நிலவின் இருண்ட பகுதிகளை ஆய்வு செய்ய விண்ணில் பறந்தது சீனாவின் செயற்கைக்கோள்.!
அறிவியல் ஆய்வு மற்றும் மனித குல வளர்ச்சிக்காக மட்டுமே இது போன்ற செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தி உள்ளதாக சீனா சொல்கிறது
கடந்த திங்கட்கிழமை, 21.05.2018 அன்று சீனா ஒரு செயற்கைக் கோளை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. நிலவின் இருண்ட பகுதிகளை ஆய்வு செய்து அது பற்றிய தகவல்களைப் பூமிக்கு அனுப்புவதுதான் இச் செயற்கைக் கோளின் பணி. மக்கள் சீனக் குடியரசின் (PRC) அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜிங்ஹூவா (Xinhua) செய்தி நிறுவனம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ராக்கெட் ஏவுதளமான ஜிஜாங் ஏவுதள மையத்திலிருந்து (Xichang launch centre) இந்தச் செயற்கைக் கோள் அதிகாலை நேரத்தில் ஏவப்பட்டதாக, சீனாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் (China National Space Administration) செய்திக் குறிப்பின் அடிப்படையில் ஜிங்ஹூவா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் “Long March-4C" என்னும் ராக்கெட் மூலமாக இந்தச் செயற்கைக் கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நிலவின் அந்தப் பக்கம் என்ன இருக்கும் ?!
"நிலவின் அறியப்படாத தொலைதூரப் பகுதிகளை ஆய்ந்து அது பற்றிய தகவல்களை உலகுக்குச் சொல்வதில் முன்னோடி நாடாகத் திகழ வேண்டும் என்கின்ற சீனாவின் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு இந்தச் செயற்கைக் கோள் முக்கியப் பங்காற்றும்" என்கிறார், இந்தத் தொடர்பு செயற்கைக் கோள் திட்டத்தின் மேலாளர், ஜாங் லிஹீவா (Zhang Lihua).

கியூகியாவோ…. சந்தோசப் பறவை
இந்தச் செயற்கைக் கோளுக்கு கியூகியாவோ (Queqiao) எனப் பெயரிடப்பட்டுள்ளது. சீன நாட்டுப்புறக் கதைகளில் வரும் மகிழ்ச்சியின் அடையாளமான "மேக்பி" (Magpie ) என்னும் பறவையைக் குறிக்கும் வகையில் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்பறவை, மனிதர்களின் அறியப்படாத எதிர்காலம் குறித்த நற்செய்திகளைக் குறி கேட்பவர்களுக்கு வெளிப்படுத்துவதைப் போல, நிலவின் அறியப்படாத பகுதிகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்த ஏவப்பட்டிருக்கும் சீனாவின் செயற்கைக் கோளுக்கு அப்பறவையின் பெயரைக் குறிக்கும் வகையில் பெயர் வைத்தது பொருத்தமாகத் தான் உள்ளது.

நாங்கதான் டாப்பு … சீனாவின் குறிக்கோள்..
கியூகியாவோ செயற்கைக் கோள் பூமியிலிருந்து 455,000 கி. மீட்டர் தூரத்தில் (282,555 மைல்) உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும். இவ்வளவு உயரத்தில் இருந்து இயங்கும் உலகின் முதலாவது செயற்கைக் கோள் இதுவாகத் தானிருக்கும். 2030 ஆம் ஆண்டுக்குள் விண்வெளி ஆய்வில் ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்கு வரும் முனைப்போடு சீனா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் தங்கி ஆய்வு செய்யக்கூடிய மையத்தை விண்வெளியில் நிறுவுவதற்கான ஏற்பாடுகளை அடுத்த ஆண்டு மேற்கொள்ள சீனா திட்டமிட்டள்ளது.


அமெரிக்காவின் அச்சம்
அறிவியல் ஆய்வு மற்றும் மனித குல வளர்ச்சிக்காக மட்டுமே இது போன்ற செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தி உள்ளதாக சீனா சொல்கிறது. ஆனால், விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமாக உலக நாடுகளுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதற்காகவே சீனா விண்வெளி ஆய்வில் இத்தனை ஆர்வம் காட்டுவதாக அமெரிக்க நாட்டின் பாதுகப்புத் துறை குற்றம் சுமத்துகிறது.


Click it and Unblock the Notifications