"தற்கொலை" செய்யப்போகும் NASA விண்கலம்.. அதுவும் பூமியை காப்பாற்ற!
பூமியில் இருக்கும் வரை மட்டுமே நமக்கெல்லாம் பாதுகாப்பு! கொஞ்சம் மேலே சென்றால், அதாவது தோராயமாக 88 நிமிடங்கள் மேல் நோக்கி பயணம் செய்தால்..
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், வெறும் 160 கிலோமீட்டர் உயரத்திற்கு சென்றுவிட்டால்.. நாம் பூமியின் தாழ் வட்ட பாதையை அடைந்து விடுவோம்; அதாவது விண்வெளிக்குள் நுழைந்து விடுவோம்!

அங்கே நமக்கு ஒரு பாதுகாப்பும் இருக்காது!
பூமியில் ஆக்சிஜெனும், புவியீர்ப்பு விசையும் இருக்கும் வரை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் "பிழைத்து" கொள்ளலாம்!
ஆனால் விண்வெளியில் இந்த இரண்டுமே கிடைக்காது. இயற்கை மற்றும் "நாம் அறிந்த" அறிவியலை தவிர்த்து, விண்வெளியில் நமக்கு யாராலும் உதவ முடியாது; எப்போது வேண்டுமானாலும்.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!

வெறும் 160 கிமீ உயரத்திற்கே இந்த கதி என்றால்?
பெரும்பாலான செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி நிலையங்கள் நிலைநிறுத்தப்படும் பூமியின் தாழ் வட்டப்பாதையிலேயே கணிக்க முடியாத ஆபத்துகள் இருக்கலாம் என்கிற நிலைப்பாட்டில்..
அளக்க முடியாத இந்த அண்டத்தில் இன்னும் எத்தனை-எத்தனை ஆபத்துகள் இருக்கிறதோ? அதில் எதெல்லாம் நம்மை நோக்கி, அதாவது நாம் வாழும் பூமியை நோக்கி வருகிறதோ? என்கிற அச்சம் மேலோங்குகிறது அல்லவா?

அந்த அச்சம்.. அந்த பீதி.. NASA-விற்கும் உள்ளது!
இன்று இல்லை என்றாலும் கூட, என்றாவது ஒருநாள், ஒரு பெரிய விண்கல்லோ அல்லது ஒரு விண்வெளி பாறையோ, பூமியை நோக்கி வரலாம்.
அந்த மோதல் சாத்தியமாகும் பட்சத்தில், அது பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம் என்கிற அச்சம் நமக்கு மட்டுமில்லை.. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கும் கூட உள்ளது!

ஹாலிவுட் பட பாணியில்..!
விண்கல் என்கிற "உருவத்தில்" பூமியை நோக்கி ஒரு பெரிய ஆபத்து வரும் போது, ஒரு பெரிய விண்கலத்தை பயன்படுத்தி, அந்த விண்கல்லின் பாதையை மாற்ற முடியுமா என்கிற - ஹாலிவுட் பட பாணியிலான - ஒரு ஆராய்ச்சியில் தான் நாசா ஈடுப்பட்டுள்ளது
அதுதான் DART என்று சுருக்கமாக அழைக்கப்படும் Double Asteroid Redirection Test மிஷன் ஆகும். தற்போது, இந்த விண்கலம் தற்கொலை செய்து கொள்ள தயார் ஆகி வருகிறது!

மணிக்கு 24,000 கிலோமீட்டர் வேகத்தில்!
பூமியை நோக்கி வரும் விண்கற்களை / சிறுகோள்களை "திசைதிருப்ப" முடியுமா என்பதை சோதிக்க, நாசாவின் டார்ட் விண்கலம் ஆனது "வேண்டுமென்றே" ஒரு சிறுகோள் மீது மோத உள்ளது!
இந்த விண்கலம், வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி டிடிமோஸ் (Didymos) என்கிற பைனரி சிஸ்டமில் உள்ள டிமார்ஃபோஸ் (Dimorphos) என்கிற சிறுகோள் மீது, மணிக்கு 24,000 கிலோமீட்டர் வேகத்தில் மோத உள்ளது!

பூமியை காப்பாற்ற?
செப்டம்பர் 26 ஆம் தேதி நடக்கவுள்ள இந்த "திட்டமிடப்பட்ட விண்வெளி விபத்து" ஆனது, டிமார்ஃபோஸின் சுற்றுப்பாதையை மாற்றும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த சோதனை வெற்றியடையும் பட்சத்தில், எதிர்காலத்தில் பூமியை நோக்கி வரும் "அபாயகரமான" விண்கற்களை / விண்வெளி பாறைகளை / சிறுகோள்களை நம்மால் திசைதிருப்ப முடியும் என்பது நிரூபணம் ஆகும்!

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?
நாசாவின் இந்த ஆராய்ச்சி கண்டிப்பாக வெற்றி அடையும் என்று நம்புவது கொஞ்சம் கஷ்டம் தான்!
ஏனென்றால், நாசாவின் டார்ட் விண்கலம் மோதப்போகும் டிமார்ஃபோஸ் சிறுகோளின் அகலம் என்ன தெரியுமா? - 160 மீட்டர்!

அதுமட்டுமா?
டிமார்ஃபோஸின் "உண்மையான எடை" எவ்வளவு என்று யாருக்குமே தெரியாது. தோராயமாக அது 5 பில்லியன் கிலோகிராம் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அதோடு மோதப்போகும் டார்ட் விண்கலத்தின் எடை என்ன தெரியுமா? - சுமார் 600 கிலோகிராம் மட்டுமே ஆகும்; அதாவது டிமார்ஃபோஸ் VS டார்ட் என்பது, டைனோசர் காலில் சிக்கிய எறும்பு போல இருக்கும்!
எது வெல்லும்? அறிவியலா? இயற்கையா? செப்.26 வரை பொறுத்திருந்து பார்ப்போம்!
Photo Courtesy: NASA, Wikipedia


Click it and Unblock the Notifications