சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கோள்களைப் பற்றிய ஆய்வைத் தொடங்கியது நாசாவின் TESS செயற்கைக்கோள் !
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா “TESS” என்னும் செயற்கைக் கோளை விண்ணுக்கு அனுப்பியது.
கற்பனைக்கும் எட்டாமல், அறிவியலுக்கும் அடங்காமல் பரந்து விரிந்துள்ளது இந்தப் பிரபஞ்சம். அதனை முடிந்த அளவு அறிந்து கொள்ளத் துடிக்கிறது அறிவியலாளர்களின் நெஞ்சம். இந்த வானியல் ஆய்வின் ஒரு பகுதியாகப் புறக்கோள்களைப் (Exoplanet) பற்றிய ஆய்வு அமைந்துள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாகக் கொண்டு, வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.
சூரியனைச் சுற்றாமல் பிற நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்களைப் புறக் கோள்கள் என்கிறோம். இதனை, ஆங்கிலத்தில் “Exoplanet” என அழைக்கிறோம். இந்தப் புறக்கோள்களைத் தொலை நோக்கி வழியாகக் கூடப் பார்க்க முடியாது. இந்தப் புறக் கோள்கள் தாங்கள் சுற்றி வரும் விண்மீன்களின் பேரொளியில் மறைந்து விடுவதால் இவற்றைப் பார்ப்பது அரிதான செயல். எனவேதான் வானியல் அறிஞர்கள் புறக்கோள்களைக் கண்டறியவும், கணக்கிடவும் வேறு வகையான வழிமுறைகளைக் கையாளுகின்றனர்.

TESS செயற்கைக்கோள்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா "TESS" என்னும் செயற்கைக் கோளை விண்ணுக்கு அனுப்பியது. டிரான்ஸ்மிட்டிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட் - Transiting Exoplanet Survey Satellite - என்பதன் சுருக்கம்தான் TESS ஆகும். இந்தச் செயற்கைக் கோள் வான் வெளியில் உள்ள புறக்கோள்களைக் (Exoplanet) கண்டறிந்து அது பற்றிய தகவல்களைப் பூமிக்குத் தெரிவிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளது. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தச் செயற்கைக் கோள் தற்போது தன்னுடைய பணியைத் தொடங்கியுள்ளது. தனக்கு அருகே உள்ள விண்மீன்களைச் சுற்றி வரும் புறக்கோள்களைப் பற்றிய ஆய்வை இந்தச் செயற்கைக்கோள் மேற்கொண்டுள்ளது.

ஆகஸ்ட் முதல் தகவல்கள் தயார்!
TESS செயற்கைக் கோள் தன்னுடைய அறிவியல் ஆய்வை ஜீலை மாதம் 25 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் தன்னுடைய முதல் ஆய்வுத் தரவுகளை பூமிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு 13.5 நாட்கள் இடைவெளியில் சீராகத் தகவல்களை பூமிக்குத் தொடர்ந்து அனுப்பும். ஏனென்றால், TESS தன்னுடைய சுற்றுவட்டப் பாதையை ஒரு முறை சுற்றி வர 13.5 நாட்கள் ஆகும்.

இயக்குநர் பால் ஹெர்ட்ஸ்
" சூரிய மண்டலத்துக்கு அருகில் உள்ள விண்மீன் மண்டலங்களில் உள்ள புறக்கோள்களைக் கண்டு தகவல் தெரிவிக்கும் பணியை TESS செயற்கைக் கோள் தொடங்கிவிட்டதை நினைக்கையில் மிகுந்த எதிர்பார்ப்பும், ஆர்வமும் பெருகிவிட்டது" என்கிறார், நாசாவின் வான் இயற்பியல் பிரிவின் இயக்குநர் பால் ஹெர்ட்ஸ்.

விண்மீன்களைவிட கோள்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது
" நம்முடைய பிரபஞ்சத்தில் விண்மீன்களைவிட கோள்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனத் தெரிய வருகிறது. அந்த அற்புத உலகம் பற்றிய தரவுகளையும் தகவல்களையும் கண்டுபிடிக்க வேண்டிய பணி நம்மைச் சார்ந்தது" என ஆர்வம் பொங்கக் கூறுகிறார், பால் ஹெர்ட்ஸ்.

Transiting
TESS செயற்கைக் கோள் இரண்டு ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும். அப்பொழுது, அருகில் உள்ள பிரகாசமான விண்மீன்களைக் கண்காணிக்கும். அந்த விண்மீன்களின் பிரகாசமான ஒளியில் ஏற்படும் தாழ்நிலை மாறுபாடுகளை (Dips) TESS கவனிக்கும். ஒரு கோள் தன்னுடைய சுற்றுப் பாதையில் விண்மீனைக் கடக்கும் பொழுது அந்த விண்மீன் ஒளியில் ஒரு சிறு தடை அல்லது தாழ்நிலை ஏற்படும். அதனைக் கண்டு உணர்வதன் மூலம் TESS கோள்களின் நடமாட்டத்தைக் கவனித்து அந்தத் தகவல்களைச் சேகரித்து பூமிக்கு அனுப்பும். இது போன்று கோள்கள் விண்மீனைக் கடக்கும் நிலையினை ஆங்கிலத்தில் "transits" என வான் இயற்பியல் அறிஞர்கள் அழைக்கின்றனர். இந்த முறையைப் பயன்படுத்தி TESS செயற்கைக்கோள் ஆயிரக் கணக்கான புறக் கோள்களைக் (Exoplanet) கண்டறியும் என நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications