இப்படி கூட நடக்குமா?ஆண் சவப்பெட்டிக்குள் இருந்த 'கர்ப்பிணி பெண்' மம்மி.!வரலாற்றில் நம்பமுடியாத புதிய திருப்பம்
தொல்லியல் ஆராய்ச்சியின் மூலம் பல புதிய தகவல்கள் மற்றும் வினோதமான பண்டைய காலத்துத் தகவல்களை நமது ஆராய்ச்சியாளர்கள் உலகம் முழுக்க கண்டறிந்து சேகரித்து வருகின்றனர். சமீப காலமாக தொல்லியல் ஆராய்ச்சியின் மூலம் நமது முன்னோர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்திருக்கும் என்பது போன்ற பல சுவாரசியமான தகவல்களைக் கட்டவிழ்த்து வருகிறோம். உலகில் இது வரை நடந்து வந்த பல தொல்லியல் ஆராய்ச்சிகளில் கிடைக்காத ஒரு புதிய கண்டுபிடிப்பு இம்முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதல் 'கர்ப்பிணிப் பெண்ணின் மம்மி' கண்டுபிடிப்பு
தொல்லியல் ஆராய்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் மம்மி உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கிடைத்த பண்டைய மம்மியின் சவப்பெட்டியைப் ஒருவழியாக திறந்து பரிசோதித்த ஆராய்ச்சியாளர்கள், அந்த மம்மியை ஆராய்ச்சியாளர்கள் முதலில் ஒரு ஆண் பாதிரியார் என்று தான் நம்பியுள்ளனர். காரணம், அந்த மம்மியின் சவப்பெட்டியில் அது ஒரு 'ஆண் பாதிரியார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மம்மி அடைத்து வைத்திருந்த பெட்டியைத் திறந்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போய்விட்டனர்.

ஆண்குறி இல்லாமல் மார்பகங்களுடன் இருந்த 'ஆண் பாதிரியார்' சவப்பெட்டி
ஆண் பாதிரியார் என்று பெயர் பொறிக்கப்பட்ட சவப்பெட்டியில் இருந்தது ஒரு ஆணின் உடலே இல்லை என்பது தான் ஆராய்ச்சியாளர்களை அதிர வைத்துள்ளது. சவப்பெட்டிக்குள் இருந்த மம்மிக்கு முதலில் ஆண் உறுப்பு இருந்ததற்கான அடையாளங்களே இல்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுவிட்டனர். எதிர்பார்த்ததுக்கு மாறாகப் பெட்டிக்குள் இருந்த மம்மி உடலிற்கு மார்பகங்கள் இருப்பதை அவர்கள் கண்டு குழப்பம் அடைந்துள்ளனர்.

ஆண் பாதிரியார் சவப்பெட்டிக்குள் எப்படி கர்ப்பிணி பெண்ணின் உடல் வந்தது?
ஆண் பாதிரியார் என்று பெயர் பொறிக்கப்பட்ட சவப்பெட்டிக்குள் எப்படி ஒரு பெண்ணின் உடல் இருக்க முடியும் என்று குழம்பிவிட்டனர். நிச்சயம் இது பிழையாக நடந்த ஒரு காரியமாக இருக்க முடியாது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.உடலைப் பரிசோதனை செய்து பார்த்த பிறகு, அது ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உடல் என்பதை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். முன்னர் நம்பியபடி அது ஒரு ஆணின் உடன் இல்லை என்பதையும், குறிப்பாக அது ஒரு ஆண் பாதிரியார் இல்லை என்பதையும் கண்டுபிடித்தனர்.

எக்ஸ்ரேவில் பதிவான குழந்தை மம்மியின் தடம்
எக்ஸ்ரே மற்றும் கம்ப்யூட்டர் ரிஸல்ட்களை நடத்திய பின்னர் அது ஒரு பெண்ணின் உடல் என்பதும், அந்த பெண் மம்மி ஒரு கர்ப்பிணிப் பெண் என்றும் முடிவுகள் வெளிவந்துள்ளது. வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் தடமும் எக்ஸ்ரேவில் பதிவாகியுள்ளது. இப்படி எதிர்பாராத பல திருப்பங்களை இம்முறை இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையின் படி, அந்த கர்ப்பிணி பெண்ணின் வயது சுமார் 20 முதல் 30 வருடங்கள் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எத்தனை மாதத்து கர்ப்பிணி பெண் இந்த தாய் என்று கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்
பதப்படுத்தப்பட்ட பெண் மம்மியின் வயிற்றுக்குள் இருந்த குழந்தையின் மண்டை ஓட்டின் அளவு, அந்த பெண் சுமார் 26 முதல் 28 வாரங்கள் வரை கர்ப்பமாக உயிருடன் இருந்ததாகக் காண்பிக்கிறது. மேலும், இது ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நன்கு பாதுகாக்கப்பட்ட பண்டைய மம்மி என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் முதல் 'கர்ப்பிணிப் பெண் மம்மி' இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மானுடவியலாளரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் சொன்ன உண்மை என்ன?
"எங்கள் முதல் ஆச்சரியம் என்னவென்றால், அதற்கு ஆண்குறி இல்லை, ஆனால் அதற்குப் பதிலாக மார்பகங்களும் நீண்ட கூந்தலும் இருந்தது, பின்னர் அது ஒரு கர்ப்பிணிப் பெண் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். சிறிய பாதத்தையும் பின்னர் கருவின் சிறிய கையும் பார்த்தபோது நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம், "என்று மானுடவியலாளரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான மார்செனா ஓசரேக்-ஸ்ஸில்கே கூறியுள்ளார்.

தங்க நாக்குடன் கண்டுபிடிக்கப்பட்ட 2000 வயதான மற்றொரு மம்மி
இந்த கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களுக்குக் பண்டைய காலத்து கர்ப்பம் பற்றிய ஆழமான நுண்ணறிவு மற்றும் பண்டைய காலங்களில் ஏற்படும் கர்ப்பகால சிக்கல்களுக்கும், சிக்கலை சரி செய்ய என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை அறியவும் உதவும் என்று தெரிவித்துள்ளார். மம்மி தொடர்பான மற்றொரு சமீபத்திய கண்டுபிடிப்பில், தங்க நாக்கைக் கொண்ட 2000 வயதான மம்மி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் பண்டைய எகிப்திய தளமான தபோசிரிஸ் மேக்னா என்ற இடத்தில் இந்த ஆண்டு பிப்ரவரியில் கண்டுபிடிக்கப்பட்டது.

'மரண முகமூடி' அணிந்திருந்த 2000 ஆண்டு பழமையான மம்மி கண்டெடுப்பு
கண்டுபிடிக்கப்பட்ட 16 அடக்கங்களில் ஒன்றில் தங்க நாக்கு மம்மி உடன் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அதேபோல், கண்டுபிடிக்கப்பட்ட மற்ற 15 அடக்கங்களும் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானவை என்றும், அவற்றில் ஒன்று 'மரண முகமூடி' அணிந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இறந்தபின் கடவுளுடன் பேச தங்க நாக்கா?
எகிப்திய தொல்பொருள் அமைச்சகத்தின்படி, தங்க நாக்குக்குப் பின்னால் இருந்த காரணம், இறந்தவர்கள் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் கடவுளுடன் பேச அனுமதிக்கும் என்று நம்பப்பட்ட நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் பல புதிய திருப்பங்களை தேடி, ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் தொல்லியல் ஆராய்ச்சியை தொடங்கியுள்ளனர். இன்னும் என்ன-என்ன சுவாரஸ்யமான தகவல்கள் வரும் காலத்தில் வெளியாகும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications