இந்தியாவை விட சீனா சிறந்ததா? நெத்தியடி பதில் கொடுத்த கே. சிவன்!
சீனாவின் சமீபத்திய விண்வெளி மைல்கல்லை தொடர்ந்து உலக நாடுகளின் ஒவ்வொரு விண்வெளி ஆராய்ச்சி மையங்களிலும் சீனா உடனான ஒப்பீடு சார்ந்த கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன
சமீபத்தில் சீனா ஒரு ஆகப்பெரும் விண்வெளி சாதனை ஒன்றை நிகழ்த்தியது. நிலவில் தரை இறங்கி இருந்தால் அதை சாதாரண சாதனை என்று கூறலாம். ஆனால் சீனா திட்டமிட்டு தரை இறங்கியதோ - நிலவின் முதுகில், அதாவது எந்த ஒரு உலக நாடும் தரை இறங்காத நிலவின் இருண்ட பகுதியில் சீனா தொட்டது.

அதோடு நின்று விடாமல் நிலவில் செடி ஒன்றையும் நட்டது, அது உயிர் பிழைக்கவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, சீனாவின் சமீபத்திய நிலவு பயணம், சீனாவின் சேன்ஞ் 4 விண்கலத்தின் ஆய்வுப்பணிகள் மற்றும் அதன் தொடர்ச்சியானது விண்வெளி வரலாற்றில் ஒரு ஆகச்சிறந்த சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

பாராட்டுவது வேறு, விட்டுக்கொடுப்பது வேறு!
சீனாவின் இந்த சாதனையை "பெரிய மனதுடன்" பாராட்டலாமே ஒழிய சொந்த நாட்டை விட்டுக்கொடுக்கவோ அல்லது தாழ்த்தி விடவோ கூடாது அல்லவா? ஒரு சாதாரண இந்தியன் கூட அதைத்தான் செய்வார், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவரான கே. சிவனும் அதையே தான் செய்துள்ளார்.

ஒப்பிடும் கேள்விகளுக்கு இந்தியா விதி விலக்கல்ல!
சீனாவின் சமீபத்திய விண்வெளி மைல்கல்லை தொடர்ந்து உலக நாடுகளின் ஒவ்வொரு விண்வெளி ஆராய்ச்சி மையங்களிலும் சீனா உடனான ஒப்பீடு சார்ந்த கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன, அவ்வகை கேள்விகளுக்கு இந்தியா விதி விலக்கல்ல. அந்த கேள்விக்கி பதில் நெத்தியடி பதிலை அளித்து உள்ளார் கே. சிவன்.

சரிக்கு சமம்!
விண்வெளி ஆராய்ச்சியை பொருத்தமட்டில், இந்தியாவின் இஸ்ரோ ஆனது எந்த விதத்திலும் சீனாவுடன் குறைவு இல்லை. குறிப்பாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான 'ககன்யான்' வெற்றிகரமாக முடிந்த பிறகு, அண்டை நாடுகளின் விண்வெளி தொடர்பான அனைத்து அம்சங்களிலும் இந்தியா சரிக்கு சமமாக நிற்கும் என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறி உள்ளார்.

முதலில் திட்டமிட்டது இஸ்ரோ தான்!
மேலும் அவர் கூறுகையில், சந்திரன் 2 திட்டத்தை குறிப்பிடும் வண்ணம், வேறு எந்த ஒரு நாடும் தொட்டு பார்க்காத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யும் லட்சிய திட்டத்தை இந்தியாவும் கொண்டுள்ளது. ஆரம்ப கால திட்டத்தின் படி, சந்திராயன் 2 ஆனது கடந்த ஏப்ரல் மாதத்தில் விண்ணுக்குள் செலுத்தப்படும் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. சில காரணங்களுக்காக அது இப்பொழுது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விண்வெளிக்குள் செல்ல உள்ளது. ஆக நாம் சீனாவுடனான ஒப்பீட்டில் எந்த விதத்திலும் குறைவாக இல்லை" என்று பதில் அளித்தார்.

ஏவுதல் என்று வந்து விட்டால் இஸ்ரோவின் லெவலே வேறு!
மேலும் அவர் விளக்கம் அளித்த போது, "விண்வெளி வாகனங்கள் மற்றும் விண்கலங்களை ஏவுதலில் இந்தியாவின் தனிப்பெரும்பான்மையான ஒரு நிலைப்பாடு உள்ளது" என்று கூறினார். அதாவது இஸ்ரோவின் தொடர்ச்சியான வெற்றிகரமான விண்வெளி ஏவல்களை அவர் இங்கு குறிப்பிட்டு உள்ளார்.

2003 இல் சீனா செய்த சாதனை, அந்த நேரத்தில்..!
சீனா 2003 ஆம் ஆண்டில், தனது முதலாவது மனித விண்வெளிப் பயணத்தை நிகழ்த்தியதே என்று தொடுக்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த கே. சிவன், "அந்த நேரத்தில் நம்மிடம் இல்லாத மனித விண்வெளித் திறனை சீனா கொண்டு இருந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் நிகழப்போகும் வெற்றிகரமான ககன்யான் திட்டமானது அனைத்து அம்சங்களிலும் அவர்களுக்கு சமமாக நம்மை கொண்டு சென்று நிறுத்தும்" என கே. சிவன் கூறி உள்ளார்.

இந்த ஒப்பீடு தேவை தானா?
நிச்சயமா தேவை தான். இஸ்ரோ இதை நேர்மறையாகவே எடுத்துக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஏனெனில், விண்வெளி என்று வந்து விட்டால், இந்தியாவும் சீனாவும் இரண்டு பிரதான இடங்களைக் கொண்டுள்ளன. இந்தியா தனது தெற்காசிய செயற்கைக்கோளை வழங்கி அதன் அண்டை நாடுகளுக்கு உதவி வருகிற மறுகையில் சீனாவும் "இதே பகுதி"களில் பாகிஸ்தானுடனும் இலங்கையுடனும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

நேபாளத்திற்கு இந்தியா செய்த உதவி!
குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு இஸ்ரோவினால் ஏவப்பட்ட தெற்காசிய செயற்கைக்கோளின் அறிமுகத்திற்கு பின்னர் நேபாளத்திற்கு தொலைக்காட்சி ஒளிபரப்பை கிடைக்கப்பெற செய்தது. இந்த செயற்கைக்கோளின் உதவியால் சிலர் "முதல் முறையாக டிவி பார்க்கிறோம்" என்று கூறியுள்ளதையும் கே. சிவன் அடிகோட்டிட்டு காட்டினார்.

சந்திராயன் 2 தாமதம் ஆக என்ன காரணம்?
சந்திரயான் -2 விண்கல ஏவலுக்கு அதன் வழிப்பாதையில் உள்ள வலுவற்ற தன்மையில் மேற்கொள்ளப்படும் மேம்படுத்தலே ஆகும் என்று கே சிவன் விளக்கம் அளித்து உள்ளார். நிபுணர்கள் இது ஒரு மிக முக்கியமான பணி என்பதால் செயற்கைகோளின் தன்முனைப்பு வலிமையை அதிகரிக்க விரும்புகின்றனர். எனவே, மேம்பாடுகளை கவனித்துக்கொள்வதற்காக செயற்கைகோள் மறு சீரமைக்கப்பட்டது என்று அவர் விளக்கம் அளித்தார்.


Click it and Unblock the Notifications