மங்கள்யான் மர்மம்: திடீர்னு எப்படி பேட்டரி காலி ஆகும்? மறைக்கப்படும் உண்மை?
உலக நாடுகளை - முக்கியமாக அமெரிக்காவை - வாய்ப்பிளக்க வைக்கும்படி, பல வகையான "சம்பவங்களை" இந்தியா நிகழ்த்தி உள்ளது; அதில் மங்கள்யானுக்கு (Mangalyaan) எப்போதுமே ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு!
ஏனென்றால், அமெரிக்காவில் ஒரு ஹாலிவுட் திரைப்படம் எடுக்கும் செலவில், இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு தனது விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது!

முதலில் வருத்தம்.. பின்னர் சந்தேகம்!
8 ஆண்டுகள் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த மங்கள்யான் விண்கலமானது, திடீரென்று செயல் இழந்து போனதும், விண்வெளி ஆரய்ச்சியாளர்கள் தொடங்கி பொதுமக்கள் வரையிலாக அனைவரும் தத்தம் வருத்தங்களை பதிவு செய்தனர்.
ஆனால் ஒரு முக்கியமான தகவல் வெளியான பின்னர், வருத்தப்பட்ட அனைவருமே சந்தேகப்பட தொடங்கினர்!

அதென்ன தகவல்?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO), மங்கள்யான் செயல் இழப்பு தொடர்பாக ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்தது.
அது என்னவென்றால், மங்கள்யான் விண்கலம் வெறும் 6 மாதங்களுக்கு ஆய்வு பணிகளை செய்தால் போதும் என்கிற எண்ணத்தில் தான் கட்டமைக்கப்பட்டதாம். ஆனால் அது 8 ஆண்டுகள் வேலை செய்துள்ளதாம்!

கிளம்பியது புது சந்தேகம்?
இந்த தகவலை கேட்கும் எவருமே.. "அதெப்படிப்பா ? 6 மாதங்களுக்காக தயார் செய்யப்பட்ட ஒரு விண்கலத்தின் பேட்டரியில்.. கடந்த 8 ஆண்டுகளாக ஏற்படாத கோளாறு, திடீரென்று இப்போது மட்டும் எப்படி ஏற்படும்?" என்கிற கேள்வியை முன்வைக்கலாம்.
இது மிகவும் சகஜமான ஒரு சந்தேகம் தான் மற்றும் மிகவும் நியாயமான கேள்வி தான்!

ஆக.. மங்கள்யானின் மரணத்திற்கு பின்னால் எதோ மர்மம் இருக்கிறதோ?
ஆம்! ஆனால் அதை மர்மம் என்று கூற முடியாது; கண்டுகொள்ளப்படாத உண்மை என்று கூறலாம்!
கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பரில், இஸ்ரோவின் போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (PSLV) மூலம் விண்வெளிக்குள் ஏவப்பட்ட மங்கள்யான் ஆனது, 2014 ஆம் ஆண்டு செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது.
அது நடத்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு, மங்கள்யான் விண்கலம் செயல் இழந்து விட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கு எரிபொருள் மற்றும் பேட்டரி சக்தி தீர்ந்துவிட்டதாக காரணம் சொல்லப்பட்டது!

திடீரென்று எப்படி பேட்டரி காலி ஆகும்?
எண்ணில் அடங்காத ஆபத்துகள் மிகுந்த விண்வெளியில், 8 ஆண்டுகளாக "உயிர்பிழைத்த" மங்கள்யானின் பேட்டரி திடீர்ன்னு தீர்ந்து போனதற்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் - மீண்டும் மீண்டும் ஏற்பட்ட கிரகணங்கள் தானாம்!
மங்கள்யானின் சோலார் செல்களை (Solar Cell) பாதிக்கும் வண்ணம் ஏற்பட்ட கிரகணங்கள் தான் அதன் செயல் இழப்பிற்கு முக்கிய காரணம் ஆகும்!

ஏழரை மணி நேரம் நீடித்த கிரகணங்கள்!
மங்கள்யானின் விண்கலத்தின் பேட்டரி ஆனது, ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் மட்டுமே கிரகணத்தை கையாளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில கிரகணங்கள் ஏழரை மணி நேரம் வரை நீடித்ததன் விளைவாகவே, மங்கள்யானின் "மரணம்" ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது!

சூரிய ஒளி இல்லை என்றால்.. சார்ஜ் இல்லை!
நீண்ட நேரம் நீடித்த கிரகணங்கள் ஆனது, சூரிய ஒளியை மறைத்து, தானாகவே ரீசார்ஜ் ஆகும் திறன் கொண்ட மங்கள்யானின் சோலார் செல்களை சார்ஜ் ஆகவிடாமல் தடுத்துள்ளது.
அதன் விளைவாக, பூமியில் இருந்து சிக்னல்களை அனுப்புவதற்கும் பெறுவதற்குமான மங்கள்யானின் "சக்தியும்" குறைந்துள்ளது. இப்படியாகத்தான் மங்கள்யான் முற்றிலுமாக செயல் இழந்துள்ளது!

எது கிரகணங்களை ஏற்படுத்தியது?
மங்கள்யானின் செயல் இழப்பிற்கு பின்னால் உள்ள கிரகணங்கள் ஆனது செவ்வாய் கிரகத்தால் ஏற்பட்டதா அல்லது செவ்வாய் கிரகத்தின் நிலவுகளால் ஏற்பட்டதா? என்பதில் தெளிவு இல்லை!
ஆனால் அந்த கிரகணங்கள் தான், மங்கள்யானின் பேட்டரியை காலி செய்துள்ளது; மங்கள்யானை தானியங்கி இயக்கங்களை (Automated movements) செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளியது; மீட்கவே முடியாத இடத்தில் "மிதக்க" விட்டுள்ளது!
Photo Courtesy: ISRO, NASA, Wikipedia


Click it and Unblock the Notifications