செவ்வாய் கிரகத்தில் NASA-வுக்கு கிடைத்த விண்கல்.! பூமி போன்ற கிரகம் சிதறி செவ்வாய் வந்ததா?
நாசாவின் மார்ஸ் சயின்ஸ் லேபரட்டரி (Mars Science Laboratory) மூலம், க்யூரியாசிட்டி (Curiosity) என்ற ரோவர் (Rover) செவ்வாய் (Mars) கிரகத்திற்கு அனுப்பப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் பூமியிலிருந்து ஆரம்பித்த க்யூரியாசிட்டியின் பயணம், ஆகஸ்ட் 2012-ல் செவ்வாய் கிரகத்தில் முடிவடைந்தது.
அன்று முதல், செவ்வாய் கிரகத்தின் மவுண்ட் சார்ப்-ல் (Mt. Sharp) இருக்கும் கேள் க்ரேட்டர் (Gale Crater) என்ற இடத்தை முற்றிலுமாக இந்த ரோவர் ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த க்யூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் களமிறக்கப்பட்டதற்கான காரணம், அதன் நிலப்பரப்பில் இருக்கும் சல்பர் (Sulphur) பற்றி ஆராய்ச்சி செய்வதற்குத் தான்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் ஓடிய இடத்தில் கிடைத்த விண்கல்.!
தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த இடத்தில், இந்த சல்பர் தாது அதிகமாக இருக்கும். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிய க்யூரியாசிட்டி செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தப்பட்டது. கேள் க்ரேட்டரை ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும் பொழுது, அதன் வழியில் உலோகங்களால் ஆன விண்கல் (Meteorite on Mars) ஒன்று எதிர்ச்சியாகத் தென்பட்டுள்ளது.
சுமார் ஒரு அடி விட்டம் கொண்ட அந்த விண்கல் இரும்பு (Iron) மற்றும் நிக்கலால் (Nickel) உருவாகி உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் இறங்கியதில் இருந்து, இதுபோன்ற பல விண்கற்களை க்யூரியாசிட்டி ரோவர் கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் சிகப்பு நிலப்பரப்பில் சாம்பல் நிறத்தில் பளபளப்பாக இருந்த இந்த விண்கல்லிற்கு கேக்கவ் (Cacao) என்று பெயர் சூட்டியுள்ளனர்.

விண்கல்லில் தெரிந்த அடையாளங்கள் எப்படி உருவானது?
இந்த ஆண்டு, ஜனவரி 27 ஆம் தேதி, தன்னுடைய மஸ்ட்கேம் (MastCam) மூலம், இந்த கேக்கவ் விண்கல்லின் ஆறு புகைப்படங்களை க்யூரியாசிட்டி ரோவர் நாசாவிற்கு அனுப்பியுள்ளது. வளிமண்டலத்தின் வழியே இந்த விண்கல் பயணம் செய்து வரும் பொழுது, அதில் இருக்கும் வாயுக்கள் வேகமாக சுழன்றதால் உராய்வு ஏற்பட்டு சில பள்ளங்கள் மற்றும் குறிகள் அந்த விண்கல்லில் உருவாகியுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தின் வழியே கடந்து வரும்போது, ஏற்பட்ட தழும்புகளை அந்த கேக்கவ் விண்கல்லில் தெளிவாகக் காண முடிகிறது. எந்த ஒரு பொருளும் வேகமாக வளிமண்டலத்தில் பயணம் செய்யும் பொழுது இந்த நிகழ்வு ஏற்படுவது இயல்பு. இதனால் ஏற்பட்ட குழிகள் மற்றும் தழும்புகளை ரெக்மேக்லிப்ட்ஸ் (Regmaglypts) என்று அழைப்பர்.

பூமி போன்ற கிரகம் வெடித்து சிதறி.. அதிலிருந்து வந்த சிறு பகுதியா இந்த விண்கல்?
பொதுவாகக் கிரகங்களின் கோர் (Core) பகுதி உலோகங்களால் உருவாக்கப்பட்டிருக்கும். உதாரணமாகப் பூமியின் கோரானது, இந்த விண்கல்லைப் போல இரும்பு மற்றும் நிக்கலால் தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஏதேனும் ஒரு கிரகம் வெடித்து சிதறியதால், அதன் கோர்ப் பகுதி விண்வெளியில் பயணம் செய்து கேக்கவ் விண்கல்லாகச் செவ்வாய் கிரகத்தை அடைந்திருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இந்த கேக்கவ் விண்கல் எத்தனை ஆண்டுகளாகச் செவ்வாய் கிரகத்தில் உள்ளது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. பூமியில் இது போல் உலகத்தால் ஆன விண்கற்கள் பல கிடைத்துள்ளன. பண்டைக் காலத்தில் அந்த விண்கற்களை உடைத்துத் தான் ஆயுதங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யப் போன க்யூரியாசிட்டி ரோவருக்கு, இந்த கேக்கவ் போன்ற விண்கற்களின் அறிமுகம் கிடைப்பது நாசாவிற்கு கூடுதல் போனஸ் தான்.


Click it and Unblock the Notifications








