6 ஆண்டு..130,000 மைல் பயணம்.. பூமிக்கு வந்த ரியுகு சிறுகோளின் ஒரு பகுதி.! பரபரப்பான ஆராய்ச்சி தகவல்கள்.!
ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) நம்ப முடியாத காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. ரியுகு (Ryugu) என்ற சிறுகோளின் ஒரு பகுதியை ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாகப் பூமிக்குக் கொண்டு வந்துள்ளது. சிக்கலான இந்த பணியை ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக முடித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எதற்காக இந்த சிறுகோளின் ஒரு பகுதியை விஞ்ஞானிகள் பூமிக்குக் கொண்டு வந்துள்ளனர் என்று தெரியுமா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

130,000 மைல் தொலைவில் இருந்து வந்த ஹையபூசா 2
பூமியிலிருந்து சுமார் 130,000 மைல் தொலைவில் உள்ள ஹையபூசா 2 விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு காப்ஸ்யூல் தான் ரியுகு சிறுகோளின் மாதிரியைப் பூமிக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த காப்ஸ்யூல், பேலோடு உடன் ஹையபூசா 2 விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்டு, பூமியின் வளிமண்டலத்திற்குள் பாதுகாப்பாக நுழைந்து, பின்னர் ஒரு பாராசூட்டின் உதவியுடன் ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதியில் தரையிறங்கி சனிக்கிழமை மீட்கப்பட்டது என்று விஞ்ஞானிகள் குழு தகவல் தெரிவித்துள்ளது.

முதல் முறையாக சேதம் இல்லாமல் பூமிக்குள் வந்த சிறுகோள் பகுதி
NPR இன் அறிக்கையின்படி, பூமியின் வளிமண்டலத்தை இதுவரை எந்த ஒரு காப்ஸ்யூலும் சொந்த முயற்சியில் எந்தவித பாதிப்பும் இல்லாமல், எந்தவித சேதமும் இல்லாமல் அல்லது மாற்றமும் இல்லாமல் அப்படியே பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளது இதுவே முதல் முறை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பாதிப்பில்லாமல் அசல் சிறுகோள் மாதிரியை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வது இதுவே முதல் முறையாகும்

பத்திரமாக மீட்டெடுக்கப்பட்ட ரியுகு விண்வெளி பாறை
பத்திரமாக மீட்டெடுக்கப்பட்ட ரியுகு விண்வெளி பாறைகளின் மாதிரி இப்போது ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு விஞ்ஞானிகள் ஏற்கனவே கரிமப் பொருளைச் சுற்றியுள்ள வாயுவை ஆய்வுக்காகப் பிரித்தெடுத்துள்ளனர். இந்த விலைமதிப்பற்ற மாதிரி உண்மையில் ஒப்பீட்டளவில் சிறியது தான். இது மொத்தம் ஒரு கிராம் எடையைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஆய்வுக்கு அளவு என்பது எப்போதும் முக்கியமானதில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கும் செவ்வாய்க் கிரகத்திற்கும் இடையில் இருக்கும் ரியூகு
பூமிக்கும் செவ்வாய்க் கிரகத்திற்கும் இடையில் சூரியனைச் சுற்றிவரும் ஒரு மைல் அகலமுள்ள ரியுகு சிறுகோளைச் ஹையபூசா 2 சுற்றிவர ஆறு ஆண்டு எடுத்துக்கொண்டது. இந்த பயணத்தின் விளைவாகத் தான் இந்த சிறுகோள் ஒரு பகுதி எடுக்கப்பட்டு பூமிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. JAXA 2014 ஆம் ஆண்டில் ஹையபூசா 2ஐ அறிமுகப்படுத்தியது. பின்னர் அது மூன்றரை ஆண்டுகள் சூரியனைச் சுற்றிக் கொண்டு சரியான சுற்று வட்டப் பாதையை அடைந்தது. இது 2018 இல் ரியுகுவை அடைந்தது.

ஹையபூசா 2 இன் அடுத்த பயணம்
மேலும் மேற்பரப்பில் இரண்டு பயணங்களை மேற்கொண்டது. எடுக்கப்பட்ட மாதிரியைப் பூமிக்குத் திருப்பித் தர, ஹையபூசா 2 பூமியிலிருந்து சுமார் 130,000 மைல் இடைவெளியில் தனது காப்ஸ்யூலை ஆஸ்திரேலியா நோக்கி செலுத்திவிட்டு அதன் பயணத்தைத் தொடர்ந்துள்ளது. ஹையபூசா 2 இப்போது மற்றொரு சிறுகோள் செல்லும் பாதையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானிகள் ஹையபூசா 2 இன் அடுத்த பயணத்திற்கு பான் வோயேஜ்! சொல்லி வாழ்த்தி அனுப்பியுள்ளனர்.

எதற்காக இந்த ஆராய்ச்சி?
சரி, இறுதியாக இந்த சிறுகோள் ஒரு பகுதி எதற்காக ஆராய்ச்சிக்குக் கொண்டுவரப்பட்டது என்று தெரிந்துகொள்ளலாம். விண்வெளி பற்றி மனிதனுக்குத் தெரியாத பல விஷயங்களை அறிந்துகொள்ள இந்த முயற்சி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியுகு போன்ற விண்வெளி பாறைகள், எப்படி இறுதியில் கிரகங்கள் உருவானது என்றும், பூமி எவ்வாறு உருவானது என்பதை அறியவும், படைப்பைப் பற்றியும் துப்புகளை அளிக்கவும் இந்த மாதிரி பெரிதும் உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications