லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத "பொருள்"!
உலக அழிவுடன் தொடர்புடையதால், விண்கல் (Meteorite) என்றாலே பீதி தான்; திகில் தான்!
ஆனால் உண்மை என்னவென்றால்.. நாம் வாழும் பூமி மீது ஒரு விண்கல் வந்து மோதுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு!

நம்பி.. நிம்மதியாக தூங்கலாமா?
விண்வெளியில் இருந்து வரும் ஒரு பெரிய விண்கல், பூமி மீது வந்து விழுவது போலவும்.. அதன் விளைவாக மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டு.. கட்டிடங்கள் நொறுங்கி.. மனித உயிர்கள் பலியாவது போலவும் கனவு கண்டு உள்ளீர்களா? இனிமேல் பயப்பட வேண்டாம்!
ஏனென்றால்? நம் கிரகத்தின் மீது ஒரு "விண்வெளி பாறை" வந்து மோதுவதற்கான வாய்ப்பு... தோராயமாக 300,000 இல் 1 மட்டுமே உள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்!

இதுவொரு பக்கம் இருக்க.. இன்னொரு பக்கம்?
இந்த பூமியை அழிக்கக்கூடிய முக்கியமான காரணங்களில் - விண்கல்லும் உள்ளதாக சிலர் நம்புகின்றனர்.
அந்த பட்டியலில் ஏலியன்களும் உள்ளன. அதாவது ஏலியன்கள் வந்து இந்த உலகை அழிப்பார்கள் என்று சிலர் நம்புகிறார்கள்!
ஆனாலும் கூட "வேற்றுகிரக வாசிகள்" என்பது இந்த நொடி வரையிலாக வெறும் ஒரு கோட்பாடு மட்டுமே ஆகும்; இது தொடர்பாக, அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை!

ஆனால் விண்கற்கள் அப்படி இல்லை!
விண்கற்கள் உண்மையிலேயே உள்ளன. நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிலான விண்கற்கள், விண்வெளியில் உள்ளன!
எடுத்துக்காட்டிற்கு, 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், சுமார் ஆறு மைல் விட்டம் கொண்ட ஒரு மிகப்பெரிய சிறுகோள் பூமியை தாக்கியதாக பல விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அவ்வப்போது "ஆபத்து இல்லாத" விண்கற்களும் விழும்!
ஆபத்து இல்லாத விண்கற்கள் என்றால், பெரும்பாலும் யாருக்கும், எந்த இடத்திற்கும் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தாத - சிறிய அளவிலான விண்கற்கள் ஆகும்.
ஆபத்து இல்லை என்றாலும் கூட, அதில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் நிறைந்து இருக்கும். அப்படியான ஒரு குட்டி விண்கல், இங்கிலாந்தில் விழுந்தது!

அதற்குள் நம்ப முடியாத ஒரு "பொருளும்" இருந்தது!
கடந்த 2021 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் (United Kingdom) குளோசெஸ்டர்ஷைர் (Gloucestershire) நகரில் உள்ள ஒரு ஓடுப்பாதையில் ஒரு குட்டி விண்கல் விழுந்தது.
அந்த விண்கல்லை ஆராய்ச்சி செய்த பின்னரே, அதற்குள் ஒரு நம்பமுடியாத "பொருள்" இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது!

பூமியில் இருப்பது.. அதற்குள்ளும் இருந்தது!
குளோசெஸ்டர்ஷைரில் விழுந்த விண்கல்லில் தண்ணீர் இருந்துள்ளது மற்றும் அதைவிட சுவாரசியமான விடயம் என்னவென்றால்.. அதில் உள்ள நீரின் கலவையானது பூமியில் உள்ள பெருங்கடல்களில் உள்ள நீரின் கலவையுடன் மிகவும் ஒத்திருக்கிறது!
இந்த விண்கல் ஆனது பூமியின் பரந்த பெருங்கடல்களில் உள்ள நீர் எங்கிருந்து வந்தது என்பது பற்றிய தடயங்களை வைத்திருப்பதாக நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தில் (Natural History Museum) உள்ள கிரக பொருட்கள் குழுவின் (Planetary materials group) ஆராய்ச்சியாளர் ஆன ஆஷ்லே கிங் நம்புகிறார்!

இந்த விண்கல்லை.. விழுந்த வேகத்தில் எடுத்ததால்?
இதுபற்றி மேலும் விவரிக்கையில், "நீர் ஆதாரத்தை கொண்ட, பூமிக்கு அப்பாற்பட்ட ஒரு விண்கல் ஐக்கிய இராச்சியத்தில் விழுந்தது இதுவே முதல் முறை ஆகும்..
..அரை கிலோ எடையுள்ள இந்த விண்வெளி பாறையானது, பூமியில் விழுந்த 12 மணி நேரத்திற்குள் விரைவாக மீட்டெடுக்கப்பட்டதால், பூமியில் உள்ள நீர் மற்றும் பொருட்களால் அது மாசுபடவில்லை" என்றும் ஆஷ்லே கிங் விளக்கம் அளித்துள்ளார்!

பூமியில் உள்ள நீர் எங்கிருந்து வந்தது?
கிரக அறிவியல் (Planetary science) தொடர்பான மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று - பூமியில் உள்ள நீர் எங்கிருந்து வந்தது? என்பதே ஆகும்!
அதற்கான வெளிப்படையான பதில் என்னவென்றால் - நம்பமுடியாத அளவிலான பனிக்கட்டிகளை கொண்டிருக்கும் வால்மீன்கள் அல்லது சிறுகோள்களிடம் இருந்து தான்!

இந்த இரண்டில் எது முக்கிய நீர் ஆதாரம்?
பூமிக்கு நீரை கொண்டு வந்ததில், எது முக்கிய பங்கு வகிக்கிறது? அதாவது எது முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்துள்ளது? வால்மீன்களா அல்லது சிறுகோள்களா? என்கிற விவாதத்திற்கு முடிவே இல்லை!
ஒருவேளை, குளோசெஸ்டர்ஷைரில் விழுந்த அரை கிலோ விண்கல், இது தொடர்பான தெளிவான பதிலை நமக்கு வழங்கலாம்!
Photo Courtesy: NASA, Wikipedia


Click it and Unblock the Notifications