இந்தியாவின் கனவு திட்டம்: இஸ்ரோவிற்கு மேலுமொரு பெரிய சல்யூட் வையுங்கள்.!
இந்தியாவின் பெருமைகளுள் ஒன்றான இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆனது, தானொரு வல்லரசு என்று பீத்திக்கொள்ளும் நாடுகள் தொடங்கி "நாங்கள் கத்துக்குட்டிகள் எங்களுக்கு உதவி வேண்டும்" என்று நாடும் நாடுகள் வரையிலாக - விண்வெளி ஏவல், செயற்கைகோள்களை விண்வெளிக்குள் செலுத்துதல் போன்ற பல உதவிகளை - பாரபட்சம் பார்க்காமல் செய்து வருவதை நாம் நன்கு அறிவோம்.

மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்
குறிப்பாக கோடு போல பட்ஜெட் போட்டு அதில் அட்டகாசமாக ரோடு போடுவதில் நம் இஸ்ரோவை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது எனலாம். எடுத்துக்காட்டிற்கு "மாம்" என்று சுருக்கமாக அழைக்கப்படும் மங்கள்யான் விண்கலத்தின் வெற்றியை கூறலாம். ஒரு ஹாலிவுட் படப்பிடிப்புக்கு செய்யப்படும் செலவில் (153 கோடி) மங்கள்யான் எனப்படும் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் மூலம் செவ்வாய் கிரகத்தை அடைந்த பெருமை நம் இஸ்ரோவிற்கே சேரும். இந்த பெருமைகளின் மணிமகுட பட்டியலில் தற்போது மேலுமொரு பவளம் இணையவுள்ளது. அதென்ன என்பதை பற்றி விரிவாக காண்போம்.

முகவரியை அமைக்கும் பணி
விண்வெளிக்குள் போதுமான அளவு செயற்கைக்கோள்களை செலுத்தி விரிவுபடுத்திய பிறகு, குறிப்பாக சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு ஆய்வு விண்கலங்களை அனுப்பிய பிறகு, ஒருவழியாக இந்தியா வானத்தில் தனக்கான ஒரு முகவரியை அமைக்கும் பணிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது.

ககன்யானின் விரிவாக்கமாக இருக்கும்!
அறிவியல் ஆர்வலராக இருந்தால், இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும். ஆம், அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் என்று இஸ்ரோவின் தலைவர் ஆன கே சிவன் தெரிவித்துள்ளார். புது தில்லியில், விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் செய்தியாளர்களிடம் உரையாற்றிய போது, இந்த தகவலை அவர் வெளியிட்டார். இந்த திட்டம் ஆனது வருகிற 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழவுள்ள இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யானின் விரிவாக்கமாக இருக்கும் என்று கே சிவன் தெரிவித்து உள்ளார்.

15 முதல் 20 நாட்களுக்கு!
மேலும் அவர் கூறுகையில் "நாங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐ.எஸ்.எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனின்) ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை. எனவே நாங்கள் எங்களுக்கான சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்க விரும்புகிறோம். எங்கள் நிலையம் மிகப் பெரியதாக இருக்காது. அது 20 டன் என்கிற அளவிலான நிறையை கொண்டிருக்கும் மற்றும் மைக்ரோ கிராவிட்டி சோதனைகள் உள்ளிட்ட ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும். அதாவது சுமார் 15 முதல் 20 நாட்களுக்கு அங்கே வாழ்வதற்கான முன் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும்"

சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு பகுதி!
இதற்கிடையில், கட்டமைக்கப்படும் இந்தியாவிற்கு சொந்தமான விண்வெளி நிலையமானது, இந்தியா தன் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் அனுப்புவதற்கும், சந்திரனை காலனித்துவப்படுத்துவதற்கான சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகவும் இருக்கும் என்றும் கே சிவன் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியாக பணியாற்றி வந்த இஸ்ரோ !
விண்வெளி நிலையத்தை செயல்படுத்துவதற்கான முக்கியமான ஒரு தொழில்நுட்பமாக கருதப்படும் 'ஸ்பேஸ் டாக்கிங் எக்ஸ்பெரிமெண்ட்' (ஸ்பேடெக்ஸ்) சார்ந்த வேலைகளில், கடந்த மூன்று ஆண்டுகளாக இஸ்ரோ அமைதியாக பணியாற்றி வந்ததும் தற்போது வெளிப்பட்டுள்ளது. ஸ்பேடெக்ஸ் என்பது ஒரு விண்கலத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மனிதர்களை மாற்ற அனுமதிக்கும் ஒரு விண்வெளி துறையாகும். இதற்காக ரூ .10 கோடி அளவிலான நிதியை இஸ்ரோ ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், விண்கலத்திற்கு எரிபொருள் நிரப்புதல் மற்றும் பிற அமைப்புகளை பூமியிலிருந்து குறிப்பிட்ட விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லுதல் போன்ற பிரதான பணிகளின் மீது தான் இஸ்ரோ அதிக கவனம் செலுத்தும் என்பது வெளிப்படை.

இறுதிக்கட்ட பணிகள் எப்போது முடிவடையும்!
கிடைக்கப்பெற்றுள்ள தகவலின் படி, ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் சமிக்ஞை பகுப்பாய்வு உபகரணங்கள், வழிசெலுத்தலுக்கான உயர் துல்லிய வீடியோமீட்டர், டாக்கிங் அமைப்பிற்கான மின்னணுவியல் மற்றும் தரையிறங்கும் அமைப்புகளுக்கான நிகழ்நேர முடிவெடுத்தல் போன்ற பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவின் கனவு திட்டம்!
விண்வெளிக்குள் மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் மிஷனை பற்றி பேசுகையில், ககன்யான் திட்டத்தை வருகிற 2022 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்ற என்றும் பாரத பிரதமர் கூறியுள்ளார். அந்த ஏவுதள காலக்கெடுவை பூர்த்தி செய்ய நாங்கள் தீவீரமாக பணியாற்றி வருகிறோம். டிசம்பர் 2021 க்குள் இந்த பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், மேம்பட்ட பயிற்சிக்காக எங்கள் பட்டியலிடப்பட்ட விண்வெளி வீரர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப உள்ளோம். ஏனெனில் விண்வெளியில் நிலவும் சூழ்நிலைகளை கற்பிக்கும் பயிற்சி மையத்தை இங்கு (இந்தியாவில்) அமைக்க எங்களுக்கு நேரமில்லை. இருப்பினும், அடிப்படை பயிற்சி இந்தியாவில் தான் நடக்கும். அடுத்த ஆறு வாரங்களில் விண்வெளிக்கு செல்ல தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள குழுவினரின் குறுகிய பட்டியல் உறுதி செய்யப்படும், பின் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அவர்களுக்கான பயிற்சிகள் முடிவடையும்.


Click it and Unblock the Notifications








