நிலவில் 4G அமைக்க நோக்கியாவுடன் NASA ஒப்பந்தம்.! எத்தனை மில்லியன் முதலீடு தெரியுமா?
நிலவில் LTE மற்றும் 4G செல்லுலார் கம்யூனிகேஷன் நெட்வொர்க்கை உருவாக்க நோக்கியா பெல் லேப் நிறுவனத்துடன் நாசா தற்பொழுது புதிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. சந்திரனில் ஒரு செயல்பாட்டு தளத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் நாசா சுமார் 370 மில்லியன் டாலர் மதிப்புடைய புதிய ஒப்பந்தங்களை அறிவித்திருந்தது. இதில் தற்பொழுது நோக்கியா கூட்டுச் சேர்ந்துள்ளது.

சந்திரனில் முதல் எல்டிஇ / 4 ஜி செல்லுலார் கம்யூனிகேஷன் நெட்வொர்க்கை உருவாக்க நோக்கியா பெல் லேப் நிறுவனத்துடன் 14.1 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தம் தற்பொழுது கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த துறையில் அவர்களின் தொழில் முன்னணி நிபுணத்துவத்தைக் கருத்தில் கொண்டு, சந்திரனில் ஒரு தகவல் தொடர்பு வலையமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் நோக்கியாவுக்கு வழங்கப்பட்டதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

நோக்கியா நிறுவனம் பல சந்தைகளில் 4 ஜி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்து பொறுப்பேற்றுள்ளது, அதேபோல், இப்போது 5 ஜி நெட்வொர்க்குகள் பயன்படுத்தப்படுவதற்கும் நோக்கியா ஒரு வகையில் பொறுப்பாகும். சந்திரனில் அமைக்கப்படும் 4 ஜி நெட்வொர்க் சந்திர லேண்டர்கள், ரோவர்கள், வாழ்விடங்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கும் இடையிலான தகவல்தொடர்புகளை மேம்படுத்த உதவும்.

சந்திரனில் அமைக்கப்படும் 4 ஜி நெட்வொர்க் அமைப்பு விண்கலத்திற்கும் நீட்டிக்கப்படும் என்று ரியூட்டர் கூறினார். "நாசா நிதியுதவியுடன், நம்பகமான, உயர்-விகித தகவல்தொடர்புகளைச் சந்திர சூழலுக்கு ஆதரிக்கத் தொழில்நுட்பத்தை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதை நோக்கியா கவனிக்கும்." என்று நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2028 க்குள் விண்வெளி வீரர்கள் வாழவும், வேலை செய்யவும் ஒரு சந்திர தளத்தை நாசா நிறுவும் என்று கூறியுள்ளது. நாசா அறிவித்திருக்கும் பல திட்டங்களில் நிலவில் 4G நெட்வொர்க் அமைப்பை அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். நாசா அறிவித்த பிற ஒப்பந்தங்களில், சிலவற்றை விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் யுனைடெட் லாஞ்ச் போன்ற நிறுவனங்கள் நாசாவுடன் இணைந்து கூட்டணி வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications