இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு, இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.?
"கையில மைக் ஒன்னு கிடைச்சா.. என்ன வேணும்னாலும் பேசுவியா.??"
எப்படி உலக நாடுகள் வடகொரியாவை பார்த்து பீதி கொள்கிறதோ, அதேபோல வடகொரியா தன்னைத்தானே பார்த்து அச்சம் கொள்கிறது என்பதும் நிதர்சனமே. அதற்கு காரணம் வடகொரியாவின் மிகவும் அபத்தமான ஏவுகணை சோதனை தோல்விகள் தான்.

ஏவுகணை செலுத்திய வேகத்திலேயே ஒரு "யூ டர்ன்" போட்டு திரும்பி வடகொரியாவையே தாக்கினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. அந்த மாதிரியான ஆயுத தொழில்நுட்ப வளர்ச்சியை தான் வடகொரியா கொண்டுள்ளது. இம்மாதிரியான நிலைப்பாட்டில் ஒருமுறை, வடகொரியா ஒரு நம்ப முடியாத அறிவிப்பை நிகழ்த்தியது.

அதிசய மருந்து
அதாவது வட கொரிய சர்வாதிகாரியான கிம் ஜொங் உன் தனது நாட்டின் விஞ்ஞான முன்னேற்றங்கள் பற்றி சில "அற்புதமான" கூற்றுக்களை வெளியிட்டுள்ளார். அதன்கீழ் "எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், எபோலா மற்றும் புற்றுநோயை ஒழித்துக்கட்டுவதற்கான ஒரு அதிசய மருந்து ஒன்றை வடகொரியா உருவாக்கியுள்ளது" என்று நாட்டின் செய்தி நிறுவனத்திடமிருந்து பிரகடனம் செய்யப்பட்டது.

சும்மா சொல்லிக்க வேண்டியது தான்.!
இது அநேகமாக சாத்தியமே இல்லை. தோல்வியுற்ற ஏவுகணை சோதனையை எப்படி வெற்றிகரமாக முடிந்ததக வடகொரியா கூறுகிறதோ.? எப்படி வடகொரியாவின் பெல்லிஸ்டிக் ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் என்று நம்பப்படுகிறதோ.? அதே போலத்தான் இந்த அதிசய மருந்தும் - சும்மா சொல்லிக்க வேண்டியது தான்.!

உரத்திலிருந்து வளர்ந்த கூறு
வெளியான வடகொரியா அறிவிப்பானது "ஜின்ஸெங் (மெதுவாக வளர்ந்து வரும் வற்றாத தாவரங்களின் சதைப்பகுதிகளில் ஒன்றாகும்) உரத்திலிருந்து வளர்ந்த கூறு மற்றும் இதர பொருட்களின் கலவையே அந்த அதிசய மருந்து" என்கிறது. ஆனால் அந்த மருந்து சார்ந்த சிறப்பு கலவையை வெளிப்படுத்தவில்லை.

சாதனை
கும்டாங்-2 என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த அதிசய மருந்து ஒரு உட்செலுத்தக்கூடிய மருந்து என்றும், அது மிகப்பெரிய வெற்றிகளை உருவாக்கும் என்றும் வடகொரியா அறிவித்தது. கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் கொரிய மத்திய செய்தியாளர் டாக்டர் ஜோன் சுங் ஹுன் வெளியிட்ட அறிக்கையில் "பூமியின் அபூர்வமான கூறுகளை (மைக்ரோ - அடிப்படை உரங்கள்) ஜின்ஸெங்கின் உள்ளே செலுத்துவதின் மூலமாக ஆராய்ச்சியாளர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

வலுவான நோயெதிர்ப்பு
சிக்கலான கலவைகளின் மூலம் உருவான இந்த மருந்தை உடலினுள் செலுத்துவதின் மூலம் ஒரு வலுவான நோயெதிர்ப்பு செயலூக்கியாக செயல்படும் என்று கூறிய வடகொரியா, இந்த மருந்து பல்வேறு வீரியமுள்ள தொற்றுநோய் தடுக்கும் என்பதையும் அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்தது.

கொடுமை
எல்லாவற்றை விட பெரிய கொடுமை, ஆப்ரிக்காவில் உள்ள எச்ஐவி நோயாளிகளுக்கு இம்மருந்து பரிசோதிக்கப்பட்டதாகவும், சோதனைக்கு உலாக்கப்பட்ட ஒவ்வொருவரும் முன்னேற்றம் காண்பதாகவும் - அதாவது 56 சதவீதத்தினர் முழுமையாக குணப்படுத்தப்பட்டுள்ளனர், 44 சதவீதத்தினர் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளனர் - என்று வடகொரியா தெரிவித்தது தான்.

மருத்துவ பரிசோதனைகள்
அதோடு நிறுத்திக்கொள்ளாமல், வட கொரிய விஞ்ஞானிகள் இந்த மருந்தானது 'பலவகையான புற்றுநோய்களை' குணப்படுத்தும் திறனை கொண்டுள்ளதாகவும் வெளிப்படுத்தினர். ஆனால் அந்த கூற்றை ஆதரிக்கும் மருத்துவ பரிசோதனைகள் பற்றிய விவரங்களை யாரும் பிரகடனம் செய்யவோ அல்லது வழங்கவோ இல்லை.

சரியான பதில்
தன்னை மிகவும் பலமான மற்றும் திறன்மிகுந்த ஒரு நாடாக காட்டிக்கொள்ள விரும்பும் வடகொரியாவிற்கு - "கையில மைக் ஒன்னு கிடைச்சா.. என்ன வேணும்னாலும் பேசுவியா.??" என்ற உலக மக்களின் மைண்ட் வாய்ஸ் தான் சரியான பதிலாக இருக்கக்கூடுமென்று நம்புகிறேன்.


Click it and Unblock the Notifications