வரிசை கட்டி வரும் விண்கலங்கள்.! நிலவில் ஒரு டீ கடைய போட்ரனும்: ஏன் தெரியுமா?
நாசா நிலவுக்கு அனுப்பிய ஓரியன் விண்கலம் 25 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து பசிபிக் பெருங்கடலில் பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்நிலையில் ஜப்பானின் தனியார் நிறுவனம் ஒன்று நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியுள்ளது.

ஜப்பான் ரோபோ
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் அந்த விண்கலம் நிலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. குறிப்பாக இந்த விண்கலத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் லூனர் ரோவர் வாகனம், ஜப்பான் ரோபோ ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன.

ஐஸ்பேஸ் நிறுவனம்
குறிப்பாக ஜப்பானின் ஐஸ்பேஸ் தனியார் நிறுவனம் வடிவமைத்த விண்கலம் ஆனது நிலவின் வடகிழக்கு பகுதியில் தரையிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஐஸ்பேஸ் நிறுவனத்தின் இந்த திட்டத்திற்கு ஹகுட்டோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ஜப்பானிய மொழியில் வெள்ளை முயல் என்று பொருள். குறிப்பாக இந்த விண்கலத்துடன் ஜப்பான் விண்வெளி நிறுவனத்தின் ஆரஞ்சு நிற கோள வடிவிலான ரோபோ கூட அனுப்பப்பட்டுள்ளது.

பத்து கிலோ எடை..
மேலும் இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்ட ரஷீத் எனப் பெயரிடப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் லூனர் ரோவர் வாகனமும் இடம்பெற்றது. இது பத்து கிலோ எடை கொண்ட வாகனம் ஆகும். பின்பு இது நலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது தனியார் நிறுவனம்?
குறிப்பாக ஜப்பான் விண்கலம் நிலவைச் சென்றடைய சுமார் 5 மாதங்கள் ஆகும் என்று ஐஸ்பேஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக நிலவுக்கான பயணத்திட்டத்தை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனங்களின், ஐஸ்பேஸ் நிறுவனம் நிலவுக்கு விண்கலம் அனுப்ப முயற்சித்துள்ள முதலாவது தனியார் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களை அனுப்ப NASA தீவிரமாக பணியாற்றி வருகிறது
அதேபோல் கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி அமெரிக்காவின் அப்போலோ 11 என்ற விண்கலம் நிலவில் தரையிறங்கியது. இதில் அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் 2024-ம் ஆண்டுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப NASA தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காகத் தான் ஓரியன் என்ற விண்கலத்தை நாசா உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் 3 விண்கலம்
நமது இஸ்ரோ அமைப்பு கூட பல்வேறு புதிய முயற்சிகளை அடுத்த வருடம் செயல்படுத்த உள்ளது. அதாவது நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான சந்திரயான் 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

பிரச்சனைகள் இதில் இருக்காது..
சந்திரயான் 2 இல் ஏற்பட்ட பிரச்சனைகள் இதில் இருக்காது எனவும், சந்திராயன் 3 மிகவும் வலிமையானதாக உருவாக்கி இருப்பதாகவும், விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். குறிப்பாக ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை கண்டிப்பாக முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த சந்திரயான் 3 உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு ஏற்கனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றவருவதால், இந்த முறை லேண்டர் ரோவர் விண்கலங்களை மட்டும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார் இஸ்ரோ தலைவர்.

பயனுள்ள வகையில் இருக்கும்
அதேபோல் சீனா, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகள் நிலவை ஆய்வு செய்ய அதிக ஆர்வம் காட்டிவருகின்றன. மேலும் கூடிய விரைவில் மனிதர்கள் நிலவுக்குச் செல்வார்கள் என நாசா அமைப்பு ஏற்கனவே கூறியுள்ளது. எனவே இப்போதே அங்கு ஒரு டீ கடையை தயார் செய்து வைத்தால் பயனுள்ள வகையில் இருக்கும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications