மார்ஸில் ஹெலிகாப்டர் பறக்கவிடப் போகும் நாசா.! எதுக்குன்னு தெரியுமா?
நாசா, செவ்வாய்க் கிரகத்தில் பறக்கக்கூடிய சிறிய தன்னாட்சி ஹெலிகாப்டரை வெற்றிகரமாக வடிவமைத்து உருவாக்கியுள்ளது.

முதல் முறையாக வேற்றுக்கிரகத்தில் பறக்கப் போகும் முதல் தன்னாட்சி ஹெலிகாப்டர் இதுவே என்று நாசா தெரிவித்துள்ளது. இதற்கு நாசா மார்ஸ் ஹெலிகாப்டர் என்று பெயரிட்டுள்ளது.

நாசாவின் மார்ஸ் 2020 திட்டம் எதற்கு?
நாசா தனது மார்ஸ் 2020 ரோவர் திட்டத்தை, சொன்ன நேரத்தில் நிகழ்த்திட வேண்டும் என்று மும்முரமாக பணியாற்றி வருகிறது. மார்ஸ் 2020 ரோவர் படு மும்முரமாக மெருகேற்றப்பட்டு வருகிறது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய தன்மை, உயிர்களுக்கான தேடல், சுற்றுச்சூழல், வாழ்விடம், பண்டைய மார்ஷிய வாழ்வின் அறிகுறிகளைத் தேடுதல், எதிர்கால மனித ஆராய்ச்சியாளர்களுக்கான இயற்கை வளங்கள் மற்றும் ஆபத்துக்கள்எனப் பல கட்ட சோதனையை மதிப்பிடத் தயாராகி வருகிறது.

எப்பொழுது மார்ஸ் ஹெலிகாப்டர் மார்ஸ்க்கு அனுப்பப்படுகிறது தெரியுமா?
நாசா திட்டமிட்டுள்ளபடி ஜூலை மாதம், 2020 ஆம் ஆண்டில், ஃப்ளோரிடாவில் உள்ள ஸ்பேஸ் லான்ச் காம்ப்லெஸ் 41 என்ற கேப் கார்னிவல் விமானப்படை நிலையத்திலிருந்து விண்ணில் பாயும், யுனைடெட் லான்ச் அலையன்ஸ் அட்லஸ் V ராக்ட்டில் அனுப்பப்படும் மார்ஸ் 2020 ரோவரில் தான் இந்த மார்ஸ் ஹெலிகாப்டர் அனுப்பப்படும் என்று நாசா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மனிதக்குலத்தின் முதல் முயற்சி
இதற்கு முன்பும், இதுவரையும் உலகில் யாரும் செவ்வாய்க்கிரகத்தில் பறக்கக்கூடிய வாகனத்தை வடிவமைக்கவில்லை, உருவாக்கவும் இல்லை. நாங்கள் தொடங்கியுள்ள இந்த முயற்சி முற்றிலும் புதுமையானது என மார்ஸ் ஹெலிகாப்டரை உருவாக்கிய மிமீ ஆங் தெரிவித்துள்ளார். செவ்வாய்க் கிரகத்தில் உள்ள சூழ்நிலை ஏற்றார் போல் பறப்பதற்கு தோதுவாக, இந்த மார்ஸ் ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

எப்படி இது சாத்தியம்?
செவ்வாய்க் கிரகம், பூமியை விடப் பல மடங்கு மெல்லிய வளிமண்டல நிலையைக் கொண்டுள்ளது. இதனால் செவ்வாய் வளிமண்டலத்தில் பறக்கும் வாகனம் தடையில்லாமல் பறப்பதற்கு, முதல் அதன் எடை குறைவாக இருக்க வேண்டும். எடைக்கு ஏற்றார் போல் அங்குள்ள வளிமண்டலத்திற்கு ஏற்றார் போல குறிப்பிட்ட வேகத்தில் ரெக்கைகள் சுற்றினால் நிச்சயம் செவ்வாயில் பறக்கும் வாகனம் பறக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்தனர்.

மார்ஸ் போன்று பூமியில் உருவாக்கப்பட்ட சோதனை கூடாரம்
விஞ்ஞானிகள் கணித்த கணிப்பின் அடிப்படையில் பல முன்மாதிரி மார்ஸ் ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, செவ்வாய் கிரகம் போன்று உருவாக்கப்பட்ட பிரத்தியேக சோதனை கூடாரத்தில் மார்ஸ் ஹெலிகாப்டரின் முன்மாதிரிகள் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் வெற்றியைத் தரவில்லை, விஞ்ஞானிகளின் விடாமுயற்சியால் பலகட்ட சோதனைக்குப் பின்பு, ஜனவரி 2019 ஆன் ஆண்டில் முதல் முறையாக மார்ஸ் ஹெலிகாப்டர் தனது சோதனையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ஸ் ஹெலிகாப்டரின் பயன் என்ன?
மார்ஸ் 2020 ரோவரில், அனுப்பப்படவுள்ள இந்த மார்ஸ் ஹெலிகாப்டரில் எந்த அறிவியல் சார்ந்த தொழில்நுட்பமும் பொருத்தப்படவில்லை. மார்ஸ் ஹெலிகாப்டரில் ஒரே ஒரு எச்.டி கலர் கேமரா மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது, இதன் உதவியுடன் முழு செவ்வாய்க் கிரகத்தையும் சுற்றி வரும் என்று நாசா அறிவித்துள்ளது. பூமியிலிருந்து கட்டுப்படுத்தக்கூடிய கண்ட்ரோலிங் அமைப்புடன் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்கால மார்ஸ் ஹெலிகாப்டர் இதற்காகத் தான் பயன்படுத்தப்படும்
எதிர்கால மார்ஸ் திட்டத்தில், செவ்வாய்க்கு அனுப்பப்படும் அடுத்த மார்ஸ் ஹெலிகாப்டரில் அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்கள் பொருத்தப்படுமெனவும், சிறு எடை கொண்ட சாதனங்களை வேறு இடத்திற்கும் மாற்றம் செய்வதற்கும், செவ்வாய்க் கிரகத்தில் உள்ள மலை, குகை மற்றும் மனிதர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு இந்த மார்ஸ் ஹெலிகாப்டர்கள் சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளும் என்று நாசா தெரிவித்துள்ளது.

மார்ஸில் தரை இறங்கும் முதல் ஹெலிகாப்டர்
ஜூலை 2020 ஆம் ஆண்டு பூமியிலிருந்து புறப்பட்டு, பிப்ரவரி 18, 2021 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸீரோ கார்ட்டர் பகுதியில் மார்ஸ் ஹெலிகாப்டருடன், மார்ஸ் 2020 ரோவர் தரை இறங்குமென்றும் நாசா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மனிதக்குலத்தின் அடுத்த வெற்றிப்படியை நோக்கி செவ்வாய்க் கிரகத்தில் பறக்கும் முதல் வாகனமாக, மார்ஸ் ஹெலிகாப்டர் இருக்கும் என்றும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications