இது தாங்க எங்க இந்தியா! பூமிக்கு ஒரு ஆபத்து என்றதும் தயங்காமல் NASA வுடன் கூட்டு சேர்ந்த ISRO!
பகையாளியோ, பங்காளியோ.. அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க! உதவினு கேட்டா, அதுவும் ஒட்டுமொத்த உலகத்துக்குமான ஒரு உதவினு கேட்டா.. தயக்கம் இல்லாம கண்டிப்பா கைகொடுப்போம் என்று கூறும்படியான ஒரு காரியத்தை செய்து, அதை கடைசி கட்டத்திற்கும் கொண்டு வந்துள்ளது "நம்ம" இஸ்ரோ!
அதென்ன காரியம்? அமெரிக்க விண்வெளி ஆராச்சி மையமான நாசாவும் (NASA), இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும் (ISRO) கூட்டு சேரும் அளவிற்கு, பூமிக்கு என்ன ஆபத்து? இந்த மிஷன் எப்படி பூமியை காப்பாற்றும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

ISRO ஒரு முக்கியமான பகையாளி!
சுருக்கமாக நாசா என்று அழைக்கப்படும் நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷனையும் (National Aeronautics and Space Administration), இஸ்ரோ என்று அறியப்படும் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷனையும் (Indian Space Research Organisation) பகையாளிகள் என்றும் கூறிவிட முடியாது, அதே சமயம் பங்காளிகள் என்றும் கூறி விட முடியாது!
இருந்தாலும் கூட, விண்வெளி ஆராய்ச்சிகள் தொடர்பான பந்தயத்தில் (Space Race) இஸ்ரோ மிகவும் முக்கியமான ஒரு போட்டியாளர் என்பதால், நாசா மட்டுமின்றி, மற்ற உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் கூட இஸ்ரோவை ஒரு "பகையாளியாகவே" பார்க்கின்றன. ஆனால் ISRO அப்படி இல்லை!

NASA வுடன் கூட்டு!
இந்தியாவின் இஸ்ரோ, உதவி என்று கேட்டு வரும் உலக நாடுகளுக்கு "பெரும்பாலும்" இல்லை என்று கூறுவதே இல்லை!
அறியாதோர்களுக்கு, ஜனவரி 2018 மற்றும் நவம்பர் 2022 க்கு இடையில் மட்டுமே 19 நாடுகளை சேர்ந்த 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை (Foreign satellites) இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது. அந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவும் அடக்கம்!
ஆக, காரணம் சரியாக இருந்தால் போதும், நாசாவுடன் கூட்டு சேர்வதில் இஸ்ரோவிற்கு எந்த தயக்கமும் இருக்கப்போவதில்லை!
NISAR - இவ்விரு நாடுகளும் கூட்டு சேர ஒரு சரியான காரணம் தான்!
நிசார் (NISAR) என்பது நாசா-இஸ்ரோ சிந்தெட்டிக் அபெர்ச்சர் ரேடார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்று விரிவாக அழைக்கப்படும் ஒரு செயற்கைகோளாகும்.
இதன் பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த செயற்கைகோளானது இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டணியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால், நிசார் செயற்க்கைகோளிற்காக எல்-பேண்ட் ரேடார், ஜிபிஎஸ், டேட்டாக்களை சேமிக்க அதிக திறன் கொண்ட சாலிட்-ஸ்டேட் ரெக்கார்டர் மற்றும் பேலோட் டேட்டா சப்சிஸ்டம் ஆகியவற்றை நாசா வழங்கியுள்ளது.
மறுகையில் உள்ள இஸ்ரோ, எஸ்-பேண்ட் ரேடார், ஜிஎஸ்எல்வி லான்ச் சிஸ்டம் மற்றும் செயற்கைகோளை அனுப்புவதற்கான விண்கலத்தை வழங்கியுள்ளது. அதாவது நிசார் சாட்டிலைட்டை இஸ்ரோ தான் விண்வெளிக்குள் செலுத்தும்!

NISAR சாட்டிலைட்டிற்கும் பூமியின் பாதுகாப்பிற்கும் என்ன தொடர்பு?
மிகவும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் 2800 கிலோகிராம் எடையுள்ள நிசார் - ஒரு புவி கண்காணிப்பு (Earth-observation) செயற்கைக்கோளாகும்.
முன்னரே குறிப்பிட்டபடி, இந்த செயற்கைகோளில் எல்-பேண்ட் மற்றும் எஸ்-பேண்ட் சின்தெட்டிக் ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நிசார் - ஒரு டூயல் பேண்ட் ப்ரெக்வென்ஸி இமேஜிங் ரேடார் செயற்கைக்கோளாக (Dual-frequency imaging radar satellite) உருமாறும்.
இதெப்படி பூமியை காப்பாற்றும்?
விண்வெளிக்கு அனுப்பப்பட்டதும், நிசார் செயற்கைக்கோளானது பூமியின் மேற்பரப்பில் நிகழும் நுட்பமான மாற்றங்களை கவனிக்கும். அதன் மூலம் குறிப்பிட்ட மாற்றங்கள் நிகழ்வதற்கான காரணங்கள் என்ன? அதன் மூலம் நாம் சந்திக்க போகும் விளைவுகள் என்ன? என்பதை ஆராய்ச்சியாளர்களால் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள்.
அந்த புரிதலின் மூலம் எரிமலை வெடிப்புகள், பூகம்பங்கள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரழிவுகளின் அறிகுறிகளை நம்மால் கண்டுபிடிக்க முடியும்!
அதுமட்டுமின்றி இந்த செயற்கைக்கோள் நிலத்தடி நீரின் அளவை அளவிடவும்; பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளின் ஓட்ட விகிதங்களை (Flow rates) கண்காணிக்கவும்; நமது கிரகத்தின் காடு மற்றும் விவசாய பகுதிகளையும் கண்காணிக்கவும் கூட பயன்படுத்தப்படும்!
மொத்த பூமியையும்.. வெறும் 12 நாட்களில்!
சிந்தெட்டிக் அபெர்ச்சர் ரேடாரை (Synthetic aperture radar - SAR) பயன்படுத்துவதன் மூலம், நிசார் செயற்கைகோளால் ஹை-ரெசல்யூஷன் புகைப்படங்களை (High-resolution Photos) உருவாக்க முடியும்.
சிந்தெட்டிக் அபெர்ச்சர் ரேடாரால் மேகங்களை ஊடுருவிச்செல்ல முடியும் மற்றும் வானிலை நிலையை பொருட்படுத்தாமல் இரவும், பகலும் என எந்த நேரத்திலும் தரவுகளை சேகரிக்க முடியும்.
நாசாவின் கூற்றுப்படி, நிசார் செயற்கைகோளால் வெறும் 12 நாட்களில் முழு பூமியையும் படம்பிடிக்க முடியும்!
NISAR செயற்கைக்கோள் எப்போது விண்ணில் செலுத்தப்படும்?
நிசார் சாட்டிலைட், வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் (January 2024) விண்ணில் செலுத்தப்படும் என்றும், இது ஆந்திர பிரதேசத்தில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (Satish dhawan space centre) இருந்து ஏவப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயற்கைக்கோளில் உள்ள எல்-பேண்ட் ரேடாரை, நாசா அதிகபட்சம் 3 ஆண்டுகள் பயன்படுத்தும் என்றும், இதிலுள்ள எஸ்-பேண்ட் ரேடாரை, இஸ்ரோ குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு பயன்படுத்தும் என்றும் கூறப்படுகிறது!
Photo Courtesy: ISRO, NASA, Wikipedia


Click it and Unblock the Notifications








