ஏற்கனவே "வாய்க்கால் சண்டை" அமெரிக்காவிடம் வாயை கொடுக்கும் சீனா!
தைபே (தைவானின் தலை நகரம்) உடன் எந்த வகையிலும் இராணுவத் தொடர்புகளை கொண்டிருக்க கூடாது, வைத்திருந்தால் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
கடந்த திங்கள்கிழமை அன்று சீனா, இந்தியாவையும் சேர்த்து சில உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தது. ஏற்கனவே இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏகப்பட்ட "வாய்க்கால் சண்டை" இருக்கும் நிலைப்பாட்டில், சீனா ஏன், எதனால், எதற்காக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது?

புதிதாக ஒன்றுமில்லை, வழக்கமான பயம், போட்டி மற்றும் பொறாமை தான். ஆம் தைவான் நாட்டிற்கு நீர்மூழ்கிக் கப்பல்கல்களுக்கான தொழில்நுட்பங்களை அளிக்க கூடாது என்று சீனா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏன்? இதனால் சீனாவிற்கு என்ன சிக்கல் என்பதை விரிவாக காண்போம்.

அப்படி என்ன மிரட்டியது?
சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் "எச்சரிக்கை" மட்டுமல்ல ஒரு கட்டளையும் உள்ளது, அதாவது - பெய்ஜிங் (சீனாவின் தலை நகரம்) உடனான உறவு கொண்ட நாடுகள் ஆனது சீன கொள்கையின் கீழ் செயல்பட வேண்டும். தைபே (தைவானின் தலை நகரம்) உடன் எந்த வகையிலும் இராணுவத் தொடர்புகளை கொண்டிருக்க கூடாது, வைத்திருந்தால் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

பின்னணி என்ன?
கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான தைவான் நாட்டின் ஊடக அறிக்கை ஆனது, தைவானுக்கு அதன் சொந்த நீர்மூழ்கிக் கப்பல்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை கைமாற்றி கொள்ள அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறி இருந்தது. மற்றொரு அறிக்கையின் படி, இந்தியா உட்பட மொத்தம் ஆறு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆனது ஏற்கனவே தைவான் நாட்டிற்கான நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான வடிவமைப்பு திட்டங்களை முன்வைத்துள்ளன என்கிறது.

எந்தெந்த நாடுகள்?
2018 ஆம் ஆண்டில், தைவான் நாட்டின் ஊடக அறிக்கையில் வெளியான தகவலின் படி, ஐரோப்பாவில் இருந்து இரண்டு நிறுவனங்கள், அமெரிக்காவிலிருந்து இரண்டு நிறுவனங்கள், ஒரு இந்திய நிறுவனம் மற்றும் ஜப்பானிய நிறுவனம் தைவான் நாட்டிற்கான நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான வடிவமைப்பு திட்டங்களை முன்வைத்துள்ளன.

தைவானின் தந்திரம்!
அதே அறிக்கையில், மார்ச் மாத வாக்கிலே குறிப்பிட்ட வடிவமைப்பிற்கான ஒப்புதல் ஆனது தைவானின் அரசாங்கத்தை அடைந்து உள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட ஆறு நாடுகளின் பெயரை வெளியிட்ட தைவான் அந்நாடுகளின் நிறுவனங்களின் பெயரை வெளியிடவில்லை.

கடுப்பான சீனா!
இந்த தகவலை அறிந்த சீனா, சமீபத்தில் பெய்ஜிங்கில் நடந்த உத்தியோகபூர்வ சீன செய்தி ஊடகத்தின் வாயிலாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு விடை அளிக்கும் வகையில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஆன ஹுவா சுன்யிங், "தைவான் நாட்டுடன் ஆயுத விற்பனை நடத்தும் எந்தவொரு நாட்டையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது" என்று கூறியுள்ளார்.

இதை நேரடியான மிரட்டல் என்று வைத்து கொள்ளலாமா?
"தைவான் உடனான எந்த ஒரு இராணுவத் தொடர்பையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது, சீனா தீர்க்கமான மற்றும் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது, அமெரிக்காவும் மற்ற நாடுகளும், இந்த விடயத்தில் உள்ள உணர்வுகளையும், ஆபத்தையும் முழுமையாக அங்கீகரிக்கின்றன," என்று அவர் கூறினார்.

சீனாவிற்கு தைவான் மீது என் இவ்வளவு கடுப்பு?
சீனாவின் நிலப்பகுதியான தைவான் ஆனது கடந்த 1949 ஆம் ஆண்டில் பிரிந்து தனி நாடானது. அதில் இருந்து தைவான் உடன் தொடர்பு கொள்ளும் (ஆயுதம், ராஜ தந்திரம், உறவு, உடன்படிக்கை) எந்த ஒரு நாட்டையும் சீனா எச்சரித்து மற்றும் எதிர்த்து வருகிறது.

"தைவானுடன் இராணுவத் தொடர்புகளை வைத்து இருக்க கூடாது"
மேலும் ஹுவா கூறுகையில், "சீனாவுடன் உறவு வைத்திருக்கும் நாடுகள் சீனாவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், எந்தவொரு நாட்டின் நிறுவனமும் தைவான் நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் பங்கேற்க கூடாது, அதனுடன் எந்த ஒரு இராணுவத் தொடர்புகளை தைவானுடன் வைத்து இருக்க கூடாது. அவர்கள் (உதவும் நாடுகள்) தைவானுடனான பிரச்சினைகளை விவேகத்துடன் மற்றும் நல் முறையில் நடத்திக்கொள்ள வேண்டும்." என்று தெரிவித்து உள்ளார்.


Click it and Unblock the Notifications