கொரோனா வார்டில் மித்ரா ரோபோட்! நோயாளிகளை அடையாளம் பார்த்து சேவை செய்கிறது!
கொரோனா வைரஸ் நோயாளிகளை அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பாதுகாப்பாக இணைத்து வைக்க, இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவமனை தனது வார்டுகளில் நோயாளிகளுக்குச் சேவை செய்ய மனித உருவத்தில் ரோபோவை பயன்படுத்தியுள்ளது.

மித்ரா என்ற ரோபோட்
நொய்டா பகுதியில் உள்ள யாதார்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தான் 'மித்ரா' என்ற இந்த ரோபோட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியில் மித்ரா என்றால் 'நண்பர்' என்று பொருள். மித்ரா என்ற இந்த ரோபோட் 2017ம் ஆண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாக உரையாடி, அதன் மூலம் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

முக அடையாளம் காணும் தொழில்நுட்பம்
மித்ரா ரோபோட்டின் கண்கள் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது, இதனால், மித்ரா முன்னர் தொடர்பு கொண்ட நபர்களை எளிதாக நினைவுபடுத்தி அடையாளம் கண்டுவிடுகிறது. மித்ராவின் மார்பில் இணைக்கப்பட்ட ஒரு டேப்லெட், நோயாளிகளுக்கு அவர்களின் அன்பானவர்களைப் பார்க்க அனுமதிக்கிறது. அத்துடன், மருத்துவ ஊழியர்களுக்கும் வார்டுகளை அணுகாமல் நோயாளிகளுடன் உறையாட அனுமதிக்கிறது.

குடும்பங்களை நோயாளிகளுடன் இணைக்கிறது
கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் குணமடைய நிறைய நேரம் தேவைப்படுகிறது, இந்த நேரத்தில், நோயாளிகளுக்கு அவர்களின் குடும்பங்கள் அதிகம் தேவைப்படும். ஆனால், அவர்கள் நேரில் பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் அவர்களுடன் தொடர்பில் இருக்க மித்ரா ரோபோட்டை பயன்படுத்தியுள்ளதாக மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் அருண் லகன்பால் கூறியுள்ளார்.

பாதுகாப்பான அணுகுமுறை
மித்ரா முக்கியமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி தொடர்பு கொள்ள முடியாத நோயாளிகளால் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருத்துவமனையில் மஹன்லால் காசி என்ற ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரி இப்பொழுது இந்த ரோபோவை பயன்படுத்துகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இப்போது நன்றாக இருக்கிறார் என்றும் இவரில் உடல்நலம் மேம்பட்டு வருகிறது.

மித்ரா ரோபோட்டின் விலை என்ன தெரியுமா?
பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான இன்வென்டோ ரோபாட்டிக்ஸ் நிறுவனம் தான் இந்த அற்புதமான ரோபோவை உருவாக்கியுள்ளது. இந்த மித்ரா ரோபோவை, இந்த தனியார் மருத்துவமனைக்கு ரூ. 10,00,000 கொடுத்து வாங்கியுள்ளது என்று மருத்துவமனையை நடத்தி வரும் நிறுவனத்தின் இயக்குனர் யாதார்த் தியாகி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications