53 ஆண்டுகளுக்குப் பின் நிலா பயணம்.. வீரர்கள் எடுத்துச் சென்ற புதிய ஸ்மார்ட் சாதனம் என்ன? எதற்கு பயன்படும்?
மிகவும் அதிக எதிர்பார்த்த நாசாவின் (NASA) ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் ஓரியான் விண்கலம் ஆனது 53 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவின் அருகே அனுப்பும் 10 நாள் விண்வெளி பயணமாகப் புறப்பட்டது. இந்திய நேரப்படி வியாழன் அதிகாலை 4 மணியளவில் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஓரியான் விண்கலம் புறப்பட்டது.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக காத்திருந்த விண்வெளி ஆர்வார்களுக்கு, இது மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. அதுவும் 1972-ம் ஆண்டில் அப்பல்லோ 17 விண்கலத்திற்குப் பிறகு நிலவுக்கு மனிதர்கள் யாரும் செல்லவில்லை.

அந்த காலகட்டங்களில் நிலவுக்குச் செல்வது மிகப்பெரிய சாதனையாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நிலவில் மனிதர்கள் வசிக்க நிரந்தர மனித தளம் அமைப்பதையும், அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான ஒத்திகையாகவும் தான் இந்த ஆர்டெமிஸ் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதுவும் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அருகில் அழைத்துச் செல்லும் முதல் மிஷன் ஆர்டெமிஸ் II. இந்த திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக நிலவைச் சுற்றி வருவார்கள். இந்த பயணம் மனிதர்கள் இதுவரை சென்றதை விட பூமியிலிருந்து கூடுதல் தூரம் செல்லும் முயற்சியாகும். மேலும் நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் இந்த திட்டம், மனித விண்வெளி ஆய்வில் புதிய கட்டத்தைத் தொடங்குகிறது. நிலவுக்குச் செல்லும் 4 விண்வெளி வீரர்களின் தகவல்களை இப்போது பார்க்கலாம்.
1. ரீட் வைஸ்மேன் (Reid Wiseman): அமெரிக்காவைச் சேர்ந்த இவர், ஆர்டெமிஸ் திட்டத்தின் தலைவராகச் செயல்பட உள்ளார்.
2.விக்டர் குளோவர்(Victor Glover): அமெரிக்காவைச் சேர்ந்த இவர் இந்த திட்டத்தில் பைலட் என்று கூறப்படுகிறது. அதுவும் இவர் நிலவுக்குச் செல்லும் முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையைப் பெற உள்ளார்.
3.கிறிஸ்டினா கோச் (Christina Koch): நிலவுக்குச் செல்லும் அமெரிக்காவின் முதல் பெண்மணி இவர்தான். இவர் மிஷன் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறப்படுகிறது.அதேபோல் விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த பெண் என்ற சாதனையும் இவருக்கு உண்டு.
4.ஜெரமி ஹான்சென் (Jeremy Hansen):கனடாவைச் சேர்ந்த இவர் இந்த திட்டத்தில் மிஷன் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறப்படுகிறது. அதுவும் நிலவுக்குச் செல்லும் முதல் அமெரிக்கர் அல்லாத விண்வெளி வீரர் என்ற சிறப்பை பெற உள்ளார்.
ஆர்டெமிஸ் 2 ராக்கெட் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. சில நிமிடங்களில் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக சென்றது. அதுவும் இந்த விண்கலம் ஒரு வேன் அளவு மட்டுமே கொண்டதாக இருக்கிறது. இந்த குறுகிய இடத்தில் தான் 4 வீரர்களும் 10 நாட்களுக்கு உறங்கவும் உண்ணவும் வேலை செய்யவும் வேண்டும். முன்பு சொன்னது போல் இந்த பயணத்தில் வீரர்கள் நிலவில் கால் பதிக்கமாட்டார்கள்.
அதுவும் இந்த விண்கலம் நிலவில் தரையிறங்காது மாறாக நிலை அதன் பாதையில் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளும். அதேபோல் விண்வெளி பயணம் செல்லும் போது வீரர்கள் கையில் போன் போன்ற கருவிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் இந்த முறை முதன்முறையாக விண்வெளி வீரர்கள் தங்களின் ஐபோன்களை (iPhones) உடன் எடுத்துச் செல்ல அனுமதி கொடுத்துள்ளது நாசா. ஆகவே முதன்முறையாக ஐபோன்கள் பூமியை விட்டு விண்வெளிக்கும் நிலவின் பாதைக்கும் சென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த போன்கள் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியாது. புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் பெறலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஐபோன்கள் ஏரோபிளேன் மோடில் தான் வைக்கப்பட்டிருக்கும் என்று நாசா தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு முன்பு எடை அதிகம் கொண்ட கேமராக்களை கொண்டு சென்ற நிலையில் அதற்கு மாற்றாக ஐபோன்களை கொண்டு சென்றுள்ளனர்.
விண்வெளி வீரர்கள் வைஃபை கனெக்ட் செய்துகொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அங்கிருந்து பூமிக்கு அனுப்பலாம் என்கிறது நாசா.
photos credits: nasa


Click it and Unblock the Notifications








