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. இந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷம்!
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 க்கும் மேற்பட்ட விண்கற்களில் (Meteorites) பூமியில் வந்து விழுகின்றன. ஆனால் அவைகளில் 5 அல்லது 6 விண்கற்கள் மட்டுமே மனிதர்களின் கைகளில் சிக்குகின்றன. அப்படியாக சேகரிக்கப்படும் விண்கற்களை ஆராய்ச்சி செய்து பார்க்கும் வரையிலாக, அதனுள் புதைந்து இருக்கும் உண்மை ஒரு மர்மமாகவே இருக்கும்!
சமீபத்தில் குஜராத்தில் (Gujarat) விழுந்த 2 விண்கற்களும் கூட அப்படித்தான். சரியான நேரத்தில் சேகரிக்கப்பட்டு, ஆய்வுகளுக்கு உட்படுத்திய பிறகே, அந்த விண்கற்களுக்குள் ஒளிந்திருந்த வியப்பூட்டும் விஷயங்களும், அவைகள் வெறும் விண்கற்கள் அல்ல, இந்தியாவிற்கு கிடைத்த விண்வெளி பொக்கிஷம் என்கிற உண்மையும் விஞ்ஞானிகளுக்கு தெரிய வந்தது!

2 துண்டுகளாக பிளந்த ஒரே விண்கல்
சரியாக 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று பூமியை நோக்கி வந்த ஒரு விண்கல், விண்வெளியிலேயே 2 துண்டுகளாக பிளவுபட்டு, குஜராத்தின் பனஸ்கந்தாவில் உள்ள இரண்டு வெவ்வேறு கிராமங்களில் விழுந்தன.
அதில் ஒரு துண்டு ரந்திலா கிராமத்தில் உள்ள வேப்ப மரத்தில் மோதி பல துண்டுகளாக சிதறி கீழே விழுந்துள்ளது. இரண்டாவது துண்டு, ரந்திலா கிராமத்தில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள ராவெல் என்கிற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் அருகில் விழுந்து நொறுங்கியுள்ளது.
170 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு கிடைத்த விண்வெளி பொக்கிஷம்
குஜராத்தின் 2 வெவ்வேறு கிராம பகுதிகளில் விழுந்த விண்கற்கள், மிகவும் அரிய ஆபிரைட் (Aubrite) விண்கல் வகையை சேர்ந்தவைகள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (Physical Research Laboratory - PRL) சேர்ந்த விஞ்ஞானிகள், இந்த விண்கல் "மிகவும் அரிதானது மற்றும் தனித்துவமானது" என்று கூறியதோடு நில்லாமல், இன்னொரு ஆச்சரியமான தகவலையும் பகிர்ந்துள்ளனர்.
அது என்னவென்றால் குஜராத்தில் விழுந்த விண்கற்கள், சுமார் 170 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் விழுந்துள்ள 2-வது ஆபிரைட் வகை விண்கல் ஆகுமாம். அதாவது இது இந்தியாவிற்கு கிடைத்துள்ள மிகவும் அரிய விண்வெளி பொக்கிஷமாகும்!
இந்தியாவில் விழுந்த முதல் ஆபிரைட் விண்கல் எங்கு, எப்போது விழுந்தது?
இதுவரை இந்தியாவில் நூற்றுக்கணக்கான விண்கற்கள் விழுந்துள்ளன. ஆனால் குஜராத்தில் விழுந்தது போன்ற ஆபிரைட் வகை விண்கல், இதற்கு முன் ஒரே ஒரு முறை மட்டுமே இந்தியாவில் விழுந்துள்ளது. அது கடந்த 1852 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதியன்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பஸ்தியில் விழுந்தது.
இதுவரை உலகில் மொத்தம் ஆபிரைட் விண்கற்கள் விழுந்துள்ளன?
1836 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையிலாக, உலகளவில் குறைந்தது 12 இடங்களில் மட்டுமே ஆபிரைட் விண்கற்கள் விழுந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் மூன்று விண்கற்கள் ஆப்பிரிக்காவிலும், 6 விண்கற்கள் அமெரிக்காவிலும் விழுந்துள்ளன.
ஆபிரைட் விண்கற்கள் ஏன் மிகவும் அரிதான விண்வெளி பொருளாக பார்க்கப்படுகிறது?
என்சைக்ளோபீடியா ஆஃப் பிஸிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் (2003) படி, ஆபிரைட் விண்கற்கள் ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் உருவாக்கப்பட்ட கரடுமுரடான எரிமலை பாறைகள் (Coarse-grained Igneous Rocks) ஆகும்.
இவ்வகை விண்கற்களுக்குள் பூமியில் காணப்படாத பலவிதமான தாதுக்கள் (Minerals) இருக்கும். அவைகள் பிரபஞ்சம் தொடர்பான பல கேள்விகளுக்கான பதிலை நமக்கு வழங்கலாம்.
குஜராத்தில் விழுந்த விண்கற்கள் இன்னும் ஸ்பெஷல்
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, குஜராத்தில் விழுந்த ஆபிரைட் வகை விண்கற்களானது, நமது சூரிய குடும்பத்தில் உள்ள புதன் (Mercury) கிரகத்தின் மேற்பரப்பு நிலைமைகளுடன் ஒற்றுப்போகிறது மற்றும் மிகவும் தனித்துவமான பண்புகளையும் கொண்டுள்ளது.
ஆகையால் இது கிரகங்களின் பரிணாம வளர்ச்சி (Evolution of planets) தொடர்பான ஆய்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்!
Photo Courtesy: Wikipedia


Click it and Unblock the Notifications