நம்பவே முடியல.. நாம நினைக்கிறத விட அது உயிர்ப்பா இருக்கு.. செவ்வாயின் மேற்பகுதியில் சிக்கிய புது ஆதாரம்!
சமீபத்தில் செவ்வாய் கிரகத்தின் (Mars) மேற்பரப்பில் கிடைத்துள்ள சில ஆதாரங்கள், செவ்வாய் கிரகத்தையும், விண்வெளியையும் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளை திகைப்படைய வைத்துள்ளது.
அதென்ன ஆதாரம்? செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அப்படி என்ன கிடைத்தது? எது உயிர்ப்பாக இருக்கிறது? இதோ விவரங்கள்:

அதிர்ச்சியாக மாறிய குழப்பம்!
செவ்வாய் கிரகத்தில் (Mars) திடீர் கோடு ஒன்று உருவானதை கண்டறிந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முதலில் குழப்பம் அடைந்தனர்.
பின்னர் அதற்கான காரணத்தை அறிந்த பின்னர் அவர்களின் குழப்பம் அதிர்ச்சியாக மாறி உள்ளது!

இதுநாள் வரை.. விஞ்ஞானிகள் போட்ட தப்பு கணக்கு!
அறிவியல் ரீதியாக மிகவும் மர்மமான ஒரு கிரகமாக கருதப்படும் செவ்வாய் கிரகம் ஆனது புவியியல் ரீதியாக ஒரு டெட் பிளானட் (Dead Planet) ஆக கருதப்படுகிறது. அதாவது செவ்வாய் கிரகமானாது "இறந்துப்போன" ஒரு கிரகமாக கருதப்படுகிறது.
ஆனால் சமீபத்தில், செவ்வாய் கிரகத்தில் உருவான திடீர் கோடானது "மார்ஸ் கிரகம் ஒரு டெட் பிளானட்" என்கிற கோட்பாட்டின் ஆணிவேரை அசைத்து பார்க்கும்படி உள்ளது!

வலுக்கட்டாயமாக மேலே வருகிறது!
செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட திடீர் கோடு எப்படி உருவானது என்கிற ஆராய்ச்சியில் இறங்கிய விஞ்ஞானிகளுக்கு ஒரு நம்பமுடியாத பதில் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் - செவ்வாய் கிரகம் ஒரு டெட் பிளான்ட் அல்ல, அது இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்கிற உண்மை வெளிப்பட்டுள்ளது!
செவ்வாய் கிரகத்தின் மேன்டில் (Mars Mantle) வழியாக ஒரு மாபெரும் மாக்மா (Gaint Magma) வலுக்கட்டாயமாக மேலே வந்துள்ளது. அது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நில அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாகவே செவ்வாய் கிரகத்தில் திடீர் கோடு உருவாகி உள்ளது!

இன்னொரு திகிலான தகவலை சொல்லும் நாசா!
ஒருகாலத்தில் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளை கொண்டிருந்த செவ்வாய் கிரகமானது, அதன் "நடுத்தர வயதில்" அமைதியடைந்ததாக தெரிகிறது. இருந்தாலும் கூட செவ்வாய் கிரகத்தில் நில நடுக்கங்கள் ஓய்ந்ததாக இல்லை.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கூற்றுப்படி, செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்ட நாசாவின் இன்சைட் லேண்டர் ஆனது அதன் நான்கு வருட செயல்பாட்டில் மொத்தம் 1300 "மார்ஸ்குவாக்"களை (Marsquakes) கண்டறிந்துள்ளது. இந்த கணக்கின்படி பார்த்தால், செவ்வாய் கிரகத்தில் கிட்டத்தட்ட தினமும் நில நடுக்கம் ஏற்படுகிறது.

இதில் இன்னொரு மர்மமான விஷயமும் உள்ளது!
நாசா பதிவு செய்துள்ள பெரும்பாலான மார்ஸ்குவாக்கள் ஆனது செவ்வாய் கிரகத்தின் செர்பரஸ் ஃபோசே (Cerberus Fossae) என்கிற பகுதியில் இருந்து வருவதாக தெரிகிறது.
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் செர்பரஸ் ஃபோசே என்கிற பகுதியில் ஏற்கனவே நிறைய பிளவுகள் (கோடுகள்) உள்ளன. இந்த இடத்தில் தான் ஒரு முக்கியமான மர்மம் புதைந்து உள்ளது.
அது என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் உள்ள செர்பரஸ் ஃபோசே பகுதியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த செவ்வாய் கிரகத்திற்குமே டெக்டோனிக்ஸ் பிளேட்கள் (Plate tectonics) கிடையாது. இப்படி இருக்கும் போது, அங்கே எப்படி நிலநடுக்கம் ஏற்படும்?

விஞ்ஞானிகளுக்கு கிடைத்த விடை!
நாம் வாழும் பூமியில் ஒரு நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றால், அதற்கு இரண்டு பொதுவான சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஒன்று - பூமிக்கு அடியில் உள்ள டெக்டோனிக் தகுடுகள் ஆனது ஒன்றோடொன்று உரசும் போது, அதன் விளைவாக நிலநடுக்கங்கள் ஏற்படும்.
இரண்டாவது - பூமியின் அடியில் காணப்படும் கடும் வெப்பமுள்ள பாறைக் குழம்பில் இருந்து மேலே எழும்பும் குமிழ்கள் மூலம் நிலநடுக்கங்கள் ஏற்படும்; அந்த குமிழ்கள் - மேன்டில் ப்ளம்ஸ் (Mantle Plums) என்று அழைக்கப்படுகின்றன
ஏற்கனவே கூறியபடி, செவ்வாய் கிரகத்தில் பிளேட் டெக்டோனிக்ஸ் இல்லை என்பதால், அங்கே நிலநடுக்கங்கள் ஏற்பட மேன்டில் ப்ளூம்களே காரணமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
எது எப்படியோ.. செவ்வாய் கிரகமானது நாம் நினைப்பதை விடவும் மிகவும் உயிர்ப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!
Photo Courtesy: NASA, ESA/DLR/FU Berlin, Wikipedia


Click it and Unblock the Notifications








